"நானும் இந்துதான்.. முதல்வரும் இந்து தான்.. நாம் எல்லோரும் இந்து மதம் தான்!" சொல்கிறார் முத்தரசன்
திருச்சி: திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்தார்.
Recommended Video
திருச்சியில் இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்தார். மேலும், புதிய கல்விக் கொள்கை குறித்தும் சில கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
பெட்ரோல் விலையை குறைக்க அண்ணாமலை கோட்டைக்கு போகக் கூடாது.. எங்கே போகனும் தெரியுமா? முத்தரசன் கிண்டல்
சீர்குலைத்து விட்டது
செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், "கடந்த 8 ஆண்டுக்கால பாஜக தலைமையிலான மோடி அரசு நாட்டின் மதச்சார்பின்மை கொள்கைகளைச் சீர்குலைத்து விட்டது. வடமாநிலங்களில் சிறுபான்மையினர்களது வீடுகள் இடிக்கப்படுகின்றன. விவசாயிகள் தங்களது உரிமைகளுக்காக ஆண்டுக் கணக்கில் போராடிய அவலம் மோடியின் ஆட்சிக்காலத்தில் அரங்கேறி உள்ளது.
வேலை வாய்ப்பின்மை
வருடத்துக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை தருவதாக மோடி தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார். அந்த அடிப்படையில் இதுவரை 16 கோடி பேருக்கு வேலை கொடுத்து இருக்க வேண்டும். ஆனால் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. வெளிநாட்டிலிருந்து கருப்புப் பணத்தை மீட்டு வருவதாக மோடி வாக்குறுதி அளித்தார். அதுவும் எங்கே என்று தெரியவில்லை. அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது.
திமுக கூட்டணி
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான அரசு மதச்சார்பற்ற கொள்கைகளைச் சிறப்பாக நடைமுறைப்படுத்தி வருகிறது. நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக்கு ஒதுக்கிய இடங்களில் திமுகவினர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்கள். மாநில அளவில் திமுக தனது கூட்டணி கட்சியினருடன் சுமுகமான உறவில் உள்ள நிலையில், மாவட்ட வாரியாக திமுகவினரின் செயல்பாடுகள் வருத்தமளிப்பதாக உள்ளது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
பெட்ரோல் டீசல் விலை
நாட்டின் பிரதமர் தமிழ்நாட்டுத் திட்டங்களைத் துவங்கி வைக்க வருகிறார். அந்த நிகழ்ச்சியில் முதல்வர் கலந்து கொண்டு மாநிலக் கோரிக்கைகளை முன்வைத்தார் இதில் தவறு இல்லை. பெட்ரோல், டீசல் விலையைப் பொறுத்தவரை விலையை ஏற்றியவர்கள்தான் அதனை மறுபரிசீலனை செய்து இன்னும் விலை குறைக்க வேண்டும். அதை ஜிஎஸ்டி-க்குள் கொண்டு வருவதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
பொய் சொல்லக் கூடாது
பிரதமர் நரேந்திர மோடி,நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எண்ணெய் நிறுவனங்கள்தான் விலையை நிர்ணயிக்கின்றன என்று கூறி வந்தனர். இப்போது விலையைக் குறைத்துள்ளனர். அப்படி என்றால் மத்திய அரசின் கையில் விலையைக் குறைப்பதற்கான அதிகாரம் உள்ளது. உயர்ந்த பதவியில் உள்ள பிரதமர் பொய் சொல்லக்கூடாது என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.
இந்து
நானும் இந்து தான். நான், முதல்வர் மு.க.ஸ்டாலின், கே.எஸ்.அழகிரி, பாலகிருஷ்ணன் போன்றோர் இந்து மத எதிர்ப்பாளர்கள் இல்லை. இந்தத்துவாவிற்குத் தான் எதிரானவர்கள். நாம் எல்லோரும் இந்து மதம் தான். இந்துத்துவா என்பது மனுதர்மத்தின் கொள்கை. இந்து மதத்தின் கொள்கை மனுதர்ம கொள்கை அல்ல. இந்து மதத்தின் பெயரால் மனுதர்ம கொள்கையைத் திணிக்கப் பார்க்கிறார்கள்.
புதிய கல்விக் கொள்கை
மனுதர்ம கொள்கை தான் புதிய கல்விக் கொள்கை. புதிய கல்விக்கொள்கை குலக்கல்வி திட்டத்தை ஆதரிக்கிறது. ராஜாஜி குலக்கல்வி திட்டத்தைக் கொண்டு வந்தார். அப்போது கடுமையாக கம்யூனிஸ்ட் கட்சி எதிர்த்தது. ராஜாஜி நாணயமான மனிதர் மோடி மாதிரி "சால்சாப்பு" செய்பவர் அல்ல.. மக்களிடம் எழுந்த எதிர்ப்பு காரணமாக ராஜாஜியே இந்த திட்டத்தைத் திரும்பப் பெற்று இருந்தார்" என்று அவர் தெரிவித்தார்.