தாராபுரம் அமராவதி ஆற்றில் 64 புதைகுழிகள்.. நீர் ஆர்ப்பரித்து வரும்போது.. இப்படித்தான் நடக்குது
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணையில் இருந்து தொடங்கும் அமராவதி ஆறு 76 கிலோ மீட்டர் பயணம் செய்து கரூர் அருகே காவிரியில் கலக்கிறது. இந்த ஆற்றில் 25 தடுப்பணைகள் அமைக்கப்பட்டு, 147 கிராம மக்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்கிறது. இந்நிலையில் தாராபுரம் அமராவதி ஆற்றில் 64 புதைகுழிகள் இருப்பதாகவும், எனவே உயிரிழப்பை தடுக்க, பெரிய எழுத்துகளில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
பழனி மலைத்தொடருக்கும் ஆனைமலைத் தொடருக்கும் இடையில் உள்ள மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கில் அமராவது ஆறு உற்பத்தியாகிறது. இந்த ஆற்றில் தான் உடுமலைப்பேட்டை அருகே அமராவதி அணைக்கட்டு அமைக்கப்பட்டுள்ளது. 1956ம் ஆண்டு காமராஜர் ஆட்சி காலத்தில் இந்த அணை கட்டப்பட்டது.

அமராவதி அணையில் இருந்து சமவெளியில் தொடங்கும் அமராவதி ஆறு 76 கிலோ மீட்டர் பயணம் செய்து கரூர் அருகே காவிரியில் கலக்கிறது. இந்த ஆற்றில் 25 தடுப்பணைகள் அமைக்கப்பட்டுள்ளது. 147 கிராம மக்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்து வருகிறது. கொங்கு மக்களின் முக்கியமான ஜீவ நதிகளில் அமராவதி ஆறும் ஒன்று. பவானி, நொய்யல் போல், இதுவும் காவிரி ஆற்றின் துணை நதியாக இருக்கிறது.
அமராவதி ஆறு நீர் மூலம் ராபுரம் முதல் கரூர் வரை சுமார் 50ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறார்கள். திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில் செழிப்பாக விவசாயம் நடைபெற அமராவதி ஆறு முக்கியமான காரணம் ஆகும். கடந்த காலங்களில் அமராவதி ஆற்றில் இரவு நேரங்களில் இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் மர்ம நபர்கள் தொடர்ந்து மணல் திருட்டு நடந்தது.
இதனால் அந்த பகுதியில் பள்ளம் ஏற்பட்டு, புதை குழியாக மாறி விட்டது. அமராவதி ஆற்றில் மட்டும் 64 புதைக்குழிகள் உள்ளன. அமராவதி ஆற்றில் நீர் ஆர்ப்பரித்து வரும்போது தாராபுரம் மட்டுமல்லாது அந்த வழியாகச் செல்லும் மக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கின்றனர். அவ்வாறு குளிக்கும்போது அமராவதி ஆற்றில் உள்ள புதைக்குழிகள் தெரியாமல் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிர் இழக்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில் அமராவதி ஆற்றில் நீரில் மூழ்கி 264 பேர் இறந்துள்ளனர். எனவே போலீசார் ரோந்து பணியை அதிகப்படுத்தி மணல் கடத்தலை தடுக்க வேண்டும். மேலும் புதை குழிகள் உள்ள பகுதியில் எச்சரிக்கை பலகை பெரிய அளவில் வைக்க வேண்டும் என மக்களின் கோரிக்கை எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications