திருப்பூரில் அரசுப் பள்ளியில் 497 மார்க் எடுத்து தொழிலாளி மகள் சாதனை.. ஐஏஎஸ் கனவில் பறக்கும் அனுஸ்ரீ
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் விசைத்தறி கூடம் நடத்தி வாழ்க்கை நடத்தும் தந்தை.. வீட்டிலேயே இருக்கும் இல்லத்தரசி தாயார்.. இந்த எளிய தொழிலாளர் குடும்பத்தின் மகள், கருக்கன்காட்டுப்புதுார் அரசுப்பள்ளியில் படித்து, 500க்கு 497 மதிப்பெண் பெற்று மாநில அளவில் கவனம் பெற்றிருக்கிறாள்.. அரசுப்பள்ளி மாணவி அனுஸ்ரீ எப்படி இந்த சாதனை படைத்தார், இனி என்ன ஆகப்போகிறாள் என்று தெரியுமா? தகவல்களை இங்கே சுருக்கமாக பார்க்கலாம்
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த கருக்கன்காட்டுப்புதுார் என்னும் சிறிய கிராமத்தில் ஒரு அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.. இந்த பள்ளியில் இந்த ஆண்டு 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு 63 மாணவ, மாணவியர் தேர்வெழுதினார்கள்..

அனைவரும் தேர்ச்சி பெற்று, பள்ளி 100 சதவீத தேர்ச்சி என்ற சிறப்பை நிலைநாட்டியுள்ளது.. அதிலும் ஒரு மாணவி, வெறும் 3 மதிப்பெண் மட்டுமே இழந்து 497 எடுத்து மாநிலத்தையே திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறார்..
அரசுப்பள்ளி மாணவி சாதனை
அந்த மாணவி பெயர் அனுஸ்ரீ.. தமிழில் 99, ஆங்கிலத்தில் 99, கணிதத்தில் 100, அறிவியலில் 99, சமூக அறிவியலில் 100 என்று தேர்வெழுதி, 500க்கு 497 மதிப்பெண் பெற்றிருக்கிறார்.. இது யாராலும் சாதாரணமாக எடுக்கக்கூடிய சாதனை கிடையாது.. அனுஸ்ரீயின் அப்பா செல்லமுத்து, விசைத்தறி கூடம் நடத்தி குடும்பத்தை நடத்துகிறார்.. அம்மா மோகனாம்பாள் இல்லத்தரசி.. தம்பி முகிலன் அருகிலுள்ள அரசு ஆரம்பப்பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார்.
ஆறாம் வகுப்பிலிருந்தே முன்னோடி
மாணவி பற்றி ஆசிரியர்கள் சொல்லும்போது, ''அனுஸ்ரீ ஆறாம் வகுப்பிலிருந்தே பாடங்களை நுணுக்கமாகக் கவனிப்பவர்.. 8ம் வகுப்பு, 9ம் வகுப்பு, 10ம் வகுப்பு என 3 ஆண்டுகளிலும் திறனறிவு தேர்வில் முதலிடம் பெற்றிருக்கிறார்.. இப்படி ஒரு மாணவி மாநில அளவில் கவனிக்கப்படுவது எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சி அளிக்கிறது..'' என்று பூரித்து சொல்கிறார்கள்.
அதுமட்டுமல்ல, தலைமையாசிரியை அனிதா மற்றும் ஆசிரியர்கள் வெங்கடேஸ்வரி, கோகிலவாணி.. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வரதராஜன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் கலைச்செல்வி ஆகியோர் அனுஸ்ரீவுக்கு இனிப்பு வழங்கி பாராட்டினார்கள்..
ஐ.ஏ.எஸ். கனவுடன் அனுஸ்ரீ
அனைவரது பாராட்டு மழையிலும் நனைந்த அனுஸ்ரீ சொல்கிறார், ''நான் நன்றாக படித்து ஐ.ஏ.எஸ். (Indian Administrative Service) அதிகாரி ஆவதே என்னுடைய லட்சியம்.. ஆசிரியர்களின் ஊக்குவிப்பும், பெற்றோரின் ஆதரவும்தான் என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்தது.. அதற்காக முழு முயற்சி எடுப்பேன்..'' என்கிறார் தன்னுடைய கண்களில் தெளிவான லட்சியத்துடன்..
விசைத்தறி நூல் போல் பின்னிப்பிணைந்த கஷ்டங்களையும் கடந்து ஓர் அரசுப்பள்ளி மாணவி இப்படி மாநில அளவில் பறந்திருக்கிறாள்.. இது இந்த மண்ணின் பெருமை என்றே சொல்லலாம்.
கோட்டா முறை, தனியார் பள்ளி சேர்க்கை, கல்வி கட்டணம் என்று நிறைய சவால்களுக்கு நடுவே, சரியான ஆசிரிய வழிகாட்டுதலும் மாணவியின் விடாமுயற்சியும் இருந்தால் அரசுப்பள்ளியிலும் சாதிக்கலாம் என்பதை அனுஸ்ரீ நிரூபித்திருக்கிறார்..!!!












Click it and Unblock the Notifications