இதோ ஆரம்பிச்சிட்டாங்க.. செங்கோட்டையனுடன் தவெக நிர்வாகிகள் வாக்குவாதம்! 10 வருஷமா இருக்கோம் என கோபம்
திருப்பூர்: வெளியூரை சேர்ந்தவர்களுக்கு பதவி வழங்குவதாகவும், 10 வருஷமாக விஜய் மக்கள் இயக்கத்தில் இருக்கும் எங்களுக்கு எதுவும் இல்லையா எனவும் செங்கோட்டையனை முற்றுகையிட்டு திடீரென தவெக நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் வெள்ளக்கோவிலில் தவெக நகர அலுவலகம் திறக்க செங்கோட்டையன் வருகை தந்த போது இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது. எனினும் அவர்களை செங்கோட்டையன் அழைத்து பேசி சமாதானப்படுத்தினார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கடந்த நவம்பர் மாதம் தவெகவில் இணைந்தார். தவெகவில் இணைந்த செங்கோட்டையனுக்கு நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பும், கொங்கு மண்டல அமைப்பாளர் பொறுப்பும் அளிக்கப்பட்டது.

தவெகவை வலுப்படுத்தும் செங்கோட்டையன்
கொங்கு மண்டலத்தில் தவெகவின் முக்கிய முகமாக மாறியுள்ள செங்கோட்டையன் அண்மையில் ஈரோட்டில் விஜய்யின் மக்கள் சந்திப்பு கூட்டத்தையும் வெற்றிகரமாக நடத்திக் காட்டினார். இதன்பின் அதிமுக மாஜிக்களை தவெக பக்கம் கொண்டு வரும் முயற்சியில் செங்கோட்டையன் ஈடுபட்டு வருகிறார்.
அதேபோல் அமமுக மற்றும் ஓபிஎஸ் ஆகியோரை தவெக கூட்டணிக்குள் கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்தவும் செங்கோட்டையனிடம் பொறுப்பு அளிக்கப்பட்டது. செங்கோட்டையன் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுவதாகவும், தன்னை நம்பி தவெகவிற்கு வருமாறு அழைப்பு விடுத்ததாகவும் தகவல் வெளியானது.
அதிருப்தியில் இருப்பவர்களை இணைக்கும் முயற்சி
சட்டமன்ற தேர்தலில் அதிமுகவில் யாருக்கு எல்லாம் சீட் கிடைக்காதோ, யாரெல்லாம் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்காமல் அதிருப்தியில் இருக்கிறார்களோ அவர்களுடன் செங்கோட்டையன் தொடர்பில் இருப்பதாக சொலப்படுகிறது. செங்கோட்டையனை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் பலரும் தவெகவில் இணைந்து வருகிறார்கள்.
கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து தொகுதிகளையும் வெற்றி பெற வைப்பது செங்கொட்டையன் பொறுப்பு, அவருக்கு பக்க பலமாக இருப்போம் என்று தவெக பொதுச்செயாலாளர் என். ஆனந்தே ஒரு கூட்டத்தில் பேசினார். அந்த அளவிற்கு செங்கோட்டையன் கை தற்போது தவெகவில் ஓங்கியுள்ளது.
செங்கோட்டையனை முற்றுகையிட்ட தவெகவினர்
திருப்பூர், கோபிசெட்டி பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் செங்கோட்டையன் தொடர்ந்து கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். தவெக பூத் அளவில் வலுப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில்தான், திருப்பூர் வெள்ளக்கோவிலில் தவெக நகர அலுவலகம் திறக்க செங்கோட்டையன் வருகை தந்தார்.
அப்போது செங்கோட்டையனை திடீரென முற்றுகையிட்ட தவெக நிர்வாகிகள், அவருடன் வாக்குவாதம் செய்தனர். 10 ஆண்டுகளுக்கும் மேலாக விஜய் மக்கள் இயக்கத்தில் பயணித்தவர்களுக்கு பொறுப்பு தரவில்லை என்று குற்றம் சாட்டி செங்கோட்டையனுடன் வாக்குவாதம் செய்தனர்.
சமாதானப்படுத்தி வைத்தார்
இதையடுத்து, அலுவலகம் வாருங்கள் பேசலாம் எனக் கூறி செங்கோட்டையன், தவெகவினரை சமாதானப்படுத்தி வைத்தார். செங்கோட்டையனை திடீரென முற்றுகையிட்டு தவெகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டது அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதன் பின்னர் செங்கோட்டையன் ரிப்பன் வெட்டி, தவெக நகர அலுவலகத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து குத்து விளக்கில் தீபம் ஏற்றி வைத்தார். முன்னதாக திருப்பூர் வெள்ளக்கோவிலில் தவெக நகர அலுவலகம் திறப்பு விழாவிற்கு வருகை தந்த செங்கோட்டையனுக்கு தவெக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications