"தாமரை ஸ்டைல் மேடை.." தமிழகம் வந்தார் பிரதமர் மோடி.. திருப்பூர் பொதுக்கூட்டத்தில் உற்சாகம்
திருப்பூர்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பொதுக்கூட்டம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இரண்டு நாள் பயணமாகப் பிரதமர் மோடி இன்று தமிழகம் வந்தார். திருப்பூர் மாவட்டம் பாதப்பூர் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.
தமிழ்நாட்டில் பாஜகவை வளர்க்க அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற யாத்திரையை நடத்தி வருகிறார். இந்த யாத்திரையின் இறுதி நிகழ்வு இன்று திருப்பூர் பல்லடம் அருகே உள்ள மாதப்பூரில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதில் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த யாத்திரை நிகழ்ச்சி உட்பட பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளப் பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று தமிழகம் வர திட்டமிடப்பட்டது.
தமிழகமே வியக்கும் வகையில் மிகப் பெரியளவில் இந்த பொதுக்கூட்டத்தை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. மாதப்பூர் கிராமத்தில் 1000 ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்ட மைதானத்தைத் தயார் செய்துள்ளனர். இதுவரை இல்லாத வகையில் தமிழகத்தில் பாஜக சார்பில் நடந்த மிகப் பெரிய பொதுக்கூட்டமாக இது இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இதற்காக இன்று மதியம் 2 மணியளவில் பிரதமர் மோடி சிறப்பு விமானம் மூலம் கோவை சூலூர் விமான நிலையம் வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பல்லடம் சென்றார். அதன்பிறகு விழா மேடைக்கு திறந்த வாகனத்தில் பிரதமர் மோடி ஊர்வலம் போல் சென்றார். பிரதமர் மோடியுடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல் முருகன் உள்ளிட்டோர் நின்றனர்.
பிரதமர் மோடி வாகனத்தில் நின்றபடி தொண்டர்களை நோக்கி கையசைத்தார். தொண்டர்கள் மலர்களை தூவி பிரதமர் மோடியை வரவேற்றனர். அதன்பிறகு பிரதமர் மோடி பொதுக்கூட்ட மேடைக்கு சென்று சிறப்புரை ஆற்றுகிறார். இந்த மேடை தாமரை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
பொதுக்கூட்டத்தை முடிக்கும் பிரதமர் மோடி அங்கிருந்து மதுரை செல்கிறார். மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கும் மோடி, இன்றிரவு மதுரையில் தங்குகிறார். அப்போது அவர் தமிழக பாஜக நிர்வாகிகளையும் சந்திக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து நாளை தூத்துக்குடிக்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கு பல்வேறு நலத் திட்டப்பணிகளை ஆரம்பித்து வைக்கிறார். தொடர்ந்து நெல்லையில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி அங்கிருந்து கேரளா செல்கிறார்.
பிரதமர் மோடி தமிழகம் வரும் நிலையில், இதனால் கோவை, திருப்பூர், மதுரை, நெல்லை பகுதிகளில் தீவிர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீசாரும் தங்கள் ரோந்து பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக முதலில் பொதுக்கூட்டம் நடைபெறும் திருப்பூரில், பல அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 6000 முதல் 10000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.
பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு கோவையில் முக்கிய ரூட்களில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், பிரதமர் மோடியின் வருகை காரணமாக மதுரையில் இன்றும் நாளையும் டிரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications