மகளை இயற்கைக்கு மாறான உறவுக்கு வற்புறுத்திய கணவன்! அவினாசி ரிதன்யாவின் தாய் கண்ணீர்
திருப்பூர்: திருப்பூரை அடுத்த அவிநாசியில் வரதட்சிணைக் கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட ரிதன்யா, அவருடைய கணவர் இயற்கைக்கு மாறான உறவுக்கு வற்புறுத்தியதாக, அவருடைய தாய் ஜெயசுதா பகீர் பேட்டி அளித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம், அவினாசி-கைகாட்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை (53), ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி ஜெயசுதா (42). இவர்களுக்கு ரிதன்யா என்ற மகள் இருந்தார். ரிதன்யாவுக்கும், திருப்பூர் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணனின் பேரன் கவின்குமாருக்கும் கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி திருமணம் நடந்தது.

திருமணமான நாள் முதலே கணவர், மாமனார், மாமியார் ஆகியோரின் வரதட்சிணைக் கொடுமையையும், கணவரின் பாலியல் துன்புறுத்தலையும் ரிதன்யா அனுபவித்து வந்ததாகச் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், இந்தக் கொடுமை குறித்துத் தனது பெற்றோரிடம் ரிதன்யா கூறியதாகத் தெரிகிறது. சமாதானப் பேச்சு நடத்துவதும், ரிதன்யாவை மீண்டும் கொடுமைப்படுத்துவதும் கவின்குமாரின் குடும்பத்திற்கு வாடிக்கையாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
இதனால் விரக்தியடைந்த ரிதன்யா, கடந்த 28ஆம் தேதி மாமியாரிடம் கோயிலுக்குச் செல்வதாகக் கூறிவிட்டு, தனது தந்தை சீதனமாகக் கொடுத்த காரை எடுத்துக்கொண்டு சேயூர் பகுதிக்குச் சென்றார். அங்கு ஓரிடத்தில் காரை நிறுத்திவிட்டு, தனது தந்தைக்கு 8 வாட்ஸ்அப் மெசேஜ்கள் அனுப்பிவிட்டு, பூச்சி மருந்தை குடித்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்த நிலையில், நீண்ட நேரமாகக் கார் ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்ததைக் கண்ட அப்பகுதி மக்கள் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து காரைத் திறந்து பார்த்தபோது வாயில் நுரை தள்ளியபடி ரிதன்யா இறந்துகிடந்தார்.
இதையடுத்து, போலீஸார் விசாரணையில் அவர் யார் என்ற விவரங்கள் தெரியவந்தது. தற்போது ரிதன்யாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கவின்குமார், ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் திருப்பூர் கிளைச் சிறையில் உள்ளனர். சித்ரா தேவியின் உடல்நிலையைக் காரணம் காட்டியதால் அவர் இன்னும் கைது செய்யப்படாமல் உள்ளார். இந்த நிலையில், இந்த வழக்கு குறித்து ரிதன்யாவின் தாய் ஜெயசுதா கூறியதாவது: "ரிதன்யா ஒரே பெண் என்பதால் அவரைச் செல்லமாக வளர்த்தோம்.
கவின்குமாரின் குடும்பம் பாரம்பரியமான குடும்பம் என்பதால், நகை, கார், பணம் எனச் செலவழித்து ஆடம்பரமாகத் திருமணம் செய்தோம். ஆனால், சைக்கோபோல கவின்குமார் ரிதன்யாவைத் துன்புறுத்தியுள்ளார். என் மகளை இயற்கைக்கு மாறான உறவுக்குக் கட்டாயப்படுத்தியுள்ளார். இதனால் ரிதன்யாவுக்குப் பல இடங்களில் ரத்தக் காயங்கள் இருந்தன.
இந்தத் துன்புறுத்தல் குறித்துத் தனது மாமியாரிடம் ரிதன்யா சொன்னபோதுகூட, 'அவன் அப்படித்தான், அனுசரித்துப் போ' எனச் சொல்லியிருக்கிறார். எங்களிடம் கூட சொல்லாமல், தாயைப்போல் மாமியாரை நினைத்ததால்தான் அவரிடம் சொன்னார். ஆனால், அவர் மகனைக் கண்டிக்காமல் எப்படிச் சொல்லியிருக்கிறார் பாருங்கள்.
அதுபோல், மாமனாரோ, 'என் மகனுக்குப் பிடித்த மாதிரி நடந்துகோ' எனச் சொல்லியிருக்கிறார். ஒரு மாமனார் பேசுகிற பேச்சா இது? திருமணம் முடிந்த இரு வாரங்களிலேயே தொழில் தொடங்கப் பணம் கேட்டார்கள். சரி, நாங்களும் நம் பிள்ளை சந்தோஷமாக இருக்குமே என்பதற்காக 6 மாதங்கள் கால அவகாசம் கேட்டிருந்தோம்.
கவின்குமார் வேலைக்குச் செல்லாமல் எந்த நேரமும் வீட்டுக்குள்ளேயே இருந்து கொண்டிருக்கிறார். அவர்களுக்கு வாடகையே 20 லட்சம் ரூபாய் வருவதால் எந்த வேலைக்கும் செல்லவில்லை. என் மகளின் தற்கொலைக்குக் காரணமான அந்தக் குடும்பத்தினருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்.
மாமியார் சித்ரா தேவியை ஏன் வெளியே வைத்திருக்கிறார்கள்? கவின்குமாருக்கு இன்னும் கொஞ்ச நாட்களில் ஜாமீன் கொடுத்துவிடுவார்கள். அவரும் வெளியே வந்து இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்வார்; அந்தப் பெண்ணின் வாழ்க்கையும் பாழாகும்.
எனவே, இதெல்லாம் நடக்காத வகையில் என் மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும். என் மகளுக்குச் சாப்பாடு போடாமல் பட்டினி போட்டுவிட்டு, கவின்குமாருக்கும், ஈஸ்வரமூர்த்திக்கும் வெளியே இருந்து உணவு கொண்டு வரப்படுகிறது. எனது நிலை எந்தத் தாய்க்கும் வரக் கூடாது. ஆண் பிள்ளைகளுக்கு நல்லதைக் கற்றுக்கொடுங்கள். வசதி வாய்ப்பு பார்க்காமல் நல்ல பையனுக்குத் திருமணம் செய்து கொடுங்கள்" என கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.
கோவை மத்தியச் சிறை அதிகாரிகள் கூறுகையில், "சிறையில் இருப்போருக்கு வெளியே இருந்து சாப்பாடு கொண்டுபோக வாய்ப்பில்லை. இது தவறான தகவல்" எனத் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications