மனு கொடுத்த அரை மணி நேரத்தில் குடிநீர் இணைப்பு! மாற்றுத்திறனாளியை மனம் குளிர வைத்த அமைச்சர்!
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் கருக்குப்பாளையம் கிராமத்தில், தன்னிடம் மாற்றுத்திறனாளி மனு கொடுத்த அரை மணி நேரத்தில் அவரது வீட்டுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கி மனம் குளிர வைத்துள்ளார் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன்.
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஒன்றியத்துக்குட்பட்ட கருக்குபாளையத்தில் பகுதி நேர நியாய விலை கடையை திறந்து வைப்பதற்காக சென்ற அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதனிடம், மாற்றுத்திறனாளி தங்கராஜ் என்பவர் மனு ஒன்றை கொடுத்திருக்கிறார். அந்த மனுவை ஆன் தி ஸ்பாட்டிலேயே படித்து பார்த்த அமைச்சர், அங்கிருந்தவாறே அடுத்த நொடியே உத்தரவு போட்டார்.

இதையடுத்து ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் பிரேமலதா மனு கொடுத்த மாற்றுத்திறனாளி தங்கராஜ் இல்லத்தை பார்வையிட்டு அடுத்த அரை மணி நேரத்திற்குள்ளாக தனி நபர் இல்ல குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுத்தார்.
பணிகள் கடகடவென முடிக்கப்பட்டு குழாய் பொருத்தப்பட்டு அதில் தண்ணீரும் வந்ததால் மாற்றுத்திறனாளி தங்கராஜ், தனது கோரிக்கை மனு மீது உடனடி ஆக்ஷன் எடுத்த அமைச்சர் சாமிநாதனுக்கு உணர்ச்சிகள் பொங்க நன்றி கூறினார்.
அதேபோல் அந்த ஊரைச் சேர்ந்த இன்னும் சிலர் கொடுத்த மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த அவர் அதனை உரிய அலுவலர்களுக்கு அனுப்பி தீர்வு காண உத்தரவிட்டார். அமைச்சர் சாமிநாதனை பொறுத்தவரை ஊரில் இருந்தார் என்றால் தனது காங்கேயம் தொகுதியில் உள்ள கிராமங்களை ஒரு ரவுண்டு அடித்துவிடுவார்.
பொதுவிடங்களில் அமைச்சர்கள் பலரும் கண்ணியம் குறைவாக பேசி சர்ச்சைகளில் சிக்கி வரும் நிலையில் அமைச்சர் சாமிநாதன் அதில் கவனமாக இருக்கக் கூடியவர்.












Click it and Unblock the Notifications