திராவிட கட்சிகளை அழிக்க பார்க்கிறார்கள்.. தேசியக் கட்சிகள் மீது தம்பிதுரை பாய்ச்சல்!
Recommended Video
திருச்சி : தமிழகத்தில் திராவிட கட்சிகளை அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தேசிய கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க. செயல்படுவதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை குற்றம்சாட்டி உள்ளார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் கஜா புயலால் பல்வேறு பகுதி பாதிக்கப்பட்டுள்ளது. இதில் அதிக மின்கம்பங்கள் மற்றும் வீடுகள் சேதம் அடைந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளான மணப்பாறை ஒன்றியத்தில் உள்ள எப். கீழையூர், சின்னமணப்பட்டி, பெரிய மணப்பட்டி, உசிலை ஊராணியில் நடைபெற்று வரும் மின்சாரம் சரி பார்க்கும் பணி, சமத்துவபுரம் உள்ளிட்ட இடங்களை தம்பிதுரை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.
அதிக அளவில் புயல் பாதிப்பு
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது : கஜா புயல் பாதிப்பு கடலோர மாவட்டங்களுக்கு இணையாக மணப்பாறை, மருங்காபுரியிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த புயலால் இரண்டு பேர் இறந்துள்ளார்கள். அதிக அளவில் வாழைகள் சேதம் அடைந்துள்ளது. தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் பணிகளை பார்வையிட்டு வருகிறேன். சீரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது .
திமுக நாடகம்
கஜா புயல் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட ஸ்டாலின், ஏன் கூட்டத்தை கூட்டாமல் அணை விவகாரத்துக்கு அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி உள்ளார். இது அரசியல் நாடகம் இதை மக்கள் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
எதிர்க்கட்சிகள் சரியில்லை
புயல் நிவாரண பணிகளில் எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. கேரளா போன்ற மாநிலங்களில் எதிர்கட்சிகள் ஒன்று சேர்ந்து ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் அந்த ஒற்றுமை இல்லை என்பது உண்மையானதாகும்.
பாஜக மீது குற்றச்சாட்டு
தமிழகத்தில் திராவிட கட்சிகளை அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தேசிய கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க. ஆகியோர் செய்து வருகின்றனர். நாங்கள் நேரில் சென்று நிவாரணம் கேட்ட பிறகு தான் தமிழகத்திற்கு மத்திய குழுவை அனுப்பி உள்ளது. அதே நேரத்தில் கேரளாவில் பாதிப்பின் போது உடனடியாக பிரதமர் நரேந்திர மோடி நிதி வழங்கினார். ஆனால் இதுவரை தமிழகத்திற்கு நிவாரணம் வழங்கவில்லை. முன்னதாக கேட்ட நிவாரணம் தொகை 18 ஆயிரம் கோடியை இன்னும் மத்திய அரசு கொடுக்கவில்லை, மத்திய குழு அறிக்கைக்கு பிறகு தருவதாக சொல்லி இருக்கிறார்கள். தொடர்ந்து மத்திய அரசு தமிழக அரசை வஞ்சித்து வருகிறது என கூறினார்.