3ஆம் உலக போரை தடுக்கும் ஒரே தலைவர் பிரதமர் மோடி தான்.. அடுத்த 5 ஆண்டுகளில் பாருங்க.. அண்ணாமலை பேச்சு
திருப்பூர்: சர்வதேச அளவில் போர் ஏற்படும் சூழல் உருவாகி இருக்கும் நிலையில், அதைத் தடுக்கக் கூடிய ஒரே தலைவர் மோடி தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடக்கிறது. இதனால் நாளை மாலையுடன் தமிழ்நாட்டில் பிரச்சாரம் ஓய்கிறது. இதன் காரணமாக அனைத்து கட்சிகளும் மிகத் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.

இதற்கிடையே திருப்பூரில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, உலகப் போர் ஏற்பட்டால் அதைத் தடுக்கக்கூடிய ஒரே தலைவர் மோடி என்று பேசினார்.
அண்ணாமலை: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அய்யம்பாளையம் பகுதியில் மின்சார கட்டண உயர்வு போராட்டத்திற்காக உயிர் நீத்த விவசாயிகள் சுப்பையா, முத்துக்குமாரசாமி ஆகியோர் நினைவிடத்தில் அண்ணாமலை அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், 3ஆம் உலகப் போரைத் தடுக்கும் திறன் கொண்ட ஒரே தலைவர் பிரதமர் மோடி தான் என்றார்.
அப்போது இவிஎம் முறைப்படி தேர்தல் நடத்துவது முறைகேட்டுக்கு வழிவகுப்பதாக எழுந்துள்ள விமர்சனம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "அமெரிக்கா தான் நம்மைப் பார்த்து வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு வர வேண்டும்.. நாம் தொழில்நுட்பத்தில் முன்னேறி இருக்கிறோம். இதனால் நாம் யாரும் இந்த விவகாரத்தில் மற்றவர்களைப் பின்பற்றத் தேவையில்லை" என்றார்.
பெட்ரோல், டீசல் விலை: பெட்ரோல், டீசல் ஆகியவற்றை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருவீர்களா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், "மத்திய அரசு இதுவரை பெட்ரோல், டீசல் விலையை 15 ரூபாய் வரை குறைத்துள்ளது. ஆனால், மாநில அரசு கடந்த தேர்தல் சமயத்தில் 5 ரூபாய் வரை குறைப்பதாக வாக்குறுதி அளித்தார்கள். அது என்ன ஆனது என்று முதலில் போய் கேட்க வேண்டும்" என்று விமர்சித்துப் பேசினார்.
உலக தலைவர் மோடி: இஸ்ரேலை ஈரான் தாக்கியுள்ள நிலையில், அடுத்து உலகப் போராக இது வெடிக்கலாம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அண்ணாமலை, "இன்றைய சர்வதேச சூழலைப் பார்க்கும் போது உலகம் மூன்றாம் உலகப்போரை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இன்றைய காலத்தில் உலகப் போரை தடுக்கக்கூடிய ஒரே தலைவர் மோடி தான். வேறு எந்தவொரு தலைவருக்கும் அதற்கான திறனும் இல்லை. பண்புகளும் இல்லை.
உலக நாடுகளிடையே பேசக்கூடிய தலைவராக மோடி இருக்கிறார். இன்றும் கூட இஸ்ரேல் உடனும் சரி, ஈரான் உடனும் சரி பேசக்கூடிய பேசக்கூடிய ஒரே தலைவராக மோடி இருக்கிறார். எனக்குத் தெரிந்து 2024- 2029 காலத்தில் பிரதமர் மோடி உலக தலைவராக நிச்சயம் உருவெடுப்பார்" என்று அவர் தெரிவித்தார்.
ஏன் முக்கியம்: மத்திய கிழக்கு நாடுகளில் அதிகப்படியான இந்தியர்கள் இருப்பதாலும் நாம் அங்கிருந்து தான் கச்சா எண்ணெய்யை வாங்குவதாலும் அங்கு நடக்கும் விஷயங்கள் இந்தியாவுக்கு ரொம்பவே முக்கியமானது. கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி சிரியாவில் இருக்கும் ஈரான் தூதரகம் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் முக்கிய தளபதிகள் உயிரிழந்தனர்.
இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை என்றாலும் கூட இதை இஸ்ரேல் தான் நடத்தியதாகக் கூறி, ஈரான் கடந்த சனிக்கிழமை சரமாரியாக ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தியது. இதனால் சர்வதேச அளவில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications