2 கிலோ கஞ்சாவை காரில் கடத்திய திமுக பிரமுகர்.. திருச்சி அருகே மடக்கிப் பிடித்த போலீசார்!
திருச்சி: திருச்சி மாவட்டம், துறையூர் அருகே காரில் 2 கிலோ கஞ்சாவை கடத்திய திமுக பிரமுகரை, தனிப்படை போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
தமிழகத்தில், ஆப்ரேசன் கஞ்சா 2.0 மூலம், கஞ்சா கடத்தப்படுவதை தடுத்தும், கடத்தியவர்களை உடனுக்குடன் கைது செய்தும் தமிழக போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, கஞ்சா விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க தீவிர வாகன தணிக்கை சோதனையிலும் காவல் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், கஞ்சா கடத்தலும், கஞ்சா விற்பனை செய்வதும் ஆங்காங்கே இன்னும் தொடர்ந்து அரங்கேறிதான் வருகிறது.

அந்த வகையில், திருச்சி மாவட்டம், துறையூர் நகர் பகுதிகளில் கஞ்சா விற்பனை படுஜோராக தொடர்ந்து நடைபெற்று வருவதாக வார்டு உறுப்பினர் ஒருவர், நகர்மன்ற கூட்டத்தில் கடந்த வாரம் குற்றம் சாட்டினார். மேலும், இது தொடர்பாக காவல்துறையினரிடம் புகாரும் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து, துறையூர் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில் குமார் தலைமையில், காவல்துறையினர் தொடர்ந்து துறையூர் பேருந்து நிலையம், பாலக்கரை உள்ளிட்ட முக்கிய இடங்களில் தீவிர சோதனை மேற்கொண்டு வந்தனர்.
இதனிடையே, தனிப்படை காவல்துறையினருக்கு காரில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில், அப்பகுதிக்குச் சென்ற போலீசார், பாலக்கரை அருகே வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில், காரில் இரண்டு கிலோ கஞ்சா கடத்தி வரப்பட்டதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
இதுதொடர்பாக போலீசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில், கஞ்சாவை கடத்தி வந்தது, பச்சை பெருமாள்பட்டி வெள்ளாளர் தெருவை சேர்ந்த சுப்ரமணி என்பவரின் மகன் அருண்குமார் என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து, அருண்குமாரை கைது செய்த போலீசார், 2 கிலோ கஞ்சாவையும், கஞ்சாவை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர்.
கஞ்சாவை காரில் கடத்தி வந்த அருண்குமார், திமுகவில் பச்சை பெருமாள்பட்டி கிளை செயலாளராக இருந்து, தற்போது இளைஞர் அணியில் பொறுப்பில் உள்ளதும், தனது சொந்த ஊரில் இருந்து துறையூருக்கு வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்ததும் அம்பலமானது. துறையூர் காவல் நிலைய காவல்துறையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்த நிலையில், கஞ்சா விற்பனை தொடர்பாக கடந்த ஒரு மாதத்தில் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. இந்நிலையில் தனிப்படை காவல்துறையினர் 2 கிலோ கஞ்சாவையும், கடத்தி வந்த திமுக பிரமுகரையும் அதிரடியாக கைது செய்தனர்.
தமிழகத்தில் கஞ்சா கடத்தலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டுள்ள நிலையில், ஒரே நாளில் 2 கிலோ கஞ்சாவையும், அதனை கடத்தி வந்த ஆளுங்கட்சி நிர்வாகியையும் போலீசார் கைது செய்துள்ள சம்பவம், அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications