எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி எப்போ வரும்னு மக்கள் ஏங்குறாங்க.. பூரித்து சொன்ன பொள்ளாச்சி ஜெயராமன்!
திருப்பூர்: அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நிச்சயம் நடைபெறும் என்றும் கட்சியின் ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுவார் எனவும் சட்டமன்ற முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை ஒற்றைத் தலைமையாக தேர்வு செய்ய திருப்பூர் மாநகர அதிமுக சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.
இதுகுறித்து தமிழ்நாடு சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார்.

ஒற்றைத் தலைமை தேவை
அப்போது பேசிய அவர், "தற்போது அதிமுக சிறப்பாக செயல்பட்டு கொண்டிருந்தாலும், ஜெயலலிதா, எம்ஜிஆர் காலத்தில் இயங்கியதை போன்று வேகமாகவும் சிறப்பாகவும் செயல்பட வேண்டும். கட்சியை அவ்வாறு கொண்டு செல்வதற்காகவே அதிமுகவுக்கு ஒற்றை தலைமை தேவை என்கிற முடிவை நாம் எடுத்து இருக்கிறோம். எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஜெயலலிதாவிடம் நன்கு பயிற்சி பெற்றவர்.

ஒற்றைத் தலைமை எடப்பாடி
கடந்த நான்கரை ஆண்டுகாலம் தமிழ்நாட்டில் நல்லாட்சியை வழங்கி கட்சியையும் கட்டிக்காத்த எடப்பாடி பழனிசாமிதான் அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக வர வேண்டும் என நாங்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கையெழுத்திட்ட பிறகுதான் அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.

பொதுக்குழு நிச்சயம் கூடும்
பொதுக்குழு கூட்டம் நிச்சயம் நடைபெறும். அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுவார். யாரையும் புறக்கணிக்க வேண்டும் என்ற திட்டம் எதுவுமில்லை. ஒரே தலைமை இருக்க வேண்டும் என்பதாலேயே இந்த முடிவை எடுத்து இருக்கிறோம். நாம் எம்ஜிஆர் காலத்திலிருந்தே கட்சியில் இருப்பவன். கட்சியின் முக்கிய தீர்மானங்கள் யாவும் பொதுக்குழுவில்தான் கொண்டு வரப்பட்டன.

எடப்பாடி ஆட்சிக்கு மக்கள் ஏங்குகிறார்கள்
கட்சியில் அதிகாரம் கொண்ட அமைப்பு பொதுக்குழுதான். இன்றைய சூழலுக்கு வலுவான தலைமை தேவை. எதிர்காலத்தில் திமுகவை எதிர்த்து நல்லாட்சி தரக்கூடிய சிறந்த தலைமை மக்களின் அன்பை பெற்ற எடப்பாடி பழனிசாமிதான். மக்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி ஆட்சி வர வேண்டும் என்று ஏங்கிக்கொண்டு இருக்கிறார்கள். பொதுக்குழுவில் 100 சதவீதம் பேரும் எடப்பாடி பழனிசாமியைதான் தலைவராக தேர்வு செய்ய உள்ளோம்.
Recommended Video

ஓபிஎஸும் எங்கள் அண்ணன்
ஓபிஎஸ், இபிஎஸுக்கு அதிகாரத்தை கொடுத்தது அடிமட்ட தொண்டன்தான். தொண்டர்களின் விருப்பத்தை நிறைவேற்றவே பொதுக்குழுவை கூட்ட இருக்கிறோம். இது யாரையும் அவமானப்படுத்துவதற்காக நடத்தப்படவுல்லை. இருவருமே எங்களுக்கு அண்ணன்தான். ஒற்றைத்தலைமை என்று வந்தால்மட்டும் அது எடப்பாடி பழனிசாமியாகவே இருப்பார்." என்றார்.












Click it and Unblock the Notifications