திருப்பூர் திருமூர்த்தி மலையில் கடும் வெள்ளப்பெருக்கு.. கோயிலை முற்றிலும் சூழ்ந்த வெள்ள நீர்.. வீடியோ
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி மலையில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. புகழ் பெற்ற திருமூர்த்தி மலை கோயில் வளாகத்தை வெள்ளநீர் சூழ்ந்ததால் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக பஞ்சலிங்க அருவியிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. காட்டாற்று வெள்ளம் திருமூர்த்தி மலையில் பாய்ந்தோடும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையிலிருந்து தெற்கே 23 கி.மீ. தூரத்தில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது திருமூர்த்தி மலை அருள்மிகு அமணலிங்கேசுவரர் திருக்கோயில். இந்த கோயில் மலை அடிவாரத்திலிருந்து 900 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பஞ்சலிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் ஏராளமானோர் வந்து செல்வார்கள். அமணலிங்ககேஸ்வரர் என்ற பாறையில் மும்மூர்த்திகளின் உருவங்கள் வடிக்கப்பட்டுள்ளன. பாறையைக் குடைந்து கருவறை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த கோயிலில் பிரம்மன், சிவன், விஷ்ணு உற்சவ மூர்த்திகளாக கருவறையில் காட்சி தருகிறார்கள்.

இங்குள்ள எட்டுக்கால் மண்டபத்தில் தான் மும்மூர்த்திகளும் வந்து தங்கியதாக நம்பப்படுகிறது. இங்கு மகா சிவராத்திரியன்று விஷேசமான நாள் ஆகும். இது தவிர ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுது வழக்கம். இதுதவிர வாரம் தோறும், ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 12-2.30 மணிவரை சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம் ஆகும். இந்த கோயில்காலை 6.30 மணியிலிருந்து மாலை 6.30 வரை தொடர்ச்சியாக கோயில் திறந்திருக்கும்.
இன்று மதியம் #திருப்பூர் மாவட்டம் #மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக திருமூர்த்தி மலை அடிவாரத்தில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீர். pic.twitter.com/NXd6GA8uFZ
— Kalyanasundaram (@kalyanasundarsv) August 19, 2024
இங்கு திருமூர்த்தி மலை அருவி (பஞ்சலிங்க அருவி), திருமூர்த்தி மலை கோவில் (அமணலிங்கேஸ்வரர் கோவில்), திருமூர்த்தி மலை அணை ஆகியவை உள்ளன. இந்த அருவிக்கு குளிக்க ஏராளமான மக்கள் வருவார்கள். இதேபோல் சாமி தரிசனம் செய்யவும் ஏராளமானோர் வருகை தருவார்கள். இந்நிலையில் உடுமலைப்பேட்டை அதன் சுற்றுவட்டார மலைப்பகுதிகளில் நேற்று இரவும் இன்று காலையும் கனமழை பெய்தது. இதனால் திருமூர்த்தி மலையில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும் திருமூர்த்தி மலை கோயில் வளாகத்தை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. பஞ்சலிங்க அருவியிலும் நீர்வரத்து கடுமையாக அதிகரித்துள்ளது. இதனால் அசம்பாவிதங்களை தடுக்க போலீசார் கோயிலுக்கு செல்ல தடை விதித்துள்ளனர். இதனிடையே காட்டாற்று வெள்ளம் திருமூர்த்தி மலையில் பாய்ந்தோடும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications