சகோதரி மகள் பூப்புனித நீராட்டு விழா.. திருப்பூரையே வியக்க வைத்த தாய் மாமன் சீர்வரிசை
திருப்பூர்: திருப்பூரில் தனது சகோதரியின் மகள் பூப்படைந்த விழாவிற்கு, பழைய கால வழக்கப்படி, பண்பாட்டினை நினைவூட்டும் வகையில் 7 மாட்டு வண்டிகளில் 25 வகையான சீர் தட்டுகளுடன் உறவினர்கள் புடை சூழ மண்டபத்திற்கு தாய்மாமன்கள் வருகை தந்து ஊரையே வியப்பிற்குள்ளாக்கியுள்ளனர்.
பெண் பூப்படைந்த விழா என்றாலே தாய்மாமன் சீர் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக இருந்து வருகிறது. சீர் வரிசை என்பது உறவினர்கள் மத்தியில் கவுரவத்தை ஏற்படுத்த கூடிய ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது.
சகோதரி மகள் பூப்படைந்தால் தாய்மாமன்களுக்கு பொறுப்பு அதிகரித்து விடுகிறது. அவர்கள் தங்கள் அன்பை மட்டுமல்லாது, கவுரவத்தையும் காட்டும் நிகழ்வாக பூப்படையும் விழா இருக்கிறது.

ஏழு இரட்டை மாடு வண்டிகள்
திருப்பூர் மாவட்டம், குன்னத்தூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகள் பூப்படைந்த விழாவினை, குன்னத்தூர் சாலையிலுள்ள திருமண மண்டபத்தில் நடத்தினார். தனது சகோதரியின் மகள் பூப்படைந்த விழாவிற்கு வேலுச்சாமி, சதீஷ் உள்ளிட்ட தாய்மாமன்கள் அந்த கால வழக்கப்படி, பண்பாட்டை நினைவூட்டும் வகையில் ஏழு இரட்டை மாடு வண்டிகளை பூட்டி கொண்டு சீர் கொண்டு வந்தனர்.

25 வகை சீர் தட்டுக்கள்
தேங்காய், பழம் என 25 வகையான சீர் தட்டுகளை எடுத்து கொண்டு உறவினர்கள் புடை சூழ, மேளதாளங்கள் முழங்க குன்னத்தூரிலிருந்து திருமண மண்டபம் சுமார் ஐந்து கி.மீ தூரம் மாட்டுவண்டிகளில் தாய்மாமன் சீரினை எடுத்து கொண்டு வந்தார்கள்.

ஆரத்தி எடுத்த சகோதரி
மண்டபம் வந்த தாய்மாமனுக்கு சகோதரி தனது உறவினர்களுடன் இணைந்து ஆரத்தி எடுத்தார். தாய்மாமன் சீர் எடுத்து வந்த தனது சகோதரனை மண்டபத்தினுள் அழைத்து சென்றார். விழாவிற்கு வந்த அனைவருக்கும் இறுதியில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. மாட்டு வண்டியில் தாய்மாமன் சீர் எடுத்து வந்து பண்பாடு நினைவூட்டும் வகையில் வழங்கியது உறவினர்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

ஈரோடு தாய்மாமன்
என்ன இருந்தாலும், கடந்த ஜனவரி மாதம், ஈரோடு அருகே ஒரு தாய் மாமன் கொடுத்த சீர் இதுவரை பெரிதாக பேசப்பட்டு வருகிறது என்பதை மறுக்க முடியாது. கோபிசெட்டிபாளையத்தில் மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார் மருத்துவர் ராஜா. இவரின் ஒரே தங்கை மோகனப்பிரியா. தனது மகள்கள் இருவருக்கும் ஒரே நாளில் பூப்புனித நீராட்டு விழா சடங்கு செய்யத் திட்டமிட்டு அதற்கான அழைப்பை அண்ணன் குடும்பத்திற்கு முறைப்படி வைத்தார் மோகனப் பிரியா. தனது தங்கை மீதும், அவர் குடும்பம் மீதும் மிகுந்த அன்பு கொண்ட ராஜா, தனது தங்கை மகள்களுக்கு பிரம்மாண்டமாக சீர் கொடுக்க முடிவு செய்துள்ளார். எனவே, மொத்தம் 100 கார்களிலும், 15 மாட்டு வண்டிகளிலும், சீர்வரிசை பொருட்களை ஏற்றிக் கொண்டு தங்கை வீட்டுக்கு கிளம்பியுள்ளார். முதல் மாட்டு வண்டியை ராஜாவே ஓட்டி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications