முதல்வர் 4 நாட்கள் டூர்.. திருக்குவளையில் ப்ளான் இதுதான்.. திருச்சியில் ட்ரோன்கள் பறக்கத் தடை
திருச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் 4 நாட்கள் பயணமாக திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். நாளைய தினம் திருக்குவளையில் முதல்வரின் காலை சிற்றுண்டி விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். முதல்வர் ஸ்டாலின் வருகையால் திருச்சியில் 2 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று ஆய்வு செய்து, ஆட்சியர்களுடனும், அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தி வருகிறார். கடந்த வாரங்களில் ராமநாதபுரம் மாவட்டத்திற்குச் சென்ற அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று, அதிகாரிகளைச் சந்தித்துப் பேசியிருந்தார்.

அந்த வகையில் இன்று முதல்வர் ஸ்டாலின் திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களுக்கு 4 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். அதற்காக இன்று காலை 9 மணிக்குச் சென்னை விமான நிலையத்திலிருந்து திருச்சிக்குச் செல்கிறார். பின்னர் அங்கிருந்து கும்பகோணம் சாலை மார்க்கமாகச் செல்லும் முதல்வர் திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார். அந்த பயணத்தின் போது பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, நலத் திட்டங்களையும் தொடங்கி வைக்கவுள்ளார்.
ஆகஸ்ட் 25ஆம் தேதி திருக்குவளையில் முதல்வரின் காலை சிற்றுண்டி விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். பிறகு, நாகை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர், எம்.பி., எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கிறார். ஆகஸ்ட் 26ஆம் தேதி முதல்வர் கள ஆய்வு திட்டத்தில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார். 27ஆம் தேதி திருத்துறைப்பூண்டியில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் சென்னை திரும்புகிறார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகையை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் இன்று ஆகஸ்ட் 24ஆம் தேதி மற்றும் ஆகஸ்ட் 27 ஆகிய தேதிகளில் ட்ரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக முதல்வர் ஸ்டாலின் திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஆகஸ்ட் 24ஆம் தேதி திருச்சிக்கு வருகை தர உள்ளார் .
இதனால் ஆகஸ்ட் 24ஆம் தேதி திருச்சிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகை தருவதாலும் மீண்டும் 26 ஆம் தேதி திருச்சியில் இருந்து சென்னை திரும்ப இருப்பதால் அன்றைய நாட்களில் ட்ரோன்கள் பரப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.












Click it and Unblock the Notifications