காங்கேயத்தில் கொடூர கார் விபத்து.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரின் உயிரை காவு வாங்கிய மரம்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அருகே உள்ள காங்கேயம் பகுதியில் கேரளத்தில் இருந்து வந்து கொண்டிருந்த கார் மரத்தின் மீது விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சமீபகாலமாக தொடர்ந்து சாலை விபத்துகள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, நெடுஞ்சாலைகளில் வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. வாகனங்களை இயக்கும்போது செல்போன்களில் பேசுவது, அதிவேகம், விதிமுறைகளை மீறுவது போன்ற செயல்பாடுகளால் விபத்துகள் ஏற்படுகின்றன. தொடர்ந்து விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வந்தாலும் சாலை விபத்துகள் குறைந்தபாடில்லை.

இந்நிலையில், திருப்பூரை அடுத்த காங்கேயத்தில் கேரளத்தில் இருந்து வந்த கார் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் செவ்வாய்க்கிழமை பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், அரச்சலூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஜானகி (வயது 42) என்பவர் செவிலியராகப் பணியாற்றி வந்தார். இவருடைய கணவர் ராஜா (46). இத்தம்பதிக்கு ஹேமிநேத்ரா (15), மெளன ஸ்ரீ (10) என்ற இரு மகள்கள் உள்ளனர். இவர்கள் நான்கு பேரும் தங்களுடைய சொந்த ஊரான கேரளத்துக்குச் சென்றுள்ளனர். பின்னர், அங்கிருந்து இன்று மீண்டும் அரச்சலூருக்கு காரில் திரும்பியுள்ளனர்.
கேரளத்தில் இருந்து காரை ராஜா ஓட்டி வந்துள்ளார். காங்கேயம் வழியாக அரச்சலூருக்குச் சென்று கொண்டிருந்தபோது நத்தக்காடையூர் அருகே மரத்தில் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நான்கு பேர் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து, அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் ராஜா, ஜானகி மற்றும் ஹேமிநேத்ரா ஆகியோர் உயிரிழந்தனர்.
இரண்டாவது மகளான மெளன ஸ்ரீ பலத்த காயமடைந்திருந்த நிலையில், அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்துக்குள்ளான ராஜாவின் காரில் ஏராளமான நகைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த நகைகைளை காவல்துறையினர் மீட்டுள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications