சாலை அமைப்பதில் முன்விரோதம்.. முதியவர் கார் ஏற்றிக் கொலை.. விபத்து என நாடகமாடிய பேரூராட்சி தலைவர்
திருப்பூர்: திருப்பூர் அருகே தார் சாலை அமைப்பதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக முதியவரை கார் ஏற்றிக் கொன்றுவிட்டு விபத்து என பேரூராட்சித் தலைவர் நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், மங்கலம் கருகம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (60). இவர் கருகம்பாளையத்தில் உள்ள பள்ளி அருகே இருசக்கர வாகனத்தில் நேற்று முன்தினம் சென்றுள்ளார். அப்போது, அதே பகுதியில் பழனிச்சாமியின் இருசக்கர வாகனத்துக்குப் பின்னால் கார் ஒன்று வந்துள்ளது. அந்தக் காரை திமுகவைச் சேர்ந்த சாமளாபுரம் பேரூராட்சித் தலைவர் விநாயகா பழனிச்சாமி (60) ஓட்டி வந்துள்ளார்.

விபத்து
அப்போது, விநாயகா பழனிச்சாமி ஓட்டி வந்த கார் திடீரென பழனிச்சாமியின் இருசக்கர வாகனம் மீது வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில், பழனிச்சாமி ரத்தவெள்ளத்தில் சாலையில் விழுந்து உயிருக்கு போராடினார். இதைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பழனிச்சாமியை பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
போலீஸார் விசாரணை
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த மங்கலம் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். உயிரிழந்த பழனிச்சாமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
முதியவர் குடும்பத்தினர் புகார்
இதைத்தொடர்ந்து, பழனிச்சாமியின் குடும்பத்தினர் மங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தனர். அதில், சாமளாபுரம், பேரூராட்சி கருகம்பாளையம் பகுதியில் தார் சாலை அமைப்பதற்கு பழனிச்சாமி எதிர்ப்புத் தெரிவித்து வந்தார். இதனால், பழனிச்சாமிக்கும், பேரூராட்சித் தலைவர் விநாயகா பழனிச்சாமிக்கும் இடையே முன்பகை இருந்து வந்தது. இந்த முன்விரோதம் காரணமாகத்தான் விநாயகா பழனிச்சாமி தனது காரை ஏற்றி பழனிச்சாமியை கொலை செய்துள்ளார் என்று புகாரில் தெரிவித்துள்ளனர்.
கார் ஏற்றி கொலை
அந்தப் புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் தார்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்ததால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கருகம்பாளையம் பழனிச்சாமி மீது காரை ஏற்றி கொன்று விட்டு விபத்து என நாடகமாடியதாக விநாயகா பழனிச்சாமி ஒப்புக் கொண்டுள்ளார்.
கைது
இதைத்தொடர்ந்து, விபத்து வழக்கை கொலை வழக்காக மாற்றி பேரூராட்சித் தலைவர் விநாயகா பழனிச்சாமியை காவல் துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications