அன்புமணி அண்ணனை நினைத்தால் வருத்தமா இருக்கு! பேத்தி எடுத்த வயதில் இப்படியா செய்வது? மோகன்ஜி வேதனை
திருப்பூர்: அன்புமணி அண்ணனை நினைத்தால்தான் வருத்தமாக இருக்கிறது. தனி நபரை விட இந்த சமூகம் மிகப் பெரியது என ராமதாஸ்- அன்புமணி விவகாரம் குறித்து இயக்குநர் மோகன்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இயக்குநர் மோகன்ஜி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது: விஜய் தற்போதுதான் நடிப்பை விட்டுவிட்டு அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். அவருக்கு நிச்சயமாக இந்த நெளிவு, சுளிவு எல்லாம் தெரியாது. இதற்கான விமர்சனங்களை நிறைய பார்த்துவிட்டார்.

இனி அடுத்தடுத்து, தலைவர்களுக்கு மரியாதை கொடுத்து பேசுவார். எல்லாரையும் விமர்சனம் செய்யலாம். ஆனால் மரியாதையுடன் செய்ய வேண்டும். விஜய் சாரை எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால் இந்த பேட்டி வாயிலாக, அரசியல் தலைவர்களுக்கு மரியாதை கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
கம்யூனிஸ்ட் அலுவலகம்
கம்யூனிஸ்ட் அலுவலகங்களில் காதல் திருமணம் செய்ய அனுமதி குறித்து கேட்கிறீர்கள், அவர்கள் சித்தாந்தத்தின் அடிப்படையில் கூறுகிறார்கள். ஆனால் நாம் பெற்றோர் பக்கம்தான் நிற்க முடியும். நாம் காதலுக்கு எதிரி இல்லை. ஆனால் பெற்றோரின் ஆதரவுடன்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும். பெரியவர்களுக்கு தெரியாத நல்லது, கெட்டது இல்லை. பெற்றோரை திருப்திப்படுத்தி உங்கள் காதலை நிறைவேற்றிக் கொள்ளுங்கள் என இளைஞர்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.
ஆணவப் படுகொலை
ஆணவப் படுகொலை என்பது தவறான விஷயம். கவின் படுகொலைக்கு நான் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். நான் சொல்ல வருவது, பெற்றோரை இந்த அளவுக்கு கொண்டு போகாதீர்கள். இதனால் எல்லாருடைய வாழ்க்கையும் வீணாக போகும். முடிந்த அளவுக்கு பெற்றோரை சமாதானப்படுத்தி காதல் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ள வையுங்கள்.
பொறுமை இல்லை
பெற்றோரும் உடனே ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்பதால் பொறுமை காக்க வேண்டும். பொறுமையுடன் காதலிக்க வேண்டும். பொறுமையில்லாமல் கல்யாணம் செய்துக் கொண்டால், பிற்காலத்தில் உங்களுக்கு மனவருத்தத்தை கொடுக்கும்.
திரௌபதி 2
கடந்த இரு நாட்களுக்கு முன்பு விநாயகர் சதுர்த்தி அன்று திரௌபதி 2 திரைப்படம் பற்றி அறிவிப்பு வெளியிட்டோம். ஆழ்கடல் வீடியோவிற்கு மக்கள் பேராதரவு கொடுத்துள்ளார்கள். திரௌபதி முதல் பாகம் பெற்ற வெற்றியை விட இந்த பாகம் 10 மடங்கு வெற்றிப்பெறும்.
விமர்சனங்கள்
சமூகவலைதளங்களில் மருத்துவர் அய்யா குறித்து நிறைய விமர்சனங்கள் வருகின்றன. எப்போதும் தனிமனிதனை விட இந்த சமூகம் மிகப் பெரியது. சமூகத்திற்கு அவர் செய்த நல்லதையும் தாண்டி இன்று அவரை, நிறைய பேர் தப்பு தப்பாகதான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு காரணம் தனிமனிதனின் செயல்தான்.
பெரியவர்
சமுதாயத்தை யாரும் பழித்து பேசக் கூடாது. அவர் மிகப் பெரியவர். அந்த எண்ணம் எல்லாருக்கும் இருக்க வேண்டும். மறுபடியும் சொல்றேன் தனி நபரை விட இந்த சமூகம் மிகப் பெரியது. அது நல்லது செஞ்சா கொண்டாடும், கெட்டது செஞ்சா தூக்கி போட்டு மிதிக்கும். இது எல்லாருக்கும் பொருந்தும்.
மனவருத்தம்
எல்லாருக்குமே மனவருத்தம் இருக்கும். நம் வீட்டிலேயே பெரியவர் இப்படியெல்லாம் செய்தால் எப்படி இருக்கும்? அதே மனநிலைதான் இருக்கிறது. அன்புமணி அண்ணனுக்கும் அதே மனநிலைதான் இருக்கும் என நம்புகிறேன். அவரை நினைத்தால் எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு. அவரது மனநிலையில் இருந்து பார்த்தால் இது மிகவும் வருத்தத்திற்குரிய செயல்!
அன்புமணி அண்ணன்
அன்புமணி அண்ணனின் மகள்களுக்கு திருமணமாகி பேத்தி இருக்கிறார்கள். அந்த வயதில் இருக்கும் மகனுக்கு இந்த விஷயம் எத்தனை வலியை கொடுக்கும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த நேரத்தில் நான் அன்புமணிக்குத்தான் ஆதரவாக இருக்கிறேன். இவ்வாறு மோகன்ஜி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications