சத்துணவில் கெட்டுப்போன முட்டைகள்... ஊழியரை சஸ்பெண்ட் செய்த மாவட்ட நிர்வாகம்..!
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட வாவிபாளையம் அரசுப்பள்ளியில் கெட்டுப்போன முட்டைகள் விநியோகம் செய்யப்பட்டதாக எழுந்த புகாரில், சத்துணவு அமைப்பாளரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும், இது தொடர்பாக நடத்திய விசாரணை தகவலை திருப்பூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சமூக நலத்துறை இயக்குநருக்கு அறிக்கையாக தாக்கல் செய்திருக்கிறார்.
அதில், சத்துணவு அமைப்பாளர் பதிவேடை முறையாக பராமரிக்காததும், முட்டைகளை தரம் பார்த்து 3 நாட்களுக்குள் பயனாளிகளுக்கு கொடுக்காததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

திருப்பூர் மாநகராட்சி
திருப்பூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வாவிபாளையம் தொடக்கப்பள்ளியில், கெட்டுப்போன முட்டைகள் விநியோகம் செய்யப்பட்டதாக 2 நாட்களுக்கு முன்னர் புகார் எழுந்தது. இதையடுத்து இது குறித்த தகவல் ஊடகங்கள் மூலம் சமூக நலத்துறை இயக்குநர் கவனத்துக்கு சென்றது. அதன்பேரில் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்ட அவர், சத்துணவில் கெட்டுப்போன முட்டைகள் தொடர்பான புகாரை விசாரித்து அறிக்கை சமர்பிக்கும் படி உத்தரவிட்டார்.

முட்டை விநியோகம்
இதையடுத்து இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கையை சமூக நலத்துறை இயக்குநருக்கு அனுப்பியுள்ள திருப்பூர் மாவட்ட நிர்வாகம், கடந்த 18-ம் தேதி 178 பயனாளிகளுக்கு 10 முட்டைகள் வீதம் 1,780 முட்டைகள் விநியோகஸ்தரால் விநியோகம் செய்யப்பட்டு சத்துணவு அமைப்பாளரால் பதிவேட்டில் வரவு வைக்கப்பட்டதாகவும் அதில் 25-ம் தேதி 600 முட்டைகளும், 26-ம் தேதி 570 முட்டைகளும் விநியோகம் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூ.
மீதமுள்ள பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய 300 முட்டைகள் கெட்டுப்போனதாக அறியப்பட்டு சத்துணவு அமைப்பாளரால் குப்பைத் தொட்டியில் போடப்பட்டது என்றும் இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய குழு நிர்வாகி சிகாமணி என்பவர், ஊடகங்களுக்கு செய்தி தந்திருக்கிறார் என்பதை விசாரணையில் அறிய முடிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணை அறிக்கை
சத்துணவு அமைப்பாளர் மகேஸ்வரி முறையாக பதிவேடுகளை பராமரிக்காததும், கெட்டுப்போன முட்டைகள் குறித்து மேலதிகாரிகளுக்கு தகவல் அளிக்காமல் தன்னிச்சையாக குப்பைத் தொட்டியில் போட்டுள்ளார் என்பதும் விசாரணையில் தெரிய வருவதாகவும் மேலும், முட்டைகளை தரம் பார்த்து 3 நாட்களுக்குள் பயனாளிகளுக்கு கொடுக்க தவறியதாகவும் விசாரணை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பணி நீக்கம்
சத்துணவு அமைப்பாளர் மகேஸ்வரியின் கவனக்குறைவான செய்கையினால் மாவட்ட நிர்வாகத்திற்கும், சத்துணவு திட்டத்திற்கும் அவப்பெயர் ஏற்படும் சூழல் உருவாகியதால் உரிய நபர் மீது தற்காலிக பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சத்துணவில் கெட்டுப்போன முட்டைகள் குறித்து மட்டும் விசாரிக்கச் சொன்னால், அந்த தகவலை ஊடகங்களுக்கு யார் கூறியது என்பதும் விசாரிக்கப்பட்டிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

தேவையற்ற ஆராய்ச்சி
திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அங்கம் வகித்து வரும் நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகியால் தான் இந்த விவகாரம் ஊடகங்களுக்கு சென்றது என்பன போன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். சத்துணவில் கெட்டுப்போன முட்டைகள் வந்தது எப்படி என்பதை மட்டும் ஆராயாமல் அந்த தகவலை ஊடகங்களுக்கு வெளியிட்டது யார் என்ற ஆராய்ச்சி தேவையற்ற ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications