இதுதான் ட்விஸ்டு.. பாஜக-அமமுக கூட்டணி.. அறிவித்தார் டிடிவி தினகரன்! அண்ணாமலைக்கும் பாராட்டு
திருச்சி: வரும் லோக்சபா தேர்தலில் எந்தவித நிபந்தனையும் இன்றி பாஜகவுடன் கூட்டணி அமைத்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் போட்டியிடும்.. குக்கர் சின்னத்தில் தான் அமமுக போட்டியிடும் என்று இன்று திருச்சியில் டிடிவி தினகரன் கூறினார்.
லோக்சபா தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் கூட்டணி, மற்றும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. தமிழகத்தில் திமுக கூட்டணியில் கட்சிகளின் தொகுதி பங்கீடு முடிந்துள்ளது. அதே நேரத்தில் அதிமுக கூட்டணி இன்னும் உறுதியாகவில்லை. பாஜக தலைமையிலான கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம் பெறும் என்ற விவரம் வெளியாகவில்லை.

ஓபிஎஸ், மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் பாஜக கூட்டணிக்கு செல்லலாம் என்று கூறப்பட்டாலும் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. தாமரைச் சின்னத்தில் போட்டியிட பாஜக அறிவுறுத்தியதாகவும்,.. ஆனால், இதை டிடிவி தினகரன் ஏற்கவில்லை என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில், வரும் லோக்சபா தேர்தலில் நிபந்தனையின் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன் பேட்டி: இது தொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் கூறியதாவது:- மத்திய அமைச்சர் வி கே சிங் தமிழகம் வந்துள்ளார். அவரை என்னால் நேரடியாக நேரில் சென்று பார்க்க முடியவில்லை. இதனால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செல்போனில் என்னை தொடர்பு கொண்டார். அண்ணாமலையுடன் பேசி என்னுடைய ஆதரவை தெரிவித்தேன். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தொகுதி பங்கீடு தொடர்பான கோரிக்கைகளை ஏற்கனவே கடிதம் மூலம் அனுப்பியிருக்கிறேன்.
அணில் போல உதவியாக இருப்போம்: எல்லாவற்றையும் சமூகமாக பேசி, பாஜக தலைமையிலான இந்த கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்க என்னுடைய ஆதரவை நாங்கள் தெரிவிக்கிறோம். பிரதமர் மோடி தான் மீண்டும் பிரதமர் ஆவார் என்பது எல்லாருக்கும் தெரியும். தமிழகத்திலேயும் பாஜகவுக்கு சிறப்பான வெற்றியை பெற்று தருவதற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஒரு அணிவை போல உதவிகரமாக இருக்கும்.
எந்த நிபந்தனையும் இன்றி ஆதரவு: வரும் லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கூட்டணி அமைத்து போட்டியிடும். எந்த நிபந்தனையும் இன்றி அமமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும்.
பாஜகவினர் ஒரு ஆறு மாதங்களாக எங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக கடந்த இரண்டு, மூன்று மாதங்களாக எங்களிடம் தொடர்ந்து பேசினார்கள். எங்களுக்கு எந்த தொகுதி வேண்டும் என்பதில் பிரச்சனை இல்லை.
பாஜக நிர்பந்திக்கவில்லை: எத்தனை தொகுதி வேண்டும் என்பதிலும் பிரச்சினை இல்லை. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு எது நியாயமான கோரிக்கை என்பது தெரியும். எங்களது தேவை என்ன என்பது பாஜகவுக்கு தெரியும். இந்த லோக்சபா தேர்தலில் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட குக்கர் சின்னத்தில் தான் போட்டியிடுவோம். இதற்காக பாஜக எங்களை தாமரை சின்னத்தில் தான் போட்டியிடவேண்டும் என்றெல்லாம் நிர்பந்திக்கவில்லை.
பாஜக எங்களுக்கு எந்தவித அழுத்தத்தையும் கொடுக்கவில்லை. கூட்டணியில் சேர்வதற்கும், இந்த சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்பது போன்ற எந்த அழுத்தத்தையும் பாஜக கொடுக்கவில்லை. அண்ணாமலை புத்திசாலி. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications