தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் முத்தரசன்.. என்னாச்சு? கட்சியினருக்கு முக்கிய வேண்டுகோள்!
திருச்சி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருக்கு டெங்கு உள்ளிட்ட எந்தப் பாதிப்பும் இல்லை என்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது சிபிஐ கட்சி.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் புதன்கிழமை கட்சி சார்ந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருச்சிக்கு வந்தார். அப்போது, அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மிளகுபாறை பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

பின்பு, முத்தரசனின் உடலை மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்தனர். அப்போது அவருக்கு கடுமையான காய்ச்சல் மற்றும் வயிற்று வலி, வாந்தி உள்ளிட்ட பிரச்சனைகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பிறகு முத்தரசனுக்கு டெங்கு காய்ச்சல் பரிசோதனை எடுக்கப்பட்டது. தொடர்ந்து மருத்துவமனை கண்காணிப்பில் முத்தரசன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். மருத்துவர்கள் அறிவுறுத்தலின்பேரில், முத்தரசன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், முத்தரசனுக்கு நடைபெற்ற பரிசோதனையில் அவருக்கு டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, முத்தரசன் திடீரென உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியை அறிந்த தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் வியாழக்கிழமை காலை மாநில செயலாளர் இரா. முத்தரசரிடம் உடல் நலம் குறித்து போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முத்தரசன் உடல்நிலை தொடர்பாக புதிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுடுள்ள செய்திக்குறிப்பில், "இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் முத்தரசன், தொடர்ந்து இருந்த விக்கல், வாந்தி காரணமாக செவ்வாய்க்கிழமை திருச்சியில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சுவாசப் பாதையில் கிருமிகள் உருவானதில் பாதிப்பும், அதனை தொடர்ந்து ஏற்பட்டுள்ள காய்ச்சல் தவிர எந்தப் பாதிப்பு இல்லை என்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து வரும் இருமலும், விக்கலும் மருத்துவ சிகிச்சையால் தற்போது பெருமளவு குறைந்துள்ளது. இருப்பினும் பேசும் போது இருமல் ஏற்படுகிறது. அவர் இரண்டொரு நாள் பேசாமல் சுவாசப் பாதைக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் மிகக் கண்டிப்புடன் தெரிவித்துள்ளனர். தோழர்கள், நண்பர்கள் மருத்துவமனைக்கு நேரில் செல்வதையும். அவரிடம் நலம் விசாரித்து விட வேண்டும் என முயற்சிப்பதையும் தவிர்க்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.
நேற்று முன்தினம் காலை முதல் பார்வையாளர்கள் தொடர்ந்து வந்து சென்றது சிகிச்சையின் முழுப் பலனையும் பெற முடியாமல் தடுத்துள்ளது என்பதை மருத்துவர்கள் எடுத்துக் கூறி பார்வையாளர்களுக்கு கட்டாயம் அனுமதி இல்லை என கறாராக தெரிவித்துள்ளார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
திருச்சி தோழர் எம். செல்வராஜ் மருத்துவமனை நிர்வாகத்துடனும், மருத்துவர்களுடனும் தொடர்ந்து, தொடர்பில் இருந்து வருகிறார். தோழர் இரா.முத்தரசன் அவர்களின் வாழ்விணையர் உடன் இருக்கிறார். அவருக்கு தேவையான சிகிச்சை முழு மன நிறைவுடன் வழங்கப்பட்டு வருகிறது. ஒத்துழையுங்கள். அமைதியும், ஓய்வும் அவரது சிகிச்சையின் ஒரு பகுதி என்பதை புரிந்து ஆதரியுங்கள் என கேட்டுக் கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications