திருப்பூரில் சேட்டிலைட் போன்.. தீவிரவாதிகள் ஊடுருவலா என அச்சம்.. போலீஸ் விசாரணை
திருப்பூர்: திருப்பூரில் சேட்டிலைட் போன் சிக்னல் கிடைத்துள்ளதால் உளவுத் துறை போலீஸார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பனியன் தொழிற்சாலைகளுக்கு பெயர் பெற்ற நகரமான திருப்பூரில் வெளிமாநிலம், வெளிநாடுகளிலிருந்து 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள். இந்த நிலையில் தொழிலாளர்கள் என்ற பெயரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த நைஜீரியா மற்றும் வங்கதேச இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

கடந்த மாதம் கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட 4 பயங்கரவாதிகள் திருப்பூர், கோவை உள்ளிட்ட இடங்களில் ஊடுருவியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனால் நாடு முழுவதும் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
பாதுகாப்பு கருதி இந்தியாவில் சேட்டிலைட் போன்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 23-ஆம் தேதி இரவு ராமநாதபுரம் உச்சிபுளியில் உள்ள ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளத்தில் சாட்டிலைட் போன் சிக்னல் கிடைத்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் சிக்னல் குறித்து ஆய்வு செய்தனர். அப்போது அந்த சிக்னல் திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே ஆதியூரில் இருந்து வந்ததை அறிந்தனர். இதுகுறித்து மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) மூலம் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.
அதன்படி சேட்டிலைட் போனை பயன்படுத்தியது யார்? எந்த நாட்டில் உள்ளவர்களிடம் பேசப்படுகிறது? உள்ளிட்டவை குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. பயங்கரவாதிகள் யாரேனும் ஊடுருவியுள்ளனரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications