டெய்லர் பெண்ணை தாக்கிய பாஜக? ஜிஎஸ்டி பற்றி கேட்டா அடிப்பீங்களா? தேர்தல் ஆணையம் எங்கே? சீறும் சிபிஎம்
திருப்பூர்: தேர்தல் பிரசாரத்தில் ஜிஎஸ்டி குறித்து கேள்வி எழுப்பிய பெண்ணை பாஜகவினர் அவதூறாக பேசி, தாக்கியுள்ள சம்பவம் திருப்பூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஒரு வாரத்தில் தொடங்குகிறது. ஏப்.19ம் தேதி மாநிலம் முழுவதும் உள்ள 39 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் திருப்பூரில் பாஜகவினர் தங்களது வேட்பாளர் ஏ.பி.முருகானந்தத்தை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வருகின்னர். இந்நிலையில் பிரசாரத்தின் போது குறுக்கீடு செய்ததாக இளம் பெண் ஒருவர் மீது பாஜகவினர் தாக்குதல் தொடுத்திருக்கின்றனர். இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

இந்த விவகாரம் குறித்து சிபிஎம் மாநில குழு உறுப்பினர் சிந்தன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நேற்றிரவு இந்த சம்பவம் நடந்திருக்கிறது. ஆனால் வீடியோ வெளியான பின்னர்தான் இது குறித்து எல்லோருக்கும் தெரிய வந்திருக்கிறது. இப்பெண் தனியாக கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த பகுதிக்குள் பாஜக சார்பில் இரண்டு பேர் மட்டுமே நோட்டீஸ் கொடுத்துக்கொண்டு பிரசாரம் செய்திருக்கிறார்கள். அப்போது அப்பகுதி பெண்கள் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர்.
கேஸ் சிலிண்டர் விலை உயர்வு, ஜிஎஸ்டி குறித்து கேள்விகள் எழுந்திருக்கின்றன. பெண்களின் நலனை பாஜக பாதுகாப்பதாக சொல்கிறது, பின்னர் ஏன் நாப்கினுக்கு வரி போட்டீர்கள்? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். இப்படி கேள்வியெழுப்பியவர்களில் தற்போது பாதிக்கப்பட்டுள்ள பெண்ணும் ஒருவர். அங்கேயே வாக்குவாதம் நடக்கிறது. பல கேள்விகளை பாஜகவினர் திருப்பி கேட்டிருக்கிறார்கள். ஆனால் அங்கு மக்கள் சூழ தொடங்கியுள்ளனர். இதனையடுத்து பாஜகவினர் அங்கிருந்து நழுவிவிட்டனர்.
பின்னர் தங்களிடம் கேள்வியெழுப்பிய பெண் தனியாக கடையில் இருப்பதை பார்த்த பாஜகவினர், 10 பேராக சென்று அப்பெண்ணை தாக்கியுள்ளனர். மட்டுமல்லாது பொதுமக்கள் முன்னிலையில் வைத்து அப்பெண்ணை மிகவும் அவதூறாக பேசியுள்ளனர். இந்த கும்பல் சின்னசாமி என்பவரது தலைமையில் இந்த கொடூரத்தை அரங்கேற்றியுள்ளது.
மக்கள் கேள்வி கேட்டால் பதில் சொல்ல வேண்டியது கட்சிக்காரர்களின் கடமை. தேர்தல் களத்தில் எல்லா கட்சிகளும்தான் தேர்தலை எதிர்கொள்கிறது. ஆனால் மிரட்டினால் பெண்ணை பணிய வைத்துவிடலாம் என்று பாஜக நினைப்பது அநாகரீகம் மட்டுமல்லாது, கடும் கண்டனத்திற்குரியது. தேர்தல் ஆணையம் இதையெல்லாம் கவனிக்க வேண்டும். கைகட்டி இதையெல்லாம் வேடிக்கை பார்க்கிறது என்றால் என்ன தேர்தல் ஆணையம் அது?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேபோல தமிழக அமைச்சர் டிஆர்பி ராஜாவும் இந்த விவகாரம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது x சோஷியல் மீடியா தளத்தில், "முதலில் கோவையில் பாஜக வன்முறை. அடுத்து திருப்பூரில் கோழைத்தனமாக தன்னந்தனியாக நின்ற ஒரு இளம் பெண் மீது கொலைவெறித் தாக்குதல். கோவையில் பாஜகவுக்கு தோல்வி நிச்சயம் என்றதும் வன்முறை வெறியாட்டம் ஆட துவங்கியுள்ளது பாஜக. திருப்பூரிலும் ஒரு பெண்மணி ஜி.எஸ்.டி அநியாயங்கள் குறித்து துணிவாகவும் நேர்மையாகவும் கேட்டதற்கு பா.ஜ.க.வின் 5 தடியர்கள் சேர்ந்து அந்த இளம் பெண்ணை தாக்கியுள்ளனர்.
பொதுமக்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் இந்த அடாவடி அராஜகக் கூட்டம் அமைதியான கோவை-திருப்பூருக்கும் தமிழ்நாட்டுக்கும் தேவையா? சிந்தியுங்கள்" என பதிவிட்டுள்ளார். இச்சம்பவம் திருப்பூரில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications