திருப்பதி உண்டியல் எண்ணும் பணியில் இருந்தவர் நைசாக சுருட்டிய பணம் 100 கோடி.. வெளியான திடுக் தகவல்
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தும் அமெரிக்க டாலர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகளை தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர், மலக்குடலில் வைத்துக் கடத்தி 100 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பணத்தின் மூலமாக தங்க நகைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், மாந்தோப்பு, தென்னந்தோப்பு என வாங்கிக் குவித்து ஆடம்பரமாக வாழ்ந்து வந்துள்ள இச்சம்பவம் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகியுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினமும் உள்ளூர், வெளியூர், வெளிநாடு என பல லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்கள் நாள்தோறும் சுமார் 4 கோடிக்கு மேல் காணிக்கையாக மட்டும் செலுத்தி வருகின்றனர். இதில், தங்கம், வெள்ளியாலான நகைகள், நாணயங்கள், வெளிநாட்டு கரன்சிகள் உள்ளிட்டவையும் அடங்கும். இந்த நிலையில் தான் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் இருந்த ஒருவர் ரூ. 100 கோடி அளவுக்கு மோசடி செய்த அதிர்ச்சி சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழகத்தை சேர்ந்தவர் ரவிக்குமார். இவர் திருமலை பெரிய ஜீயர் மடத்தில் பணியாற்றி வந்தார். இதன் மூலமாக ஏற்பட்ட பழக்கத்தின் அடிப்படையில் ரவிக்குமாரை சுமார் 20 ஆண்டுகளாக காணிக்கை பணம் கணக்கிடும் ஊழியர்களில் ஒருவராக தேவஸ்தான நிர்வாகம் நியமித்தது. இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் உண்டியல் காணிக்கை பணம் எண்ணும் பகுதியில் இருந்து வெளியே வந்த அவரைப் பிடித்து, தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர் தீவிர சோதனைக்கு உட்படுத்தினர்.
அப்போது, அவர் தனது மலக்குடலில் அமெரிக்க டாலர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகளை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, தேவஸ்தானம் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து ரவிக்குமாரை கைது செய்தனர். போலீஸ் விசாரணையில், காணிக்கை எண்ணும் பணியின்போது தினமும் ஏழுமலையானுக்கு காணிக்கையாக கிடைக்கும் வெளிநாட்டு கரன்சிகளை திருடியதை ரவிக்குமார் ஒப்புக் கொண்டார். மேலும், அந்த பணத்தின் மூலமாக சுமார் ரூ.100 கோடி மதிப்பில் நகைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், மாந்தோப்பு, தென்னந்தோப்பு என சொத்துகளை வாங்கிக் குவித்து ஆடம்பரமாக வாழ்ந்திருப்பதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து வெளியே தெரியவந்தால் பக்தர்களின் நம்பிக்கை குறைந்துவிடும் என்பதால் தேவஸ்தானம், லோக் அதாலத்திற்கு இப்பிரச்னையைக் கொண்டு சென்றது. அப்போது, திருடப்பட்ட பணத்தின் மூலம் வாங்கப்பட்ட சொத்துகளின் ஒரு பகுதியை தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக கொடுப்பதுபோல ரவிகுமாரிடமிருந்து எழுதி வாங்கியுள்ளனர். இதற்கு தேவஸ்தான அறங்காவலர் குழுவும் ஒப்புதல் அளித்துள்ளது.
இச்சம்பவம் குறித்து ஆந்திர மேல் சபை உறுப்பினர் ஒருவர், மாநில அறநிலையத் துறை அமைச்சர் ஆனம் விவேகானந்த ரெட்டியிடம் சமீபத்தில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து, ஆந்திர சட்டமன்ற மேல்சபையில் அமைச்சர் இந்த முறைகேடு குறித்து பேசினார். இதைத்தொடர்ந்து, இப்பிரச்னை தற்போது வெடித்துள்ளது. வெளிநாட்டு கரன்சிகளை பதுக்குவதற்காக, ரவிக்குமார் சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் தன்னுடைய மலக்குடலை பெரிதுபடுத்திக் கொண்டார் என்றும், அவருக்கு இந்த ஆலோசனை வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்துபவர்கள் மூலம் தெரியவந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications