மாவட்டச் செயலாளர் படம் இல்லை! திமுகவில் இதென்ன புதுசா இருக்கே! அமைச்சர் நேரு பிறந்தநாள் அலப்பறைகள்!
திருச்சி: திருச்சி தெற்கு மாவட்டத்தில் திமுக மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான அன்பில் மகேஷ் படத்தை வைக்காமல் விளம்பர பேனர்கள் அடித்து கோஷ்டி அரசியலை கையில் எடுத்துள்ளனர் அமைச்சர் நேரு ஆதரவாளர்கள்.
திமுக முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேருவின் பிறந்தநாளை, திருச்சி மாவட்டம் முழுவதும் முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளுக்கு இணையாக அவரது ஆதரவாளர்கள் கொண்டாடித் தீர்த்துள்ளனர். கிளை தோறும் கட்சிக் கொடிகள் ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டு மேடை போட்டு நேருவின் புகழ் புராணங்கள் பாடப்பட்டுள்ளன.

இதெல்லாம் சரி ஆனால் திமுகவில் இல்லாத ஒரு புதிய பழக்கத்தை அமைச்சர் நேரு ஆதரவாளர்கள் கையில் எடுத்திருப்பது தான் அமைச்சர் அன்பில் மகேஷ் தரப்பை கொதிப்படைய வைத்துள்ளது. மாவட்டச் செயலாளர் படம் இல்லாமல் திமுகவில் பேனர் வைக்கும் புரோட்டகால் இதுவரை இருந்ததில்லை. இந்த புரோட்டகாலை மீறி திருச்சி தெற்கு மாவட்ட திமுகவை சேர்ந்த அமைச்சர் நேரு ஆதரவாளர்கள் அன்பில் மகேஷ் படத்தை திட்டமிட்டு தவிர்த்து ப்ள்க்ஸ் பேனர்கள் வைத்திருந்தனர்.
மணப்பாறை முதல் துவரங்குறிச்சி வரை ஊரெங்கும் நேருவின் படத்தையும், அவரது மகன் அருண் நேரு படத்தையும் பெரியளவில் போட்டு விளம்பர தட்டிகள் வைக்கப்பட்டிருந்தது காண முடிந்தது. அமைச்சர் நேருவின் மகன் இத்தனைக்கும் கட்சிப் பொறுப்பில் கூட கிடையாது. அமைச்சர் நேரு முகாமிலிருந்து வந்த வாய்மொழி உத்தரவின் பேரில் இந்த வேலையை செய்திருப்பதாக தெரிகிறது. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை பொறுத்தவரை அமைச்சர் நேருவுடன் முடிந்தவரை இணக்கமாக தான் செல்கிறார்.
பெரிய மனுஷன் அவரே இருக்கட்டும் என அரசு சார்ந்த பல நிகழ்ச்சிகளில் அமைச்சர் நேருவுக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறார் அன்பில் மகேஷ். ஆனால் அப்படியிருந்தும் நேரு ஆதரவாளர்கள் என்ற பெயரில் அமைச்சர் அன்பில் மகேஷை சீண்டும் விதமான செயல்கள் திருச்சி தெற்கு மாவட்ட திமுகவில் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. தனது பிறந்தநாளை ஒட்டி தன்னை யாரும் நேரில் சந்திக்க வர வேண்டாம் என அமைச்சர் நேரு அறிவுறுத்திய நிலையில் கோஷ்டி அரசியலை வெட்ட வெளிச்சமாக்கி திமுக தலைமைக்கு தர்மசங்கடமான சூழலை உருவாக்கியுள்ளது அமைச்சர் நேரு தரப்பு.












Click it and Unblock the Notifications