விஜய் ஆட்சியிலும் டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்குவது ஏன்.. பின்னணி
திருப்பூர்: ஆட்சி மாறினாலும் காட்சி மாறாமல் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வாங்கும் பழக்கம் இன்றும் தொடர்கிறது. கண்டிக்க வேண்டிய அதிகாரிகளோ, அரசோ அதனை பெயரளவுக்கு நடவடிக்கை எடுத்துவிட்டு கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள். தமிழ்நாடு அரசே நினைத்தாலும் 10 ரூபாய் அதிகம் வாங்குவதை தடை செய்வது சாத்தியம் குறைவு தான்.. காரணம்.. அரசு டாஸ்மாக் ஊழியர்கள் சரியான சம்பளம் தரவில்லை.. அவர்கள் அதிக சம்பளம் பெற இதனை ஒரு வழியாக இருப்பதால் கண்டு கொள்ளாமல் இருப்பதாக கூறப்படுகிறது. எந்த அரசு வந்தாலும் இதுதான் நிலையாக இருப்பதாகவும் கூறப்படகிறது.
தமிழகத்தில் விஜய் தலைமையிலான தவெக அரசு புதிதாக அமைந்த நிலையில் வழிபாடு தலங்கள், பஸ் நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் அருகில் இருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின்படி 717 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. 276 வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள கடைகள், 186 கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள கடைகள் மற்றும் 255 பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள கடைகள் என அடையாளம் காணப்பட்டு மூடப்படும் நடவடிக்கை தொடங்கி உள்ளது.

இந்நிலையில் ஆட்சி மாறினாலும் காட்சி மாறாமல் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வாங்கும் பழக்கம் தொடர்கிறது. "பாட்டிலில் உள்ள எம்.ஆர்.பி. விலைப்படி விற்பதில்லை. வேறு வழியில்லாமல் வாங்கிச் செல்ல வேண்டியுள்ளது" என்று மதுப்பிரியர்கள் கவலை தெரிவிக்கிறார்கள். மது விலக்கு துறைக்கு திமுக ஆட்சியில் செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்த போது 10 ரூபாய் வாங்கினார்கள். அதற்கு முன்பு எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியிலும் வாங்கினார்கள். அதற்கு முன்பு ஜெயலலிதா ஆட்சியிலும் வாங்கினார்கள். கிட்டத்தட்ட 15, 20 வருடங்களாக எம்ஆர்பி விலையைவிட 10 ரூபாய் அதிகம் வாங்குவது தொடரத்தான் செய்கிறது. யார் ஆட்சிக்கு வந்தாலும் 10 ரூபாய் கூடுதலாக வாங்குவது மாறவில்லை...
இது தவறு தான் என்றாலும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு வேறுவழியில்லை என்கிற நிலை உள்ளதாம். மேலிட அதிகாரிகள் கேட்கும் லஞ்சம் ஒருபுறம் எனில், மறுபுறம் டாஸ்மாக் ஊழியர்களுக்கு அரசு தரும் சம்பளமும் மிக குறைவு. குறைவான சம்பளம் வாங்கி 10 மணி நேரம் வேலை செய்யும் ஊழியர்கள் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்கும் பணத்தை தான் சம்பளமாகவே பெறும் நிலை இருக்கிறதாம். தினமும் கடைக்கு வந்த செல்லவும், கடைகளில் அன்றாடம் ஏற்படும் சிக்கல்கள், உடையும் பாட்டில்களுக்கான பணம் மற்றும் சரக்குகளை இறக்கி வைப்பர்கள் கேட்கும் கூடுதல் தொகை போன்ற பல்வேறு காரணங்களால் அதற்கும் அவர்கள் செலவு செய்ய வேண்டியுள்ளதாம்.
இன்னும் தெளிவாக சொல்வது என்றால், டாஸ்மாக் ஊழியர்கள் வாங்கும் சம்பளம் மிக குறைவு. 10 ஆயிரம் 15 ஆயிரம் சம்பளத்திற்கு வேலை செய்யும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு, அரசு ஊழியர்களுக்கு உண்டான சலுகையோ வசதியோ கிடையாது. எனினும் இந்த வேலை செய்யும் அவர்கள், பாட்டிலுக்கு கூடுதலாக கிடைக்கும் சம்பளத்தை ஊதியமாக பயன்படுத்துகிறார்கள். இதுதான் நடைமுறையில் உள்ள சிக்கலுக்கு காரணமாக உள்ளது. அவர்கள் நல்ல சம்பளம் வாங்கியிருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது.
ஒருவேளை அரசு டாஸ்மாக்கில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு நியாயமான ஊதியம் கொடுத்தும் அவர்கள் கூடுதலாக 10 ரூபாய் வாங்கினால், அவர்களை அந்த நிமிடமே சஸ்பெண்ட் கூட செய்யலாம். ஏற்கனவே பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்கினால் சஸ்பெண்ட் செய்யப்படுவதும் இருக்கிறது.bஆனால் நடைமுறையில் அது பெரிய அளவில் செய்யப்படுவது இல்லை. மதுப்பிரியர்கள் ஒவ்வொருவரும் வீடியோ எடுத்து அதனை அரசை டேக் செய்து நடவடிக்கை எடுக்கக்கூறலாம்.
அரசு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்கினால் புகார் அளிக்க தொலைப்பேசி எண் அறிவிக்க வேண்டும். அந்த எண்ணில் புகார் அளித்த அடுத்த நாளே அவர்களை சஸ்பெண்ட் செய்ய தொடங்கினால், நிச்சயம் மாற்றம் வரும்.. அதற்கு முன்பு அரசு 10 ரூபாய் வாங்கினால் வேலை பறிக்கப்படும் என்பதை அறிவித்து எச்சரிக்கை செய்ய வேண்டும்.. எல்லாவற்றுக்கும் மேலாக மனிதாபிமானத்துடன், அவர்களுக்கான நியாயமான ஊதியத்தை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும். அதுதான் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக இருக்கும்.














Click it and Unblock the Notifications