சீப்பை ஒளித்து வச்சுட்டா..?.. பாஜக வென்றே தீரும்.. விட மாட்டேங்குறாரே தமிழிசை
மம்தா பானர்ஜி தேவையில்லாமல் பிரச்சனை செய்வதாக தமிழிசை தெரிவித்துள்ளார்.
Recommended Video
திருப்பூர்: சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று விடுமா? எங்கே, என்ன தடை வந்தாலும் பாஜக தன்னுடைய பிரச்சாரத்தை தொடரும், நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றே தீரும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தேர்தல் நெருங்க நெருங்க.. பாஜக, காங்கிரஸ் என இரு தரப்பிலுமே பரபரப்புகள் ஆரம்பமாகி விட்டன. இது சம்பந்தமான கருத்துக்களையும் இரு கட்சியை சேர்ந்த தலைவர்கள் அதிரடியாக கூறி வருகிறார்கள். இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் கூறியதாவது:
"மம்தா பானர்ஜி தேவையில்லாமல் பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார். பாஜக தலைவர் அமித்ஷாவின் ஹெலிகாப்டரை தரையிறங்க மேற்கு வங்க அரசு அனுமதிக்கவில்லை.
மம்தா பானர்ஜி
பாஜக அந்த மாநிலத்தில் பிரச்சாரம் செய்யவும் தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. விசாரிக்க சென்ற ஒரு சிபிஐ அதிகாரியை பிடித்து வைத்து கொள்வதா? இது அவர்களின் மோசமான அரசியலுக்கு ஒரு உதாரணம் ஆகும்.
சீப்பை மறைத்தால்?
சிபிஐ அதிகாரிகள் என்பவர்கள் பொதுவானர்கள். யாரையும் சாராதவர்கள். சட்டப்படி அவர்களுக்கென்று ஒரு தனி அதிகாரம் இருக்கிறது. விசாரணைக்கு தான் அவர்கள் அங்கு போனார்கள். ஆனால் அதைகூட மம்தா பானர்ஜி சரியாக புரிந்து கொள்ளவில்லை. மத்திய அரசுக்கு எதிராக தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார். சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று விடுமா என்ன?
பாஜக வெல்லும்
ஆனாலும் நாங்கள் எங்கள் பிரச்சாரத்தை தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறோம். எத்தனை தடை வந்தாலும் சரி, பாஜக இந்த பிரச்சாரத்தை விடாமல் தொடரும். வரப்போகிற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெறும்" என்றார்.
அமித்ஷா வருகை
முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, வருகிற 10ம் தேதி திருப்பூருக்கு பிரதமர் மோடியும், 12ம் தேதி திருநெல்வேலிக்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும், 14ம் தேதி ஈரோட்டுக்கு அமித்ஷாவும் 15ம் தேதி சென்னைக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும், 19ம் தேதி கன்னியாகுமரிக்கு மீண்டும் பிரதமர் மோடியும் வரவுள்ளனர்.
நாங்கள் யானை
தமிழகத்தில் மக்களிடையே பாஜக ஐக்கியமாகி வருகிறது. பிரதமர் மோடி வரும்போது மட்டும் வைகோ, ஸ்டாலின் உள்ளிட்டோர் கருப்புக்கொடி காட்டுகிறார்கள். கருப்புக்கொடி காட்டும் இந்த சின்னக் கூட்டத்தை பார்த்து நாங்கள் பயப்படமாட்டோம். ஒரு சிறு எலியை பார்த்து யானை பயப்படாது. ஆக்கபூர்வமான அரசியலை செய்யவே பாஜக விரும்புகிறது.
மக்கள் முடிவுதான்
தமிழகத்தை வளர்ச்சி பாதையில் எடுத்து செல்லும் பிரதமர் மோடி வேண்டுமா? அல்லது கிளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் வைகோ, ஸ்டாலின் உள்ளிட்டோர் வேண்டுமா? என்பதை மக்களே முடிவு செய்யட்டும்" என்றார்.