தர்பூசணியில் நிறமி சேர்ப்பா? டிஷ்யூ பேப்பர் + ஒரு டம்ளர் தண்ணீர் போதுமே! ஈஸியாக கண்டுபிடிச்சுடலாம்!
திருப்பூர்: தர்பூசணி பழங்களில் ரசாயனம் கலந்த நிறமிகள் சேர்க்கப்பட்டுள்ளனவா என்பதை எப்படி பார்க்கலாம் தெரியுமா? இதற்கு ஒரு டிஷ்யூ பேப்பரும், தண்ணீரும் போதும்! பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உணவு பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், திருப்பூர் மாநகராட்சிகளில் இன்று காலை முதல் கோடைக்கால பழங்களான தர்ப்பூசணி பழத்திற்கான ஆய்வுகளை மேற்கொண்டிருந்தோம்.

இந்த ஆய்வில் ரசாயனம், நிறமிகள் சேர்க்கப்பட்டுள்ளனவா என பார்த்தோம். இதை பொதுமக்கள் கண்டுபிடிப்பது எளிதுதான். தர்பூசணி பழத்தை வாங்கும் போதோ அல்லது தர்பூசணி பழத்துண்டுகளை வாங்கும் போதோ அதில் டிஸ்யூ பேப்பரை கொண்டு ஒத்தி எடுத்தல் வேண்டும்.
அப்போது நிறமிகள் இருந்தால் அந்த பேப்பரில் ஒட்டிக் கொள்ளும் அதை வைத்து இந்த பழத்தில் நிறமி கலந்திருக்கிறார்கள் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். ஒரு கண்ணாடி பாட்டிலில் தண்ணீர் நிரப்பி அதில் தர்பூசணி துண்டை எடுத்து போட்டால் அதில் கலர் பிரிந்து வரும்.
தண்ணீரும் நிறம் மாறிவிடும். இப்படியானால் அந்த பழத்தில் ரசாயனம் கலந்திருப்பதாக அர்த்தம். நேற்றைய தினம் பல்லடத்தில் 1100 கிலோ அளவிலான பழங்களில் நிறமி சேர்க்கவில்லை. ஆனால் அவை அழுகிய பழங்களாக இருந்தன. அவற்றை பறிமுதல் செய்து நகராட்சியிடம் கொடுத்து அழித்துவிட்டோம்.
அது போல் இன்று திருப்பூரில் சோதனை செய்த போதும் நிறமிகள் சேர்த்த பழம் ஏதும் கிடைக்கவில்லை, மாறாக 60 கிலோ அழுகிய பழங்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்தோம். இது தொடர்பான ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு அந்த பெண் அதிகாரி தெரிவித்திருந்தார்.
தர்பூசணி பழத்தில் சிகப்பு நிறம் வர வேண்டும் என்பதற்காக நிறமிகள் சேர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்ததாக புகார்கள் எழுந்தன. இது குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
தர்பூசணி நன்கு பழுக்கும் சீசன் ஏப்ரல், மே மாதங்களில்தானாம். ஆனால் அதற்குள்ளாகவே தற்போது பெரும்பாலான இடங்களில் பழங்கள் விற்பனைக்கு வந்துவிட்டன. காயாக இருக்கும் பழங்கள் வெள்ளையாக இருக்கும். இதை பழுத்தது போல் மாற்ற பிங்க் நிற நிறமிகள் சேர்க்கப்படுவதாக சொல்லப்பட்டது. இது குறித்து ஆய்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications