திருப்பூர், கோவையிலிருந்து சொந்த ஊர் போகும் புலம்பெயர் தொழிலாளர்கள்.. டிரம்ப் வரியால் வேலையிழப்பு
சென்னை: அமெரிக்கா விதித்திருக்கும் வரி காரணமாக திருப்பூர், கோவையில் ஆடை உற்பத்தி தொழில்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. எனவே வேலை வாய்ப்புகள் இல்லாததால் வடமாநில தொழிலாளர்கள், சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்கின்றனர். இதனால் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டிருக்கிறது.
திருப்பூர் மற்றும் கோவையில் இருந்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ஆடைகள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. திருப்பூரில் இருந்து உற்பத்தியாகும் மொத்த ஆடையில் சுமார் 35 லிருந்து 40 சதவீதம் அளவுக்கு அமெரிக்காவுக்குதான் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. ஆனால் டிரம்ப் விதித்த வரி காரணமாக இந்த ஏற்றுமதி பாதிப்படைந்திருக்கிறது. ஏற்கெனவே உற்பத்தி செய்யப்பட்ட ஆடைகள் தேங்கியதால் வேலை இழப்புகள் அதிகரித்திருக்கின்றன.

திருப்பூரின் பலம்
திருப்பூரில் ஏற்றுமதியை நம்பி இயங்கி வந்த 2,500க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் சுமார் 20% நிறுவனங்கள் மொத்தமாக மூடப்பட்டிருக்கின்றன. இந்தியாவின் மொத்த ஜவுளி ஏற்றுமதியில் சுமார் மூன்றில் ஒரு பங்கை திருப்பூர் கையில் வைத்திருக்கிறது. இப்படி இருக்கையில் அமெரிக்காவின் 50% வரி காரணமாக ஆர்டர்கள் குறைந்துவிட்டன மட்டுமல்லாது ஏற்கனவே உற்பத்தி செய்த ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படாமல் அப்படியே தேங்கிக் கிடக்கின்றன. இதன் காரணமாக பல நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை 50 சதவீதத்திற்கும் குறைவாக குறைத்து இருக்கின்றன.

உற்பத்தி நிறுத்தம்
உற்பத்தியை குறைத்ததால் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமலும் தொடர்ந்து ஆலய இயக்க முடியாமலும் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. ஆடை உற்பத்தி மட்டுமல்லாது அதை சார்ந்து இருக்கும் சாயம் பூசும் யூனிட், தையல் பட்டறைகள், பட்டன் மற்றும் இதர துணைப் பொருட்கள் சப்ளையர்கள், போக்குவரத்து நிறுவனங்கள், மின்சார ஊழியர்கள், இயந்திரம் பழுது பார்ப்பு தொழில்நுட்ப வல்லுநர்கள் என துணை தொழில்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
வேலை இழப்பு
எனவே ஆயிரக்கணக்கான வடமாநில புலம்பெயர் தொழிலாளர்கள் வேலையை இழந்திருக்கின்றனர். ஜவுளி துறையில் வேலை இழப்பு காரணமாக புலம்பெயர் தொழிலாளர்களில் பலரும் சொந்த மாநிலங்களுக்கு திரும்ப விரும்பினாலும், இளைஞர்கள் பலர் சென்னை உள்ளிட்ட நகரங்களில் கட்டுமானம் போன்ற இதர துறைகளில் வேலைகளை தேடி அலைகின்றனர். வேலை கிடைத்தாலும் போதுமான அளவுக்கு ஊதியம் கிடைப்பதில்லை என்று தொழிலாளர்கள் வேதனை தெரிவித்திருக்கின்றனர்.
வேலை இழப்பு காரணமாக ஆயிரக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், சொந்த மாநிலத்திற்கு செல்வதற்காக காத்திருக்கின்றனர்.

தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள்
தமிழ்நாட்டை பொறுத்த வரையில், ஒடிசாவிலிருந்து வரும் புலம்பெயர் தொழிலாளர்கள்தான் அதிகம். தமிழகத்தில் வேலை பார்க்கும் மொத்த புலம்பெயர் தொழிலாளர்களில் ஒடிசாவை சேர்ந்தவர்கள் 26.2% (2.89 லட்சம்), இவர்களுக்கு அடுத்தபடியாக பீகாரை சேர்ந்தவர்கள் 22.7% (2.51 லட்சம் பேர்) வேலை பார்க்கிறார்கள். அதேபோல ஜார்க்கண்ட் மற்றும் மேற்குவங்க தொழிலாளர்கள் 17.2% (1.90 லட்சம்), அசாம் மாநிலத்திலிருந்து 8.4% (93,175) மற்றும் உத்தரப் பிரதேசத்திலிருந்து 8.3% (91,497) அளவில் தொழிலாளர்கள் தமிழகத்தில் வேலை பார்த்து வருகின்றனர்.
வரி காரணமாக இந்தியாவில் ஏற்றுமதி பாதிக்கப்பட்டிருப்பதால், இந்தியாவுக்கு பதில் வங்கதேசம் மற்றும் வியட்நாம் நாடுகளில் இருந்து ஆடைகளை அமெரிக்கா இறக்குமதி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications