திருச்சி காவிரி ஆற்றில் மீண்டும் கண்டெடுக்கப்பட்ட ராக்கெட் குண்டு..அதுவும் எங்கு தெரியுமா? பரபரப்பு
திருச்சி: திருச்சி அருகே காவிரி ஆற்றில் மீண்டும் ராக்கெட் குண்டு கண்டெடுக்கப்பட்டிருக்கிறது.. ஜீயபுரம் அருகே அந்தநல்லூர் சிவன் கோவில் எதிர்புறமுள்ள படித்துறை படிக்கட்டில் ராக்கெட் குண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக இதே பகுதியில் தான் கடந்த மாதம் 30ம் தேதியும் ராக்கெட் குண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஒரே இடத்தில் இரண்டு முறை ராக்கெட் குண்டுகள் மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சியை அடுத்த ஜீயபுரம் அருகே அந்தநல்லூர் சிவன் கோவில் எதிர்ப்புறம் காவிரி ஆற்று படித்துறையில் கடந்த அக்டோபர் 30-ந்தேதி மாலை அந்த பகுதியைச் சேர்ந்த சிலர் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது, படித்துறை பாறைகளுக்கு இடையே இரும்பு போன்ற ஒரு பொருள் இருப்பதை கண்டனர். இதையடுத்து அதனை எடுத்து பார்த்தபோது, ராக்கெட் குண்டு என்பது தெரியவந்தது. உடனே ராக்கெட் குண்டு குறித்து ஜீயபுரம் காவல் நிலையத்துக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து விரைந்து வந்த ஜீயபுரம் போலீசார், அதனை கைப்பற்றி திருச்சி ராணுவ அதிகாரிகளிடம் இதுபற்றி கூறினார்கள். அவர்கள் அதனை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அது 3 கிலோ 800 கிராம் எடையும், 60 செ.மீ. நீளமும் இருந்தது. பின்னர் முக்கொம்பு கொள்ளிடம் பாலத்தில் இருந்து சுமார் 1 கி.மீ. தூரம் உள்ள வனப்பகுதிக்கு ராக்கெட் குண்டை கொண்டு சென்று வெடிக்க வைத்து, அதனை அழித்தார்கள்.
இந்த நிலையில் நேற்று ஏற்கனவே கண்டெடுக்கப்பட்ட அதே பகுதியில் மீண்டும் ஒரு ராக்கெட் குண்டு கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. இந்த முறை அதே அந்தநல்லூர் சிவன் கோவிலின் எதிர்புறமுள்ள படித்துறை படிக்கட்டில் கிடந்திருக்கிறது.. இதை பார்த்த அப்பகுதி மக்கள் ஜீயபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் ஜீயபுரம் போலீசார் நேற்று மாலை சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். விசாரணையில் ஏற்கனவே கடந்த அக்டோபர் 30ம் தேதி கண்டெடுக்கப்பட்ட ராக்கெட் குண்டும், தற்போது கண்டெடுக்கப்பட்ட ராக்கெட் குண்டும் ஒரே அளவில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ராக்கெட் குண்டு என்பதை உறுதி செய்த போலீசார், அதுபற்றி தகவல் தெரிவித்து தடயவியல் நிபுணர்களை வரவழைத்தனர். அவர்கள் ராக்கெட் குண்டில் கைரேகைகள் ஏதும் உள்ளனவா? என ஆய்வு செய்தனர். இந்த சம்பவம் பற்றி அறிந்த அந்தநல்லூர் பகுதி வருவாய் அதிகாரி நிலோபர் நிஷா, அந்தநல்லூர் கிராம நிர்வாக அதிகாரி விக்னேஷ் ஆகியோரும் நேரில் வந்து ஆய்வு செய்தனர்.
பின்னர் ஜீயபுரம் போலீசார் ராக்கெட் குண்டை கைப்பற்றி அதனை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றனர். ஏற்கனவே கண்டெடுக்கப்பட்ட இடத்தில் மீண்டும் ராக்கெட் குண்டு கிடந்ததால் யாராவது இங்கு கொண்டு வந்து போட்டுவிட்டு சென்றார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications