வரதட்சணை கொடுமையால் விபரீத முடிவெடுத்த ரிதன்யா.. மாமியாரையும் கைது செய்தது காவல் துறை
திருப்பூர்: வரதட்சணைக் கொடுமையால் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் மாநிலத்தையே உலுக்கியுள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே ரிதன்யாவின் கணவரும், மாமனாரும்ம் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மாமியார் சித்ராதேவியையைும் போலீஸார் கைது செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி கைகாட்டி புதூர் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை என்பவரின் மகளான 27 வயது ரித்தன்யாவுக்கும், திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கிருஷ்ணன் என்பவரது மூத்த மகன்வழிப் பேரன் கவின் குமார் என்பவருக்கும் இரண்டு மாதங்களுக்கு முன்பு பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.

திருமணமானவது முதலே கணவர் கவின்குமாரும், அவரது தந்தை ஈஸ்வரமூர்த்தி, தாய் சித்ராதேவி ஆகியோர் தொடர்ந்து ரிதன்யாவை வரதட்சணை கேட்டு கொடுமை செய்து வந்ததாகவும், கணவரும் மன ரீதியாகவும், தொடர்ந்து உடல் ரீதியாகவும் ரிதன்யாவை டார்ச்சர் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், ரிதன்யா தொடர்ந்து மன அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளார்.
இதையடுத்து தனது உயிரை மாய்த்துக் கொள்ள முடிவெடுத்த ரிதன்யா கோவிலுக்குச் சென்று வருவதாக கூறிவிட்டு, சாலையோரத்தில் காரை நிறுத்தி தனது தந்தைக்கு வாட்ஸ் அப் மூலம் சில ஆடியோக்களை அனுப்பியுள்ளார். அதில், தனது கணவரின் வீட்டார் தனக்கு செய்து வந்த கொடுமைகள் குறித்தும், தன்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கவின்குமார் கொடுமைப்படுத்தியது குறித்தும் கூறியுள்ளார்.
வேறு ஒருவருடன் வாழ்க்கையைத் துவக்கவும் தனக்கு விருப்பமில்லை. எனது வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன் என்று கூறிவிட்டு, தென்னை மரத்திற்கு வைக்கும் பூச்சி மருந்தை உட்கொண்டு தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இச்சம்பவத்தில் ரிதன்யாவுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து, கவின்குமார், ரிதன்யாவின் மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து, கவின்குமார், ஈஸ்வரமூர்த்தியை போலீஸார் கைது செய்தனர். மாமியாரையும் கைது செய்ய வேண்டும் என்று ரிதன்யா குடும்பத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும், இவர்களுக்கு ஜாமீன் அளிக்க கூடாது என்றும், சிபிசிஐடி விசாரணை செய்ய வேண்டும் என்றும் ரிதன்யாவின் குடும்பத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், ரிதன்யாவின் கணவர் தாக்கல் செய்த ஜாமீன் மனு ஜூலை 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து திருப்பூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. ரிதன்யாவின் கணவர், மாமனார் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மாமியார் சித்ராதேவியையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications