ஓபிஎஸ் வெளியிட்ட அறிக்கை.. அதிரடியாக ஆக்சனில் திருச்சி போலீஸ்.. திமுக பிரமுகரை பிடிக்க தனிப்படை!
திருச்சி : திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மணல் கடத்தல் வழக்கில் தொடர்புடைய இடைநீக்கம் செய்யப்பட்ட திமுக நிர்வாகி ஆரோக்கிய சாமியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் பணியில் அலட்சியமாக இருந்ததாக போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ பன்னீர்செல்வம் கடந்த 15ம் தேதி வெளியிட்டிருந்த அறிக்கையில், திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே முத்தபுடையான்பட்டியில் மணல் கடத்துவதாக காவல் துறைக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து, தனிப்படை அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தியதாகவும், அப்போது மணல் அள்ளிக் கொண்டிருந்த ஒரு ஜேசிபி மற்றும் இரண்டு டிப்பர் லாரிகளை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும், அவற்றின் ஓட்டுநர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர். அப்போது, அந்த வாகனங்கள் மணப்பாறை கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் ஆரோக்கியசாமிக்கு சொந்தமானவை என்று தெரியவந்துள்ளது.
ஒரு வார்த்தை ஸ்பெல்லிங் மிஸ்டேக்கால்.. குழந்தையை பலாத்காரம் செய்தவர் விடுதலை.. கண்டுபிடித்த ஹைகோர்ட்
குற்றச்சாட்டு
அவர் கொடுத்த அழுத்தம் காரணமாக, மூன்று ஓட்டுநர்களை காவல் துறையினர் விடுவித்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை எடுத்துச் சென்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து, மூன்று ஓட்டுநர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களையும் காவல் துறையிடம் மீண்டும் ஒப்படைப்பது தொடர்பாக, மணப்பாறை காவல் துறை துணைக் கண்காணிப்பாளர், திமுக ஒன்றிய பொறுப்பாளர் ஆரோக்கியசாமி வீட்டுக்குச் சென்று நான்கு மணி நேரம் பேசியதாகவும், ஸ்ரீரங்கல் தொகுதி திமுக எம்எல்ஏ பழனியாண்டியும் இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், கடைசியாக இரண்டு பழைய வாகனங்களை ஒப்படைக்க சம்மதித்ததாகவும், ஓட்டுநர்களை கடைசி வரை ஒப்படைக்கவில்லை என்றும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன என்று ஓபிஎஸ் அறிக்கையில் கூறியிருந்தார்.
இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
இதையடுத்து மணல் கடத்தல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. திருச்சி சரகடிஐஜி ராதிகா இந்த விவகாரத்தில் நேரடியாக களம் இறங்கி விசாரணைக்கு உத்தரவிட்டார். அத்துடன் மணப்பாறை இன்ஸ்பெக்டர் அன்பழகனை பணியில் அலட்சியமாக இருந்ததாக பணியிடை நீக்கம் செய்தும் டிஐஜி ராதிகா உத்தரவிட்டார்,
என்ன நடந்தது
இதனிடையே மணல் கடத்தல் விவகாரம் தொடர்பான போலீசாரின் விசாரணையின், மணப்பாறை முத்தப்புடையான்பட்டி பகுதியில் கடந்த 12-ம் தேதி இரவு மணல் கடத்தல் தொடர்பான தகவலின்பேரில் தனிப்படைபோலீஸார் 2 டிப்பர், ஒரு பொக்லைன் ஆகியவற்றை பறிமுதல் செய்திருக்கிறார்கள். அவற்றை மணப்பாறை காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்கள்.
எடுத்துச்சென்ற திமுக பிரமுகர்
இந்நிலையில் வாகனங்களை மணப்பாறை கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் ஆரோக்கியசாமி, காவல் நிலையத்தில் இருந்து எடுத்துச் சென்றதாக விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து திமுக பிரமுகர் ஆரோக்கியசாமியை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி திமுக தலைமை நேற்று முன்தினமே அறிவிப்பு வெளியிட்டது.
பணியில் அலட்சியம்
இதையடுத்து வாகனங்களை, காவல் நிலையத்தில் இருந்து எடுத்துச் சென்றது தொடர்பாக திருச்சி டிஐஜி ராதிகா உத்தரவின் பேரில் ஏடிஎஸ்பி பால்வண்ணநாதன், டிஎஸ்பி வீரமணி ஆகியோர் நேற்று முன்தினம் இரவு மணப்பாறை காவல் நிலையத்துக்குச் சென்று விசாரித்தார்கள். விசாரணைக்கு பின்னரே பணியில் அலட்சியமாக இருந்ததற்காக மணப்பாறை இன்ஸ்பெக்டர் அன்பழகனை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
தனிப்படை
இந்நிலையில், மணல் கடத்தல் தொடர்பாக மணப்பாறை போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள ஓட்டுநர்கள் வெள்ளிவாடியைச் சேர்ந்த மனோகர் (36), முத்தப்புடையான்பட்டியைச் சேர்ந்த பவுல்சேகர்(28), கார்த்திகேயன்(25), கீழக்களத்தைச் சேர்ந்த அருள் சேசுராஜ் (28), சவுரி (51) ஆகியோரிடம் விசாரித்தபோது, ஆரோக்கியசாமி கூறியதால் மணல் கடத்தலில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்தார்கள். இதையடுத்து தனிப்படை போலீசார் ஆரோக்கியசாமியைத் தேடி வருகின்றனர்.