"காசை வச்சிட்டு வண்டியை எடு பய்யா".. திருப்பூரில் தமிழரை மடக்கி.. வம்பு செய்த வட இந்தியர்கள்.. ஷாக்
"செல்போன் கீழே விழுந்த சேதத்திற்காக என்னிடம் இருந்த 500 ரூபாயை கொடுத்துவிட்டேன். என்னிடம் இப்போதைக்கு பணம் இல்லை. நாளை வேண்டுமானால் கொடுத்துவிடுகிறேன். எனது மகள் சிறப்பு வகுப்பு முடிந்து பள்ளியில் காத்துக் கொண்டிருக்க
திருப்பூர்: திருப்பூரில் தமிழர் ஒருவரை மடக்கி வட இந்தியர்கள் பணம் கேட்டு வாக்குவாதம் செய்யும் வீடியோதான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வட இந்தியர்கள் மீது பைக் லேசாக மோதியதை தொடர்ந்து, அந்த நபரை வட இந்தியர்கள் சூழ்ந்து கொண்டு பணம் கேட்டு மிரட்டுவது வீடியோவில் பதிவாகியுள்ளது.
ஏற்கனவே வட இந்தியர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்படுவது போன்ற வீடியோக்களும், செய்திகளும் பரவி வரும் நிலையில், இந்த வீடியோ மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வட இந்தியர்கள் ஆதிக்கம்?
சமீபகாலமாக, உத்தரபிரதேசம், பீகார், குஜராத் போன்ற வட மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தமிழகத்திற்கு வருவது அதிகரித்துள்ளது. கட்டுமானத் தொழில், துணி தொழிற்சாலைகள் ஆகியவற்றில் வட மாநிலத்தவர்கள்தான் தற்போது அதிக அளவில் வேலை செய்து வருகின்றனர். குறிப்பாக, சென்னை, திருப்பூர், கரூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் வட மாநிலத்தவர்கள் அதிக அளவில் இருக்கிறார்கள். இதனால் அந்தப் பகுதிகளில் சிறிது சிறிதாக அவர்கள் ஆதிக்கம் செலுத்துவது அதிகரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

திருப்பூர் சம்பவம்
அந்த வகையில், திருப்பூரில் கடந்த வாரம் தமிழக தொழிலாளர்களை வட மாநிலத் தொழிலாளர்கள் விரட்டி விரட்டி தாக்குவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, இது மிகவும் பழைய வீடியோ என்றும், வட மாநிலத்தவர்கள் தொடர்பான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும் காவல்துறை கேட்டுக்கொண்டது. இந்நிலையில், அதேபோன்ற ஒரு வீடியோ இன்று வெளியாகியுள்ளது. அதுகுறித்த விவரங்களை பார்ப்போம்.

பைக் லேசாக மோதியது
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் கொங்குபாளையம் சாலையில் சம்பத் குமார் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் இரவு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது மோட்டார் சைக்கிளில் ஹெட்லைட் பழுதாகி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருட்டில் அங்கு நின்றிருந்த வட மாநிலத்தவர்கள் மீது அவரது பைக் லேசாக உரசியதாக தெரிகிறது. இதில் அங்கிருந்த வடமாநில இளைஞர் ஒருவரின் செல்போன் கீழே விழுந்துள்ளது.

"பைக்கை தர முடியாது"
இதையடுத்து, அங்கிருந்த வடமாநிலத்தவர்கள் சம்பத் குமாரின் பைக்கை வாங்கி வைத்துக் கொண்டு, பணம் கொடுத்தால்தான் பைக்கை தருவோம் எனக் கூறி மிரட்டுகிறார்கள். அதற்கு சம்பத் குமாரோ, "செல்போன் கீழே விழுந்த சேதத்திற்காக என்னிடம் இருந்த 500 ரூபாயை கொடுத்துவிட்டேன். என்னிடம் இப்போதைக்கு பணம் இல்லை. நாளை வேண்டுமானால் கொடுத்துவிடுகிறேன். எனது மகள் சிறப்பு வகுப்பு முடிந்து பள்ளியில் காத்துக் கொண்டிருக்கிறாள். எனது பைக்கை கொடுத்துவிடுங்கள் என கெஞ்சுகிறார். ஆனால், அவர்களோ "பணம் வைத்துவிட்டு பைக்கை எடுத்துக் கொள்" என இந்தியும் தமிழும் கலந்து பேசுகின்றனர்.

போலீஸ் எச்சரிக்கை
இந்த வீடியோவானது சமூக வலைதங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், இதுகுறித்து திருப்பூர் போலீஸார் தற்போது விளக்கம் அளித்துள்ளனர். அதில், "குறிப்பிட்ட சம்பவத்தில் இருதரப்பினரும் சமாதானமாகி சென்றுவிட்டனர். ஆனால் வாக்குவாதம் நடந்த வீடியோவை பரப்பி சிலர் வதந்திகளை பரப்பி வருகின்றனர். இதுபோன்று வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என போலீஸார் எச்சரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications