தண்ணீர் தருகிறான்.. கயிறை இழுத்து பிடிக்கிறான்.. ஓரிடத்தில் இல்லை.. சுஜித்துக்காக ஓடியாடும் மாதேஷ்
Recommended Video
மணப்பாறை: "எப்படியாவது மீண்டு வந்துடு சுஜித்".. என்ற பொதுமக்களின் பிரார்த்தனைகள், உருக்கமான பதிவுகளுக்கு நடுவே ஒரு சிறுவனின் செயல்பாடுகள் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்து வருகிறது.
மணப்பாறை அருகே நேற்று மாலை விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜித்தை மீட்கும் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.
26 அடி ஆழ கிணறு என்பதால் உடனே குழந்தையை வெளியே எடுத்து விடுவார்கள் என்றுதான் நம்பப்பட்டது. ஆனால், விடிய விடிய மீட்பு பணிகள் நடைபெறும் என்பது யாரும் எதிர்பாராத ஒன்று.
அமைச்சர்கள், எம்எல்ஏ, அதிகாரிகள், கலெக்டர், டாக்டர்கள், என எல்லாருமே சுஜித்தை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இரவெல்லாம் நடந்த மீட்பு பணியின்போதுகூட, இவர்கள் எல்லாருமே இங்கேயே முகாமிட்டனர்.
இவர்களுக்கு இடையே 14 வயது சிறுவனின் துடிப்பு நிறையவே தென்பட்டது. இவன் பெயர் மாதேஷ்.. ராத்திரி 8 மணிக்கு சம்பவ இடத்துக்கு வந்தவன்.. குழந்தையை மீட்க தன்னால் ஆன உதவிகளை செய்து வருகிறான்.
சுஜித்தை காப்பாற்ற விரைந்த அண்ணா பல்கலை. பேராசிரியர் குழு.. டிராபிக் நெரிசலில் சிக்கியதால் தாமதம்
மீட்பு குழுவினர் ஒரு பக்கம் குழந்தையை எடுக்க போராடுகிறார்கள் என்றால், இந்த மாதேஷ் இங்குமங்கும் ஓடுகிறான்.. பதைபதைக்கிறான்.. மீட்பு குழுவினர் பக்கத்திலேயே இருந்து அவர்களுக்கு என்ன வேண்டுமோ அதை எடுத்து எடுத்து தந்து கொண்டிருக்கிறான்.. தண்ணீர் தருகிறான்.. கயிறை இழுத்து பிடிக்கிறான்.. அவன் கால்கள் ஓரிடத்தில் இல்லை.. அவன் முகமெல்லாம் பதற்றமாகவே தென்படுகிறது.
குழந்தைக்கு என்ன ஆச்சோ என்று திரண்டு வந்த கிராம மக்கள், மாதேஷின் செயல்பாடுகளையும் கவனிக்க தவறவில்லை. 'சுஜித் பத்திரமா மேலே வந்துவிட மாட்டானா' என்ற ஆர்வமும், ஆசையும், ஆவலும் மாதேஷ் கண்களில் இருந்து இன்னமும் மறையவில்லை.. நமக்கும்தான்!