இறுதி கட்டத்தில் மீட்பு பணிகள்.. சுஜித் மீட்கப்படுவது எப்போது.. படபடப்புடன் காத்திருக்கும் மக்கள்
60 மணி நேரத்துக்கும் மேலாக மீட்பு பணி தொடர்ந்து நடந்து வருகிறது
Recommended Video
மணப்பாறை: சவால்களுக்கு மத்தியில் சுஜித்தை மீட்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. சுஜித் விழுந்த போர்வெல்லுக்கு அருகே பள்ளம் தோண்டும் பணிகள் வேகம் பிடித்துள்ளன. இன்று இரவுக்குள் சுஜித் மீட்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கடந்த 25-ம் தேதி மாலை 5.40 மணிக்கு தவறி விழுந்தான் 2 வயது குழந்தை சுஜித். குழந்தை விழுந்ததுமே அவனை மீட்கும் பணிகள் ஆரம்பமாகின. ஆனால் பல்வேறு கட்ட மீட்பு நடவடிக்கைகள் அனைத்துமே தோல்வியில் முடிந்தன. 88 அடி ஆழத்தில் குழந்தை சிக்கி உள்ளான்.
மீட்பு நடவடிக்கைகள் ஒவ்வொரு கட்டத்திலும், ஒவ்வொரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 2 மீட்டர் தொலைவில் 90 அடி ஆழத்திற்கு புதிய குழி ஒன்று தோண்டப்பட்டது. பிறகு பக்கவாட்டிலேயே இன்னொரு குழி தோண்டி குழந்தையை மீட்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காகத்தான் இந்த ஸ்பெஷல் ரிக் மிஷின்கள் வரவழைக்கப்பட்டன.
தோப்புத்துறை பள்ளிவாசலில் சிறப்பு பிரார்த்தனை... சுஜித்தை மீட்க மனம் உருகி து ஆ
இரும்பு பற்கள்
ஆனால், 45 அடிக்கு மேல் இந்த மிஷினால் துளையிட முடியவில்லை. திடீரென பாறை குறுக்கிட்டது. இதனால், மிஷினில் உள்ள இரும்பு பற்கள் பழுதாகின. மீட்பு பணிகள் முடங்கின.. மழை ஒரு பக்கம் பெய்து கொண்டே இருந்தது.இந்த சமயத்தில்தான், போர்வெல் மூலம் துளையிடும் பணி ஆரம்பமானது.
குறியீடு
அதுவரை 45 அடிக்கு குழி தோண்டப்பட்டு இருந்தது. அதனால், அந்த குழியை ஆய்வு செய்ய குழிக்குள் ஒரு வீரர் இடுப்பில் கயிறு கட்டிக் கொண்டு உள்ளே இறங்கினார். பாறையின் தன்மையை அவர் கண்டறிந்ததுடன், குறியீடு செய்யப்பட்டதை அடுத்து மேலே வந்தார். அவர் குறியீடு செய்யப்பட்ட இடத்தில் போர்வெல் மிஷினில் துளை போடப்பட்டது.
6 இன்ச் துளை
இந்த போர்வெல் இயந்திரத்தின் மூலம் பாறையில் துளையிடப்பட்டு, 4 மூலைகளிலும் 6 இன்ச் அளவிற்கு துளைகள் போடப்படும் என்று முன்னதாக தெரிவிக்கப்பட்டபடியே போர்வெல் மெஷின் மூலம் 6 துளைகள் போடப்பட்டன. ஆனால், சுஜித் விழுந்துள்ள போர்வெல்லில் மண் விழுந்ததால் பக்கத்தில் குழி தோண்டுவது நிறுத்தப்பட்டது.
எண்ணெய் கசிவு
போர்வெல் மூலம் துளையிடும் பணி நிறுத்தப்பட்டாலும், மீண்டும் ரிக் மிஷின் மூலம் துளையிடும் பணிகள் ஆரம்பமானது. ஆனால், ரிக் இயந்திரத்தில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதால் துளையிடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. எண்ணெய் கசிவு சரி செய்யப்பட்ட பின் துளையிடும் பணி மீண்டும் தொடங்கும் என்று சொல்லப்பட்டதையடுத்து மீண்டும் பணி ஆரம்பமானது.
இறுதி கட்டம்
மழைநீர் குழிக்குள் செல்லாதவாறு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்போதைக்கு இதுவரை ரிக் இயந்திரம் மூலம் 63 அடிக்கு துளை போடப்பட்டுள்ளது. 60 அடிக்கு கீழே மண் உள்ளதாக சொல்லப்பட்டது. அதனால் ரிக் இயந்திரம் மூலம் எளிதாக குழி தோண்டும் பணி நடந்தது. இன்னும் சற்று நேரத்தில், 70 அடி ஆழம் தொட்ட பிறகு மீண்டும் போர்வெல் மூலம் துளையிட முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் மீட்பு பணியும் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.