கோவை கார் சிலிண்டர் வெடிப்பு.. மத்திய அரசு தலையிட நேரிடும்.. சொல்கிறார் பாஜக சி.பி.ராதாகிருஷ்ணன்
திருப்பூர்: கோவையில் கோயில் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார் வெடித்து விபத்து ஏற்பட்ட விவகாரம் தொடர்பாக பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் திமுக அரசை சாடியுள்ளார்.
கோவையில் ஞாயிற்றுக்கிழமை காலை கோயில் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காரில் இருந்த கேஸ் சிலிண்டர் திடீரென வெடித்துச் சிதறியது. இதில் கார் இரு துண்டாகப் போனது.
இந்த சம்பவம் அதிகாலை நேரத்தில் நடந்ததால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. காரின் உள்ளே இருந்த நபர் மட்டும் உடல் கருகி உயிரிழந்தார்.
10 பேர் கை மாறி வந்த கார்.. ஓனரை கண்டுபிடிச்சாச்சு.. கோவை போலீஸ் கமிஷனர் வெளியிட்ட பரபர தகவல்!
சி.பி.ராதாகிருஷ்ணன்
இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் சிலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் இந்தச் சம்பவம் தொடர்பாகத் தமிழக அரசைச் சாடினார். திருப்பூர் வித்யாலயம் பகுதியில் உள்ள பாஜக மாவட்ட தலைமை அலுவலகத்தில் பாஜகவின் சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
ஈஸ்வரன் தான் காப்பாற்றினார்
அப்போது பேசிய அவர், "கோட்டையில் உள்ளவர்கள் தீவிரவாதிகள் செயல்களைக் கண்காணிக்கத் தவறிய நேரத்தில் கோட்டை ஈஸ்வரன் தான் மக்களைத் தீபாவளி சமயத்தில் காப்பாற்றி உள்ளார். டிஜிபி உடனே வருகிறார். அது பாராட்டுக்குரியது. மிகச் சிறந்த அதிகாரிகளை திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் நியமித்தார்கள். தமிழக காவல் துறை ஸ்காட்லாந்து யார்டு காவல் துறைக்கு இணையானது என்பதில் ஐயமில்லை.
தீவிரவாதம்
ஆனால் ஸ்காட்லாந்து யார்டு போலீசார் இங்கு வந்தாலும் இவர்களுக்கு அடிபணிந்து தான் இருக்கும் நிலை உள்ளது. தமிழக அரசு தீவிரவாத செயல்களை மூடி மறைக்கும் செயலில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசின் நடவடிக்கையால் காஷ்மீரில் பெரும் பகுதி அமைதி பூங்காவாக மாறி உள்ளது. தமிழகத்தில் தீவிரமான நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே தீவிரவாதத்தைத் தடுக்க முடியும்.
நடவடிக்கை தேவை
இஸ்லாமியத் தீவிரவாதத்தை எதிர்ப்பதற்குப் பதிலாக மூடி மறைக்கும் வேலையைச் செய்து வருகின்றனர். இது தீவிரவாதிகள் நடமாட்டத்தை அதிகரிக்கிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை தொடர்ந்தால் திமுக முற்றிலும் அழிந்துவிடும் என்பதை திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் உணர வேண்டும். எடுப்பார் கைப்பிள்ளையாகக் காவல் துறை இருக்கக் கூடாது. ஒளிவு மறைவு இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொருளாதாரம் சீர்குலையும்
கைப்பற்றப்பட்ட வெடி மருத்துகளை மக்கள் பார்வைக்குக் கொண்டு வந்து தீவிரவாதத்தை அடக்கி ஒடுக்குவது தான் தமிழகம் அமைதி பூங்காவாகத் தொடர ஒரே வழி. எவ்வளவு வெடி மருத்துகளைக் கைப்பற்றினோம் எனச் சொல்லாமல் மறைத்து வருகின்றனர். அதிகாரிகளுக்கு முழு சுதந்திரம் கொடுத்து விசாரணை நடைபெற வேண்டும். கோவையைக் குறிவைத்து நடக்கும் தாக்குதல்கள் இரண்டாவது பெரிய தொழில் நகரத்தைச் சீர்குலைத்தால் தமிழகத்தின் பொருளாதாரம் நிலை குலையும்.
மத்திய அரசு தலையிடும்
தமிழக அரசு முறையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் மத்திய அரசு இந்த சூழலைக் கண்காணித்து வருகிறது. முறையான நடவடிக்கை எடுக்கத் தவறினால் மத்திய அரசு தலையிடும் சூழல் ஏற்படும். பின்னர் மாநில சுயாட்சி என்ற என்று சொல்லக் கூடாது. தமிழக உளவுத்துறை கண்காணித்து இருந்தால் இதனை முளையிலேயே கிள்ளி எரிந்து இருக்கலாம். தமிழகத்தில் சாதகமான ஆட்சி உள்ளது எனத் தீவிரவாதிகள் செயல்பட்டு வருகிறார்கள். அப்படி இல்லை என்பதைத் தமிழக அரசு நிரூபிக்க வேண்டும்.
வெடிமருந்து
டிஜிபி முதலில் ஒன்றைச் சொன்னார். பின்னர் மாற்றிக் கூறுகிறார்... சிறிய சிறிய வெடிகுண்டுகளைத் தயாரிப்பதில் ஈடுபட்டார்கள் எனச் சொல்கிறார். ஏன் வெடி மருந்து அளவை வெளியிடத் தயக்கம் காட்டுகிறார்கள் எனப் புரியவில்லை. சுமார் 1.5 டன் வெடிமருந்து கைப்பற்றியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. திமுக அரசியலில் வெற்றி பெற வேண்டும் என்றால் தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும். வரலாற்றில் முன்பு செய்த தவறுகளை திமுக திருத்திக் கொள்ளாமல் இருப்பது வேதனை" என்று அவர் தெரிவித்தார்.