தமிழ்நாட்டில் என்டிஏ கூட்டணியின் தலைவர் எடப்பாடி பழனிசாமி.. நயினார் நாகேந்திரன் பேச்சில் மாற்றம்!
திருச்சி: தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் தான் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று கூறிய நயினார் நாகேந்திரன், ஓபிஎஸ் மீண்டும் பாஜக கூட்டணிக்குள் கொண்டு வரப்படுவாரா என்ற கேள்விக்கும் பதில் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், அதிமுக - பாஜக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் அமித்ஷா இந்த கூட்டணி அறிவிப்பை வெளியிட்ட நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தான் தலைமை என்று கூறினார். அப்போதே கூட்டணி ஆட்சி என்றும் அமித்ஷா கூறினார்.

அதன்பின் 4 மாதங்களாக அமித்ஷா கூட்டணி ஆட்சி என்று தொடர்ச்சியாக கூறி வருவதோடு, அதிமுகவைச் சேர்ந்த ஒருவர் முதல்வர் என்றும் கூறி இருக்கிறார். எடப்பாடி பழனிசாமியின் பெயரை அமித்ஷா முதல்வர் வேட்பாளர் என்று அறிவிக்கவில்லை. அதற்கேற்ப தமிழக பாஜகவினரும் கூட்டணி ஆட்சி என்றும், டெல்லி மேலிடமே முதல்வரை தேர்வு செய்யும் என்றும் கூறி வருகின்றனர்.
2 நாட்களுக்கு முன்பாக நெல்லையில் நடந்த பாஜக பூத் கமிட்டி மாநாடு நடந்த போது கூட, அமித்ஷா எடப்பாடி பழனிசாமி பெயரை கூறாமல் தவிர்த்தார். இதனால் அதிமுக - பாஜக கூட்டணியில் சர்ச்சை உருவாகியது. அதுமட்டுமல்லாமல் எடப்பாடி பழனிசாமி, தொடர்ச்சியாக அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று கூறி வருகிறார்.
இந்த நிலையில் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், எங்களது கூட்டணி கட்சியின் தலைவர் எடப்பாடி பழனிசாமி. தேர்தல் முடிந்த பின் அவர்கள் என்ன முடிவு எடுக்கிறார்களோ, அதுதான். யாரும் மன வருத்தத்தில் இல்லை. இனி பிரதமரும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தொடர்ச்சியாக தமிழ்நாட்டிற்கு வருவார்கள்.
தேர்தலுக்கு பின் கூட்டணி கட்சிகளின் ஆட்சி நடக்கும். இந்த ஆட்சி இருக்கக் கூடாது. திமுகவின் பி டீமாக பலரும் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் அதிமுக தான் பெரிய கட்சி. எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர். நிச்சயமாக திமுக கூட்டணியில் இருந்து சில கட்சிகள் எங்களுடன் வருவார்கள்.
திமுக கூட்டணி பலமாக இருந்தால் என்ன.. பலமான கூட்டணிதான் வெல்லுமா என்ன? 1996 மற்றும் 2001 ஆகிய தேர்தல்களில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நடந்து திமுக வீட்டிற்கு அனுப்பப்படும். எம்ஜிஆர் கொள்கைகளை கடைபிடிக்கும் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications