திருப்பூரில் 6 பேருக்கு எமனாக காரணம் பேரிகார்டர் அல்லது வேகம்.. விபத்திற்கு பின்னால் உள்ள காரணம்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் குறுக்கத்தி போலீஸ் சோதனைச்சாவடி அருகே சாலையின் குறுக்கே வைக்கப்பட்டிருந்த பேரி கார்டர் மீது லாரி ஒன்று உரசியது. அதனை சரி செய்ய போலீஸ்காரர்களும், டிரைவரும் முயன்றனர்.. அப்போது சாலையில் மின்னல் வேகத்தில் வந்த காரால் ஏழு பேர் இன்று உயிருடன் இல்லை. இந்த விபத்திற்கு பேரிகார்டர் காரணமா அல்லது மின்னல் வேகமாக என்ற விவாதம் இருக்கிறது. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
கடலூர் மாவட்டம் எழுமேடு அருகே உள்ள ராசாபாளையம் தோப்பு தெருவைச் சேர்ந்த 50 வயதாகும் செந்தில் லாரி டிரைவர், நேற்று முன்தினம் இரவு இவர், பண்ருட்டியிலிருந்து சவக்கு மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு, திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் நோக்கி லாரியை ஓட்டி வந்துள்ளார்.
நேற்று அதிகாலை வெள்ளக்கோவில் குறுக்கத்தி போலீஸ் சோதனைச்சாவடி அருகே கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் லாரி வந்தது.

அப்போது சோதனைச்சாவடியில் சாலையின் குறுக்கே வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புகள் (பேரி கார்டர்) மீது லாரி உரசியதில் கீழே விழுந்துள்ளது. இதனைக்கண்டு, அங்கு பணியில் இருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ்குமார், 35 வயதாகும் போலீஸ்காரர் ரவிச்சந்திரன் ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அங்கு சென்று, லாரி டிரைவர் செந்திலிடம் விசாரணை நடத்தினார்கள். அதன்பிறகு, மனோஜ்குமார், ரவிச்சந்திரன், லாரி டிரைவர் செந்தில் ஆகியோர் சாலையோரமாகக் கிடந்த இரும்பு தடுப்புகளை நிமிர்த்தி சீரமைத்துக் கொண்டிருந்தார்கள்.
அப்போது மயிலாடுதுறையிலிருந்து கோவை நோக்கி மின்னல் வேகத்தில் ஒரு கார் வந்துள்ளது. அந்தக் காரை விருதுநகர் மாவட்டம் சீவலப்பரியைச் சேர்ந்த 22 வயதாகும் ராம் என்பவர் ஓட்டி வந்தார். அந்தக் காரில் மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்த பாலாஜி (28), அவருடைய தந்தை நரசிம்மன், தாய் சாந்தாலட்சுமி ஆகியோர் பயணித்தார்கள்.
யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அந்தக் கார், போலீஸ்காரர் ரவிச்சந்திரன், செந்தில் ஆகியோர் மீது வேமகாக மோதியது. இதில், அவர்கள் 2 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். அதன்பின்னர் அந்தக் கார், சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீதும் பயங்கரமாக மோதியது. இதில், கார் அப்பளம் போல் நொறுங்கியது.
இதனால், காருக்குள் இருந்த டிரைவர் ராம், பாலாஜி, நரசிம்மன், சாந்தாலட்சுமி ஆகியோர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். இந்த விபத்து காரணமாகத் திருச்சி-கோவை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த வெள்ளக்கோவில் போலீசார், உயிரிழந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். அத்துடன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். உயிரிழந்த ரவிச்சந்திரன் உடலுக்கு ஆயுதப்படை போலீசார் 10 பேர், 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினர்.
விபத்தில் இறந்த லாரி டிரைவர் செந்திலுக்கு விமலா என்ற மனைவியும், வினோதினி என்ற மகள் மற்றும் கிருஷ்ணா என்ற மகனும் உள்ளனர். இதேபோல் விபத்தில் தாய்-தந்தையுடன் பலியான பாலாஜிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் கீதாமணி என்பவருடன் திருமணம் நடந்தது. தற்போது கீதாமணி 3 மாத கர்ப்பிணியாக உள்ளார் . விபத்தில் இறந்த போலீஸ்காரர் ரவிச்சந்திரன் தாராபுரத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவருக்கு பிரியா (30) என்ற மனைவியும், நட்சத்திரா (7) என்ற மகளும், நலவெண்பா என்ற மகனும் உள்ளனர். கணவரின் உடலை பார்த்து மனைவி பிரியா உட்பட குடும்பத்தினர் கதறி அழுதது காண்போரை கலங்க வைத்தது.
இந்த விபத்திற்கு மூன்று காரணங்கள் உள்ளது. அங்கு வைக்கப்பட்டிருந்த பேரிகார்டர் முதல் காரணம் ஆகும்.விபத்தை தடுக்கும் நோக்கிலும், சோதனை செய்யும் நோக்கிலும் வைக்கப்பட்ட பேரிகார்டர் விபத்திற்கு காரணமாகி உள்ளது. அடுத்ததாக பேரிகார்டரில உரசி அதனை தட்டிவிட்ட லாரி டிரைவரின் சிறு தவறு.. அவர் தட்டிவிடாமல் கவனமாக சென்றிருந்தால் விபத்தே ஏற்படிருக்காது. மூன்றாவது காரணம், கார் டிரைவரின் மின்னல் வேகம்.. அவர் மின்னல் வேகத்தில் வராமல் நிதானமாக வந்திருந்தால், இந்த விபத்தே ஏற்பட்டிருக்காது. ஆறுபேரும் இன்று உயிருடன் இருந்திருப்பார்கள். சாலைகளில் கார் ஓட்டுபவர்கள் கண்டிப்பாக நிதானமாக செல்ல வேண்டும். நிதானம் தவறினால் எல்லாமே தவறாக போய்விடும். கார் டிரைவரின் நிதானமில்லாத வேகத்தால் இன்று ஆறு பேர் உயிருடன் இல்லை.














Click it and Unblock the Notifications