பாஜக நிர்வாகி ரேகாவை ஜெயிலில் அடைத்த போலீஸ்.. “குஜராத் டைல்ஸ்” என ஆசை காட்டி தொழிலதிபரிடம் மோசடி!
திருச்சி: குஜராத்தில் இருந்து குறைந்த விலையில் டைல்ஸ் வாங்கித் தருவதாக கூறி பணம் வாங்கிவிட்டு, டைல்ஸும் தராமல் பணமும் தராமல் இழுத்தடித்து, பணம் கொடுத்தவரையே மிரட்டிய பாஜக பெண் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பிரகாஷ் நகர் பகுதியில் வசிப்பவர் தொழிலதிபர் கண்ணன். இவர் திருவெறும்பூர் பகுதியில் திருமண மண்டபம் வைத்துள்ளார். இவரது கட்டட பணிகளுக்கு டைல்ஸ் வாங்குவதற்காக காட்டூர் கணேஷ் நகர் பகுதியில் டைல்ஸ் கடை நடத்தி வரும் பாஜக பெண் பிரமுகர் ரேகா என்பவரை அனுகியுள்ளார்.

ரேகா, குஜராத்தில் இருந்து மலிவு விலையில் டைல்ஸ் வாங்கி தருவதாக கூறி தொழிலதிபர் கண்ணனிடம் கடந்த கடந்த 2022 அக்டோபர் மாதம் இரு தவணைகளாக ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் பணம் பெற்றுள்ளார். ஆனால் சொன்னபடி டைல்ஸ் வாங்கித் தரவில்லை. ரேகாவிடம் இதுகுறித்து தொழிலதிபர் கண்ணன் கேட்கவே, காரணங்களைச் சொல்லி தாமதப்படுத்தி வந்துள்ளார்.
இதையடுத்து, டைல்ஸே வேண்டாம், நான் கொடுத்த காசை திருப்பிக் கொடுத்துவிடுங்கள் எனக் கேட்க, ரேகா தான் வாங்கிய பணத்திற்கு செக் போட்டு கொடுத்துள்ளார். கண்ணன் அந்த செக்கை வங்கியில் டெபாசிட் செய்யவே ரேகாவின் அக்கவுண்ட்டில் பணமின்றி செக் ரிட்டன் ஆகியுள்ளது. இதையடுத்து, கண்ணன் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக ரேகாவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
போலீசார் நடத்திய விசாரணையின் போது விரைவில் பணத்தை கண்ணனிடம் திருப்பி தருவதாக ரேகா எழுதிக் கொடுத்து சென்றுள்ளார். ஆனால், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பணம் கேட்டு ரேகாவிடம் கண்ணன் பல முறை கேட்டபோதும், தராத நிலையில் மீண்டும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும், திருவெறும்பூர் சரக துணைக் காவல் கண்காணிப்பாளரிடமும் புகார் செய்தார்.

பண மோசடி செய்து வரும் பாஜக பெண் பிரமுகர் ரேகா என்னிடம் பணம் வாங்கிக் கொண்டு டைல்ஸ் வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்து விட்டார். பணத்தை கேட்டால் நான் பாஜக பெண் பிரமுகர் எனக் கூறி என்னை ஆள் வைத்து மிரட்டுகிறார். எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து எனது பணத்தை பெற்று தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று புகாரில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், ரேகா இதேபோல உறையூர் பகுதியைச் சேர்ந்த ஒருவரிடமும் குஜராத்தில் டைல்ஸ் வாங்கித் தருகிறேன் எனக் கூறி பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றியதை கண்டுபிடித்தனர். அதைத்தொடர்ந்து, ரேகாவை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர். பண மோசடி வழக்கில் பாஜக பெண் பிரமுகர் கைதாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications