அண்ணாமலை பேசும்போதே கலைந்த கூட்டம்.. வீடியோ எடுக்க முயன்ற செய்தியாளர்கள் மீது பாஜகவினர் தாக்குதல்
திருச்சி: பாஜகவின் பொதுக்கூட்டம் திருச்சியில் உள்ள மன்னார்புரத்தில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை பேசிக் கொண்டு இருக்கும் போதே கூட்டம் கலைந்ததைப் போட்டோ எடுத்த செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
மத்திய அரசு இப்போது புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வந்துள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இங்கு ஆளும் திமுக உட்பட பல கட்சிகள் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராகவே உள்ளன. புதிய கல்விக் கொள்கையில் இருக்கும் மும்மொழி கொள்கை என்பது இந்தி மொழியைத் திணிப்பதாகவும் திமுகவினர் கூறி வருகிறார்கள்.

புதிய கல்விக் கொள்கை
அதேநேரம் புதிய கல்விக் கொள்கையில் எந்தவொரு இடத்திலும் இந்தி திணிக்கப்படவில்லை என்றும் மூன்றாவது மொழியாக எந்த மொழியை வேண்டுமானாலும் மாணவர்கள் கற்றுக்கொள்ளலாம் என்றும் பாஜகவினர் கூறி வருகிறார்கள். மேலும் தாய் மொழியில் கல்வி என புதிய கல்விக் கொள்கையில் பல்வேறு நல்ல விஷயங்கள் இருப்பதாகவும் திமுகவின் நடவடிக்கையால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் பாஜகவினர் கூறி வருகிறார்கள்.
மேலும், இது தொடர்பாக பாஜகவினர் மாநிலம் முழுக்க விளக்கக் கூட்டங்களை நடத்தி வருகிறார்கள். அதன்படி திருச்சியிலும் புதிய தேசிய கல்விக் கொள்கை தொடர்பான கூட்டம் நடைபெற்றது. திருச்சியில் நடந்த இந்த பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசிக் கொண்டிருந்தபோதே கலைந்த கூட்டத்தை வீடியோ பதிவு செய்ய முயன்ற செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
பாஜக பொதுக்கூட்டம்
அதாவது திருச்சி மன்னார்புரம் பகுதியில் உள்ள ராணுவ மைதானத்தில் பொதுக்கூட்டம் நடந்துள்ளது. தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக அதை விளக்கும் வகையில் கூட்டம் நடந்துள்ளது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மூத்த தலைவர்கள் தமிழிசை ஹெச் ராஜா, நயினார் நாகேந்திரன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
செய்தியாளர்கள் மீது தாக்குதல்?
இந்தக் கூட்டத்தில் பல்வேறு தலைவர்களும் பேசிய நிலையில், கடைசியாக மாநில தலைவர் அண்ணாமலை புதிய கல்விக் கொள்கை குறித்துப் பேசத் தொடங்கியுள்ளார். அவர் 8 மணியளவில் பேசத் தொடங்கிய நிலையில், அப்போதே மக்கள் கூட்டம் மெல்லக் குறையத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. மக்கள் கிளம்பியதையும், சேர்கள் காலியாக இருந்ததையும் அங்கிருந்த செய்தியாளர்கள் சிலர் படம் பிடித்துள்ளனர்.
பரபரப்பு
இதைப் பார்த்தவுடன் உடனே உள்ளே வந்த பாஜகவினர் சிலர், செய்தியாளர்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், அவர்களின் கேமராக்களை பிடுங்கி அதில் இருந்த போட்டோ மற்றும் வீடியோவை அழித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் சற்று நேரம் அங்குச் சலசலப்பு ஏற்பட்டது. பிறகு அங்கிருந்து புறப்பட்ட செய்தியாளர்கள், கிளம்பும்போது அவர்களின் டூவீலர்களையும் இடைமறித்ததாகக் கூறப்படுகிறது. மீண்டும் கேமராவை வாங்கி அனைத்து காட்சிகளையும் அழித்துவிட்டே கிளம்ப அனுமதித்தாக கூறப்படுகிறது.
இதற்கிடையே பாஜகவினர் செய்தியாளர்களைத் தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்தச் சம்பவம் மைதானத்தின் ஒரு பக்கம் நடந்த நிலையில், து தொடர்பாக போலீசாருக்கு தெரியவில்லை என்றே சொல்லப்படுகிறது. அதேநேரம் செய்தியாளர்கள் தரப்பில் இருந்து போலீசாரிடம் புகார் அளிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications