தடுமாறும் திருப்பூர்.. தவிக்கும் தொழிலாளர்கள்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ?
இந்தியாவின் முன்னணி டெக்ஸ்டைல் ஏற்றுமதி நகரமாக விளங்கும் திருப்பூர், தற்போது ஈரான் போர் காரணமாக பல வகையில் மாடிக்கொண்டு தவித்து வருகிறது. திருப்பூரில் இருக்கும் ஆயிரக்கணக்கான சிறு, நடுத்தர மற்றும் பெரிய அளவிலான தொழிற்சாலைகள் அனைத்தும் இந்த பாதிப்பில் மாட்டிக்கொண்டு தவித்து வருகின்றன.
இந்த நிவையில், கடந்த ஐந்து மாதங்களாக நூல் விலை தடாலடியாக உயர்ந்துள்ளதால் திருப்பூர் டெக்ஸ்டைல் துறையின் நிலைமை மோசமடைந்து வருகிறது. இதனால் உற்பத்தி செலவு அதிகரித்து, லாப வரம்பு குறைந்து, புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் மொத்த ஆடை ஏற்றுமதியில் சுமார் மூன்றில் ஒரு பங்கு திருப்பூர் பங்களிக்கிறது. எனவே, இந்த நெருக்கடி திருப்பூர் நெருக்கடியோ, தமிழ்நாட்டின் நெருக்கடியோ இல்லை, இந்திய அளவிலான நெருக்கடி என்பதால் இந்த பிரச்சனை தற்போது டெல்லி வரையில் எதிரொலித்துள்ளது.
நூல் விலை மற்றும் உற்பத்தி செலவு உயர என்ன காரணம்
சமீப காலமாக செயற்கை நூல் விலை மட்டும் 40 முதல் 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதன் மூலம் உற்பத்தி நிறுவனங்களின் மொத்த உற்பத்தி செலவை பெரிய அளவில் பாதித்துள்ளது. நூல் மட்டுமின்றி, சாயங்கள், ரசாயனப் பொருட்கள், சரக்கு போக்குவரத்து, பேக்கேஜிங் செலவுகள் மற்றும் தொழிலாளர் ஊதியங்களின் உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளன.
உலக அளவில் ஈரான் - அமெரிக்கா இடையேயான புவிசார் அரசியல் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் தொடர்புடைய மூலப்பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இதனால் பெட்ரோலியம் பொருட்களை (Synthetic fibres, polymers, Polyester, Nylon, Dyes, Pigments, & Auxiliaries, Lubricants & Process Oils) அதிகம் நம்பியிருக்கும் திருப்பூர் போன்ற டெக்ஸ்டைல் தொழில் மையங்களை நேரடியாக பாதித்துள்ளது.
ஏற்றுமதியாளர்களின் சவால்கள்
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் தற்போது அதிகப்படியான உற்பத்தி செலவுகளை எதிர்கொள்ளும் காரணத்தால் சர்வதேச விற்பனையாளர்களுக்கு அளிக்கப்படும் தயாரிப்புகளின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் உள்ளது. விலை உயர்த்தினால் ஆர்டர் கேன்சல் செய்யப்படும் அல்லது டெலிவரி தள்ளி வைக்கப்படும், விலை உயர்த்தாவிட்டால் லாபம் குறையும் இப்படி இரு பக்கங்களிலும் சிக்கியுள்ளனர்.
ஏற்றுமதி ஆர்டர்கள் பொதுவாக உற்பத்தி தொடங்குவதற்கு பல மாதங்களுக்கு முன்பே இறுதி செய்யப்படுவதால், நூல் விலை உயர்ந்த பிறகு விலையை மறுபரிசீலனை செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால் குறைந்த விலையிலும், நிர்ணயம் செய்யப்பட்ட விலையிலும் கொடுப்பதும் முடியாமல் போகிறது.
இதனால் சில ஏற்றுமதியாளர்கள் புதிய ஆர்டர்களைப் பெறுவதில் தாமதம் எதிர்கொள்கின்றனர். நூல் என்பது ஆடை தயாரிப்பின் முதன்மை மூலப்பொருள் என்பதால், சிறிய விலை உயர்வு கூட முழு உற்பத்தி செலவை பாதிக்கிறது. இதனால் பல நிறுவனங்கள் நிதி அழுத்தத்தில் செயல்படுகின்றன. அதிலும் முக்கியமாக சிறு நிறுவனங்கள் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது.
தொழிலாளர் பற்றாக்குறை
நூல் விலை உயர்வுடன் சேர்த்து, திருப்பூர் தொழிற்சாலைகளில் தொழிலாளர் பற்றாக்குறையும் கடுமையான பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. சுமார் 40 சதவீதம் பற்றாக்குறை உள்ளது என மதிப்பிடப்பட்டு உள்ளது. தேர்தல் மற்றும் பண்டிகை காலங்களில் அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து வந்த புலம்பெயர் தொழிலாளர்கள் பலர் சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளனர்.
மேலும், வாழ்க்கைச் செலவு உயர்வு மற்றும் சிலிண்டர் விநியோக இடர்பாடுகள் காரணமாக பிற மாநில தொழிலாளர்கள் கடுமையான பிரச்சனையை எதிர்கொண்டு வருகின்றனர்.
அரசு தலையீட்டு வேண்டும்
திருப்பூர் தொழில் சங்கங்கள் மற்றும் அமைப்புகள் மாநில மற்றும் மத்திய அரசுகளை உடனடியாக நூல் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளன. தமிழ்நாடு முதல்வர் பருத்தி மீதான வரியை குறைக்க மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். மத்திய அரசு ஏற்கனவே பெட்ரோலியம் பொருட்களுக்கான இறக்குமதி வரியை குறைத்துள்ளது.
இத்தகைய சவால்கள் இருந்தபோதிலும், உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் இருந்து வரும் தேவை, புதிய ஆர்டர்கள் காரணமாக தொடர்ந்து வர்த்தகத்தை நடத்துகின்றனர்.














Click it and Unblock the Notifications