ஆடு கூட இதை செய்யும்..ஆனா ‘அவங்க’ செய்யமாட்டாங்க..! இது தான் வர்ற நேரம்.. ஆக்ஷனில் இறங்கிய அண்ணாமலை
திருப்பூர்: தலைவர் இல்லாமல் இந்தியா கூட்டணி தத்தளித்து வருவதாகவும் பிரதமர் மோடியை தவிர யார் வந்தாலும் நாட்டை சீரழித்து விடுவார்கள் என தமிழக பாஜக தலைவரும் கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை கூறியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் கோவை தொகுதியில் முதன்முறையாக போட்டியிடும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே கால அவகாசம் இருக்கும் நிலையில் கோவை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்லடம் ரங்கநாதபுரத்தில் அங்கு திரண்டிருந்த பொதுமக்களிடையே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
செம்மறி ஆடுகள்: அப்போது பேசிய அவர்," மக்களிடையே நரேந்திர மோடி என்ற ஒரு மிகப்பெரும் தலைவர் இருக்கிறார். அவருக்கு மூன்றாவது முறையாக மீண்டும் ஒரு ஐந்து ஆண்டு காலம் வாய்ப்பு கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். காரணம் இந்தியா கூட்டணி தலைவர்கள் இல்லாமல் தத்தளித்துக் கொண்டே இருக்கிறது. ஒரு மந்தையில் 10 செம்மறி ஆடுகள் இருந்தால் கூட ஒரு வாரத்தில் தங்களுக்கான தலைவனையோ தலைமையையோ தேர்ந்தெடுத்து விட்டு அதற்குப் பிறகுதான் அடுத்த வேலையை பார்க்கும்.
பிரதமர் யார்?: ஆனால் இந்தியா கூட்டணியில் இதுவரை யார் பிரதமர் வேட்பாளர் யார் தலைவர் என தெரியாமல் அந்தக் கூட்டணி தத்தளித்து கொண்டிருக்கிறது. இது பிரதமருக்கான தேர்தல் எனவே யார் பிரதமர் என முன்வைத்து பாஜக தேர்தலை சந்திக்கிறது. ஆனால் இந்தியா கூட்டணியில் அந்த பிரச்சினை தான் ஓடிக்கொண்டிருக்கிறது. பிரதமருக்கான தேர்தலில் போட்டியிடுபவர் எப்படிப்பட்ட மனிதராக இருக்க வேண்டும். அவர் இந்தியாவை எப்படி வழிநடத்த போகிறார் என்பதற்காக தான் நாம் வாக்களிக்கிறோம்.
நாடு சின்னாபின்னமாகும்: மோடியை தவிர பிரதமராக வேறு யார் வந்து அந்த நாற்காலியில் அமர்ந்தாலும் நாடு என்னவாகும் என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.. அப்படி வேறு யாராவது வந்தால் இந்த நாடு சின்னாபின்னமாகி போய்விடும். இந்தியாவில் 100 நாள் வேலை திட்டத்திற்காக ஒரு நாள் சம்பளமாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை 170 ரூபாய் தான் கொடுக்கப்பட்டது. ஆனால் மோடி அரசாங்கம் அதனை 319 ரூபாயாக உயர்த்தி வழங்கி இருக்கிறது. 100 நாள் வேலைத்திட்டத்திற்கு மத்திய அரசுதான் முழு பணத்தையும் கொடுக்கிறது மாநில அரசோ, மு க ஸ்டாலினோ கொடுக்கவில்லை.
வாயில் வடை சுடும் திமுக: திமுகவினர் வெறும் வாயில் ஒரே ஒரு வரியில் பாஜகவை உள்ளே புகுந்து விடும் அவர்கள் வந்துவிடக்கூடாது என பேசுகிறார்கள். அதனை விளக்கும் வகையில் தான் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறோம். உண்மையிலேயே தமிழகத்தில் பாஜக, தேசிய ஜனநாயக கூட்டணி உள்ளே வர வேண்டிய நேரம் வந்துவிட்டது. இது நிச்சயம் மாற்றத்திற்கான நேரமாக இருக்கும். நிச்சயமாக ஒரு கட்சி நேர்மையான ஆட்சியை கொடுக்க முடியும் என்றால் அது பாஜக மட்டும் தான்.
பணம் கொடுத்து வாக்கு: தமிழகத்தில் திமுக 33 மாத காலமாக ஆட்சியில் இருக்கிறது. அதிகாரம், ஆள்பலம் என எல்லாமே திமுகவிடம் இருக்கிறது. இருந்தாலும் அவர்கள் பணத்தை கொடுத்து தான் தேர்தலை சந்திக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். அதுவும் காலை 4 மணிக்கு மின்தடையை ஏற்படுத்திவிட்டு வீடு வீடாகச் சென்று ஓட்டுக்கு ஆயிரம் ஐநூறு என கொடுக்கிறார்கள். 50 ஆண்டுகாலம் ஆட்சியில் இருக்கும் திராவிட கட்சிகளால் நேரடியாக தேர்தலை சந்திக்க முடியவில்லை. பணத்தை கொடுத்து தான் வாக்குகளை பெற வேண்டிய நிலையில் உள்ளனர்" என பேசினார்.












Click it and Unblock the Notifications