வயலில் இறங்கி... நலம் விசாரித்து... விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்த அன்பில் மகேஷ்..!
திருச்சி: திருச்சி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், திருவெறும்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி விவசாயிகளின் குறைகளை அறிவதற்காக நேரடியாக வயல்வெளிகளுக்கே விசிட் அடித்து வருகிறார்.
தமிழகம் முழுவதும் திமுக சார்பில் 16,500 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டங்கள் அடுத்து வரும் 10 நாட்களுக்கு நடைபெறுகின்றன. இதனிடையே முதல் நாளான இன்று திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் அன்பில் மகேஷ் கலந்துகொண்டார்.
அரசுக்கு எதிரான குற்றப்பத்திரிகையில் பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றதோடு உதயசூரியன் சின்னம் பொறித்த தொப்பி மற்றும் மொபைல் ஸ்டிக்கர்களை கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு விநியோகித்தார். அதனை ஆர்வமுடன் பெற்றுக்கொண்ட மக்கள் தங்கள் பகுதி சார்ந்த குறைகளை கூறினர்.
கடந்த 10 ஆண்டுகாலம் திமுக ஆட்சியில் இல்லாததால் எதுவும் செய்ய முடியாத சூழல் நிலவுவதாகவும் இன்னும் 4 மாதங்களில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் மக்கள் தன்னிடம் கூறிய குறைகள் அனைத்தையும் தீர்த்து வைப்பதாக உறுதியளித்தார் அன்பில் மகேஷ். இதனிடையே கிராம சபைக் கூட்டத்தை முடித்துக்கொண்டு அதில் பங்கேற்க முடியாத விவசாயிகளை வயல்வெளிகளுக்கே தேடிச் சென்று சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.
அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் வருகையை எதிர்பார்க்காத விவசாயிகளும், விவசாய கூலித் தொழிலாளர்களும் நெகிழ்ந்து போகினர். சிறிதுநேரம் அங்கிருந்த அன்பில் மகேஷ், புதிய வேளாண் சட்டங்களால் ஏற்படும் தீங்குகளை எடுத்துரைத்தார். மேலும், திமுக ஆட்சிக்காலத்தில் விவசாயிகளுக்கு கொண்டுவரப்பட்ட இலவச மின்சாரம் தொடங்கி கடந்த 2011-ம் ஆண்டு வரை செயல்படுத்தப்பட்ட திட்டங்களை நினைவூட்டினார்.