‘அக்னிபத்’! சிக்கலில் மத்திய அரசு! திருப்பூருக்கு பறந்த உத்தரவு! ரயில் நிலையத்தில் போலீஸ் குவிப்பு!
திருப்பூர் : 'அக்னிபத்' ஆட்சேர்ப்பு திட்டத்திற்கு எதிராக வட மாநிலங்களில் வன்முறை ஏற்பட்டுள்ள நிலையில், திருப்பூரில் வட மாநில தொழிலாளர்கள் அதிக அளவில் இருப்பதால் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது
இந்திய ஆயுதப்படையை பலப்படுத்துவதன் ஒரு பகுதியாக, முப்படைகளில் இளம் வீரர்களை அதிகளவில் சேர்ப்பதற்கான புதிய 'அக்னிபத்' ஆட்சேர்ப்பு திட்டத்திற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சரவை கடந்த சில தினங்களுக்கு முன் ஒப்புதல் அளித்தது.
இத்திட்டத்தின் கீழ் ராணுவம், விமானப்படை, கடற்படையில் சேரும் 17.5 வயது முதல் 21 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் 4 ஆண்டுகள் மட்டுமே பணியில் இருப்பார்கள்.
முட்டாள்தனம்! சங்பரிவாரங்களை முப்படைகளுக்குள் புகுத்தும் அக்னிபத்? அனல் காட்டிய கே.எஸ்.அழகிரி!
அக்னிபத் திட்டம்
4 ஆண்டு கால சேவை முடிந்த பின் அக்னி வீரர்களில் 25 சதவீதம் பேர் ராணுவத்தில் நிரந்தரமாக 15 ஆண்டு ஒப்பந்தத்தில் சேர அனுமதிக்கப்படுவார்கள். அரசின் அக்னிபாத் ராணுவ வீரர்கள் ஒப்பந்த சேர்க்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பீகாரில் சமஸ்திபூரில் பயணிகள் ரயிலின் 2 பெட்டிகளுக்கு இளைஞர்கள் தீ வைத்தனர். பல மாநிலங்களில் வன்முறை நிகழ்ந்து வரும் நிலையில், தமிழகத்திலும் சில இடங்களில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பலத்த போலீஸ் பாதுகாப்பு
இதன் எதிரொலியாக திருப்பூர் ரயில் நிலையத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் ஏற்பாடுகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக திருப்பூரில் வட மாநில தொழிலாளர்கள் அதிக அளவில் இருப்பதால் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு ரயில் நிலையத்திற்கு வருபவர்களை முழுமையாக சோதனை செய்த பின்னர் உள்ளே அனுமதித்து வருகின்றனர்.
ரயில்வே பாதுகாப்பு படை
மேலும் ஒரு வேளை கலவரம் ஏற்பட்டால் அதனை கட்டுப்படுத்தும் வகையில் ஆயுதப்படை வாகனங்களும் , வஜ்ரா உள்ளிட்ட வாகனங்களும் ரயில் நிலைய வளாகத்தில் சுற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. திருப்பூரில் வசிக்கும் வடமாநில இளைஞர்கள் ஒரு வேலைத் திட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடலாம் என தகவல் வந்ததாகவும், இதனை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில் நிலையத்தை சுற்றிலும் போலீசார் ரயில்வே பாதுகாப்பு படை பிரிவு போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மத்திய அரசு எச்சரிக்கை
தொடர்ந்து இங்கு நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது. எந்தப் பிரச்சினை வந்தாலும் உடனடியாக அதை தடுக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என திருப்பூர் போலீசார் கூறியுள்ளனர். அக்னிபத் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப்படலாம் என்பதால் மாநில அரசுகள் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு ஏற்கனவே எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.