அமைச்சரின் இளமை ரகசியம்! முதலமைச்சர் பேச பேச வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு வந்த அழகான வெட்கம்!
திருப்பூர்: திருப்பூரில் நடைபெற்ற மேற்கு மண்டல திமுக பூத் கமிட்டி முகவர்கள் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் மு.பெ.சாமிநாதனை மூப்பே அடையாத சாமிநாதன் என்றும் இளமையாவே காட்சி அளிப்பார் எனவும் குறிப்பிட்டார்.
முதலமைச்சர் இவ்வாறு பேசிக்கொண்டிருந்த போது அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் முகத்தில் அப்படியொரு பூரிப்பும், வெட்கமும் வெளியே எட்டிப்பார்த்தது. போதாகுறைக்கு அருகில் அமர்ந்திருந்த அமைச்சர்கள் முத்துசாமியும், இளித்துறை ராமச்சந்திரனும் சாமிநாதனை கலாய்க்க அந்த இடமே கலகலப்பானது.

அமைச்சர் சாமிநாதனின் இளமை பற்றி முதல்வர் பேசியதாவது;
''மேற்கு மண்டல கழக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சிப் பாசறைக் கூட்டத்தை மிகச் சிறப்போடும் எழுச்சியோடும் ஏற்பாடு செய்திருக்கிற செய்தித் துறை அமைச்சர் என்னுடைய அருமை சகோதரர் மு.பெ.சாமிநாதன் அவர்களை பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்.
மு.பெ. என்பது அவரது முன்னெழுத்தாக இருந்தாலும், உண்மையில் அவர் மூப்பே அடையாத சாமிநாதன் என்று சொல்லத்தக்க வகையில் இளமையாவே காட்சி அளிப்பார். இளைஞரணியில் என்னுடன் தொடக்க காலத்தில் இருந்தே பயணித்தவர் சாமிநாதன்.
வெள்ளக்கோவில் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்து மாநில இளைஞரணிச் செயலாளர் என்ற தகுதிக்கு உயர்ந்தவர் அவர். இளைஞரணிச் செயலாளர் பொறுப்பு என்னிடம் இருந்து அவருக்குத்தான் போனது. அதில் இருந்தே அவரின் உழைப்பையும் திறமையையும் தெரிந்து கொள்ளலாம்.

தலைவர் கலைஞர் அமைச்சரவையில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராகச் சிறப்பாகப் பணியாற்றினார். இப்போது, நம்முடைய அமைச்சரவையில் செய்தித்துறை அமைச்சராகப் பணியாற்றி வருகிறார். நிறைகுடம் தளும்பாது என்பதற்கு ஏற்ப, அடக்கமாகவும் - அமைதியாகவும் - அதே நேரத்தில் பொறுப்பை உணர்ந்தும் பணியாற்றக் கூடியவர்தான் சாமிநாதன்.
அவருக்கு தோளாடு தோள் நின்ற மாவட்டக் கழகச் செயலாளர்கள் - நிர்வாகிகள் எல்லாருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை மீண்டும் ஒருமுறை தலைமைக் கழகத்தின் சார்பிலும், என்னுடைய சார்பிலும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.''












Click it and Unblock the Notifications