நடிகர் உதயநிதிக்காக திமுக இளைஞர் அணி செயலாளர் பதவி ராஜினாமாவா? வெள்ளகோவில் சாமிநாதன் விளக்கம்
திருப்பூர்: நடிகர் உதயநிதிக்காக திமுக இளைஞர் அணி செயலாளர் பதவியை தாம் ராஜினாமா செய்ததாக வெளியான செய்திகள் வதந்தி என்று வெள்ளகோவில் சாமிநாதன் விளக்கம் அளித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதியை அக்கட்சியின் இளைஞர் அணி செயலாளராக நியமிக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். லோக்சபா தேர்தல் முடிவடைந்த உடன், திமுகவின் சில மாவட்டங்களில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பழனி தொகுதி எம்.எல்.ஏ. ஐ.பி. செந்தில்குமார், கருணாநிதியின் நினைவிடத்தில் இந்த கோரிக்கையை வைக்கப் போவதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். மேலும் திமுக இளைஞர் அணி செயலாளராக இருக்கும் வெள்ளகோவில் சாமிநாதன் அப்பதவியை ராஜினாமா செய்துவிட்டதாகவும் கூறப்பட்டது.
அதேநேரத்தில் திமுக ஆதரவாளர்கள் பலரும், இந்த வாரிசு அரசியலை கடுமையாக எதிர்த்தனர். இப்போதே நடிகர் உதயநிதி ஸ்டாலினுக்கு கட்சிப் பதவி கொடுப்பது அதிருப்திகளைத்தான் உருவாக்கும் எனவும் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
இதனால் உதயநிதியை திமுக இளைஞர் அணி செயலாளராக்கும் முயற்சிகள் திடீரென ஒத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில் திருப்பூரில் நேற்று குடிநீர் பிரச்சனையை தீர்க்க கோரி திமுக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வெள்ளகோவில் சாமிநாதன் செய்தியாளர்களிடம் பேசுகையில், இளைஞரணி செயலாளர் பதவியை நான் ராஜினாமா செய்யவில்லை. என்னை அப்பதவியில் நியமித்தது மு.க.ஸ்டாலின். அவர் நினைத்தால் என்னை மாற்றலாம். இதற்காக நான் ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை. கட்சி தலைமை எடுக்கும் எந்த முடிவுக்கும் நான் கட்டுப்படுவேன் என்றார்.











Click it and Unblock the Notifications