திருப்பூர் துரைசாமிக்கு எதிராக சீறிய மதிமுக திருப்பூர் மாவட்டச் செயலாளர்! பொறுமை காக்கச் சொன்ன வைகோ!
திருப்பூர்: மதிமுக அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமிக்கு எதிராக மதிமுக திருப்பூர் மாவட்டச் செயலாளர் நாகராஜன் சீறியிருக்கிறார்.
தன்னை போன்ற மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் வைகோவின் பின்னால் தான் இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
மதிமுகவை திமுகவுடன் இணைத்துவிடலாம் எனக் கூறி வைகோவுக்கு திருப்பூர் துரைசாமி கடிதம் எழுதிய நிலையில், இன்று முழுவதும் டாக் ஆஃப் தி டவுனாக மதிமுக மாறியிருக்கிறது.

துரை வைகோவை சின்னப்பையன் என்றும் தாம் வைகோவுக்கு மட்டுமே பதிலளிப்பேன் எனவும் திருப்பூர் துரைசாமி பிடிவாதம் பிடித்து வரும் நிலையில் மதிமுக திருப்பூர் மாவட்டச் செயலாளர் நாகராஜனிடம் தொலைபேசி மூலம் பேசிய வைகோ அவரை அமைதி காக்கச் சொல்லியிருக்கிறார்.
இருப்பினும் தனது ஆதங்கத்தை செய்தியாளர்களிடம் கொட்டித்தீர்த்த மதிமுக திருப்பூர் மாவட்டச் செயலாளர் நாகராஜன், திருப்பூர் துரைசாமிக்கு அவரது சொந்த வார்டிலேயே எந்த மரியாதையும் கிடையாது எனக் கூறியிருக்கிறார்.
சொந்த வார்டில் மதிமுகவில் எத்தனை பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என்பது கூட துரைசாமிக்கு தெரியாது என்றும் இன்னும் சொல்லப் போனால் அவரது பின்னால் 4 பேர் கூட கிடையாது எனவும் கோபத்தை கொட்டியிருக்கிறார்.
துரை வைகோ வருகைக்கு பிறகு தான் மதிமுகவில் உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது என்றும் குறிப்பாக திருப்பூர் மாவட்டத்தில் இருந்த 28 அமைப்புகள் 48 அமைப்புகளாக உயர்ந்தது எனவும் தெரிவித்தார்.

மதிமுகவில் போலி உறுப்பினர்கள் என்று திருப்பூர் துரைசாமி கூறியிருப்பது முற்றிலும் தவறானது என்றும் கட்சியை அவமரியாதை செய்திருக்கிறார் எனவும் சாடினார்.
தன்னை போன்ற மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் வைகோவின் பின்னால் தான் இருப்பதாகவும், 30 ஆண்டுகளாக வைகோவை பயன்படுத்தி வளர்ச்சி அடைந்துவிட்டு இப்போது குறை கூறுகிறார் எனக் கூறினார்.
கடந்த சட்டசபைத் தேர்தலின் போது மதிமுக வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட எதிர்ப்பு தெரிவித்தவர் திருப்பூர் துரைசாமி என்றும் இப்போது என்னவென்றால் மதிமுகவை திமுகவுடன் இணைக்கலாம் என்கிறார் எனவும் நாகராஜன் கோபம் கொப்பளிக்கக் கூறினார்.












Click it and Unblock the Notifications