நான் ஏன் பாஜகவில் இணைந்தேன்?.. ஜெயலலிதாவுக்கு பிரதமர் மோடியை பிடிக்கும்! அதனால்.. மாணிக்கம் பேட்டி
திருப்பூர்: ஜெயலலிதாவுக்கு பிரதமர் மோடியை பிடிக்கும். அதனால் பாஜகவில் இணைந்தேன் என அதிமுகவிலிருந்து கட்சி தாவிய மாணிக்கம் பேட்டி அளித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டை தலைமையகத்தில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நடந்தது. சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து அதிமுக நிர்வாகிகளிடையே இருவேறு கருத்துகள் நிலவி வரும் நிலையில் இந்த கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.
இந்த நிலையில் அதிமுகவின் தலைமை வலிமையாக இல்லை என்றும் சசிகலாவை கட்சியில் சேர்க்க வேண்டும் என்றும் ராமநாதபுரம் முன்னாள் எம்பி அன்வர் ராஜா வலியுறுத்தியுள்ளார்.

சிவி சண்முகம்
இதற்கு முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் உள்ளிட்டோர் கடுமையான எதிர்ப்பை தெரிவித்ததால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது போல் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து கருத்து தெரிவித்திருந்தார். அது போல் அதிமுகவை வழிகாட்டு குழுதான் வழி நடத்த வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

சூடான விவாதங்கள்
இவ்வாறு அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் சூடான விவாதங்கள், சலசலப்புகள், பரபரப்புகள் நடந்து வந்த நிலையில் மதுரை சோழவந்தான் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் பாஜகவில் இணைந்தார். திருப்பூர் பாஜக செயற்குழு கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் மாணிக்கம் இணைந்தார்.

அதிமுக வழிகாட்டு குழு
இவர் ஓபிஎஸ்ஸின் ஆதரவாளர் என சொல்லப்படுகிறது. இவர் அதிமுகவை வழிநடத்த ஏற்படுத்தப்பட்ட வழிகாட்டு குழுவிலும் இடம் பெற்றிருந்தார். 2021 ஆம் தமிழக சட்டசபைத் தேர்தலில் சோழவந்தான் தொகுதியில் போட்டியிட்டு அவர் தோல்வியை சந்தித்தார். பாஜகவில் இணைந்த மாணிக்கம் செய்தியாளர்களை சந்தித்தார்.

முக்கிய நபர்
அவர் கூறுகையில் ஜெயலலிதாவின் ஆட்சி கடந்த 5 ஆண்டுகளாக சிறப்பாக நடைபெற முக்கிய காரணமாக இருந்தவர் பிரதமர் மோடி. அவர் ஜெயலலிதாவின் அன்பை பெற்றவர். ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்த நபர் மோடி. அதனால்தான் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த பாஜகவில் இணைந்தேன் என மாணிக்கம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications