இந்தியா சமூக நல்லிணக்கத்துடன் இருப்பதை சிலர் விரும்பவில்லை-கம்யூனிஸ்ட் மாநாட்டில் ஸ்டாலின் உரை
திருப்பூர் : சமூக நல்லிணக்கத்தை கெடுப்பது, மாநில உரிமைகளை பறிப்பது என இந்திய நாட்டுக்கு 2 மாபெரும் அச்சுறுத்தல்கள் உருவாகியுள்ளன. இந்தியா சமூக நல்லிணக்கத்துடன் இருப்பதை ஒரு சிலர் விரும்பவில்லை எனப் பேசியுள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
திருப்பூரில் நடைபெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் காணொளிக் காட்சி வாயிலாக பங்கேற்றுப் பேசினார் முதல்வர் ஸ்டாலின்.
அப்போது பேசிய ஸ்டாலின், முதலமைச்சராக நான் நானாக அமர்ந்துவிடவில்லை, தோழமைக்கட்சிகளால் அமர்ந்துள்ளேன். நாணயத்திற்கு இரு பக்கம் போல வளர்ச்சித் திட்டமும், சமுக மேம்பாடும் அவசியம். அதுவே திராவிட மாடல் எனத் தெரிவித்தார்.
மேலும், சிவகங்கை மாவட்டம் சிராவயலில் 'காந்தி - ஜீவா நினைவு மண்டபம்' அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார்.

சிபிஐ மாநாடு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 25-வது மாநாடு திருப்பூர் தாராபுரம் ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று காலை தொடங்கியது. இன்று தொடங்கிய மாநாடு வருகிற 9-ஆம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தமிழக முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின், காணொளிக் வாயிலாக பங்கேற்று உரையாற்றினார். முதல்வர் ஸ்டாலின் மட்டுமல்லாது காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் இந்த மாநாட்டில் சிறப்புரையாற்றுகின்றனர்.

எனக்கு கிடைத்த பெருமை
இந்த மாநாட்டில் காணொளிக் காட்சி வாயிலாகப் பங்கேற்றுப் பேசிய முதல்வர் ஸ்டாலின், "கொரோனா தொற்றிலிருந்து மீண்ட நான் சில நாட்கள் வெளியூர் பயணங்களை தவிர்க்க மருத்துவர்கள் பரிந்துரை செய்ததால் என்னால் நேரில் வர இயலவில்லை. ஆனால் இம்மாநாட்டை திருப்பூரில் நடத்துவதாக முத்தரசன் கூறியபோது மகிழ்ந்தேன். நல்லகண்ணு அவர்களுக்கு தகைசால் தமிழர் விருது வழங்க அறிவித்திருப்பது மிக மகிழ்ச்சியாக உள்ளது. கம்யூனிஸ்ட் இயக்கமே வாழ்வாக அர்ப்பணித்த போராளி நல்லகண்ணு. ஆகஸ்ட் 15ஆம் தேதி நான் முறைப்படி வழங்க இருக்கிறேன். இந்த விருது வழங்குவதை எனக்கு கிடைத்த பெருமையாக கருதுகிறேன்.

தோழமைக் கட்சிகளால்
முதலமைச்சராக நான் நானாக அமர்ந்துவிடவில்லை, தோழமைக்கட்சிகளால் அமர்ந்துள்ளேன். நாணயத்திற்கு இரு பக்கம் போல வளர்ச்சித் திட்டமும், சமுக மேம்பாடும் அவசியம். அதுவே திராவிட மாடல். சாதி, மதங்களுக்கு எதிரானது திராவிடம். திராவிடம் என்பது தமிழக அரசின் சமத்துவத்தை உணர்த்தி நிற்கும் சொல். மதவாதத்துக்கும், சாதியவாதத்துக்கும், சனாதனத்திற்கும் எதிரானது திராவிடம்.

திராவிடம்
தமிழகத்தில் திமுக ஆட்சியை குறை கூற இயலாததால் அரசு பற்றி அவதூறு பரப்புகிறார்கள். திராவிட மாடல் தமிழகத்திற்கும் மட்டுமல்ல இந்தியா முழுவதிற்கும், 75 வது ஆண்டு கொண்டாட்டமாக மட்டுமல்லாது இந்தியாவை செம்மைப்படுத்திட உறுதியேற்க வேண்டும். இந்தியாவை காப்பாற்ற இந்திய ஒன்றியத்தில் உள்ள அனைத்து மாநிலங்களையும் காப்பாற்ற வேண்டும்.

2 மாபெரும் அச்சுறுத்தல்கள்
சமூக நல்லிணக்கத்தை கெடுப்பது, மாநில உரிமைகளை பறிப்பது என இந்திய நாட்டுக்கு 2 மாபெரும் அச்சுறுத்தல்கள் உருவாகியுள்ளன. இந்தியா சமூக நல்லிணக்கத்துடன் இருப்பதை ஒரு சிலர் விரும்பவில்லை. அனைவரையும்,மொழிகளையும், மத வழிபாட்டு தலங்களையும் ஒன்றாக பாருங்கள், நடத்துங்கள் என நாம் கேட்பதால் தேசவிரோதிகள் என்கிறார்கள். நாட்டின் சமூக நல்லிணக்கத்தை கெடுக்க விரும்புவோர் தான் தேச விரோதிகள். பள்ளிக்கூடத்தை தாண்டாத வகையில் உரிமையை பறிக்கின்றனர். நாடாளுமன்றத்தில் எதிர்க்குரல் எழுப்பினால் இடைநீக்கம் செய்கிறார்கள்.

சிராவயலில் நினைவு மண்டபம்
மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டபோது இந்த நாட்டிற்கு காந்தி நாடு என பெயர் வையுங்கள் என கூறியவர் தந்தை பெரியார். பெரியார் சுயமரியாதை இயக்கம் தொடங்கிய காலத்தில் அவரோடு இணைந்து பணியாற்றியவர் தோழர் ஜீவானந்தம். காந்தியும், ஜீவாவும் சந்தித்த சிவகங்கை மாவட்டம் சிராவயல் என்ற இடத்தில் நினைவு மண்டபம் அமைக்க சிவகங்கை மாவட்டத்தில் மணிமண்டபம் அமைக்க இ.கம்யூ செயலாளர் முத்தரசன் வைத்த கோரிக்கை ஏற்று அப்பகுதியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என இம்மாநாட்டில் தெரிவித்துக்கொள்கிறேன்." எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications