பிரதமரே! பிரதமரே! தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? திருப்பூரில் கறுப்பு கொடியுடன் விவசாயிகள் போராட்டம்!
திருப்பூர்: 2019 லோக்சபா தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததைக் கண்டித்து பிரதமர் மோடி வருகைக்கு எதிராக திருப்பூர் அவிநாசிபாளையத்தில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கறுப்பு கொடி போராட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இன்றும் நாளையும் பிரதமர் மோடி சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். கேரளாவில் இருந்து இன்று பிற்பகல் திருப்பூர் வருகை தரும் பிரதமர் மோடி, மாலையில் பல்லடம் பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, என் மண் என் மக்கள் என்ற பெயரில் பாதயாத்திரை நடத்தி வந்தார். இந்த பாதயாத்திரையின் நிறைவு விழாவாக பல்லடம் பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல்லடம் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தலைவர்களான ஜிகே வாசன், ஜான் பாண்டியன், பாரிவேந்தர் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர். இதனையொட்டி திருப்பூர் பல்லடத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து சிறை தண்டனை விதித்து வருவதை தடுக்க வலியுறுத்தியும் இலங்கை சிறைகளில் இருந்து தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரியும் மோடிக்கு எதிராக கறுப்பு கொடி போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை அறிவித்திருந்தார். இதனடிப்படையில் பிரதமர் மோடிக்கு எதிராக கறுப்பு கொடி போராட்டத்தை முன்னெடுத்த காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன்குமார் கைது செய்யப்பட்டு வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும் திருப்பூர் அருகே அவிநாசிபாளையம் அழகுமலை பிரிவில் இன்று திடீரென 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைகளில் கறுப்பு கொடி, பலூன்களில் ஒன்று திரண்டனர். 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை என கறுப்பு கொடிகளுடன் விவசாயிகள் முழக்கம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தின் போது கறுப்பு பலூன்களையும் விவசாயிகள் பறக்கவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து மோடிக்கு எதிராக கறுப்பு கொடி போராட்டம் நடத்திய 100க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications