Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அந்த ஊரில் அவர் பிரபல அரசியல்வாதி! அதுவும் ஆளுங்கட்சி நகரச் செயலாளர்! திமுக MLA சொன்ன குட்டிக்கதை!

Subscribe to Oneindia Tamil

திருச்சி: கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத் தலைவரும், திமுக சட்டமன்ற உறுப்பினருமான இனிகோ இருதயராஜ் கூறியுள்ள குட்டிக்கதை ஒன்று திருச்சி திமுகவினர் மத்தியில் பேசு பொருளாக அமைந்துள்ளது.

திமுக எம்.எல்.ஏ. இனிகோ கூறிய கதையில் உள்குத்து ஏதும் இருக்குமோ என திருச்சி திமுகவினர் குழம்பிப் போயுள்ளனர். அப்படியென்ன இனிகோ இருதயராஜ் கதை சொல்லிவிட்டார் எனக் கேட்கத் தோன்றலாம். பெருமை கூடாது என்ற பொருளுடன் இனிகோ இருதயராஜ் சொல்லிய கதை வருமாறு;

DMK MLA Inigo Irudayaraj told a story about politician vanity proud

''அந்த ஊரில் அவர் ஒரு பிரபலமான அரசியல்வாதி. அதுவும் ஆளுங்கட்சியை சேர்ந்த நகரச் செயலாளர். அவரை யாரும் பெயர் சொல்லி அழைக்க மாட்டார்கள். நகரச் சிங்கம் ஜி.எஸ் என்று தான் செல்லமாக, அவரது ஆளுமையை குறிப்பிடும் வகையில் அழைப்பார்கள். ஆமாம் அவர் பொது கூட்டங்களில் பேசினால் சிங்கம் கர்ஜிப்பதை போல் இருக்கும்.

நகரச் சிங்கம் ஜி.எஸ், நகரச் செயலாளர் மட்டுமின்றி, ரோட்டரி சங்கத்தின் தலைவராகவும் இருக்கிறார். தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி அதன் வாயிலாக ஏழை எளிய மக்களுக்கு சேவைகளும் செய்து வருகிறார். அவருக்கு ஊர் முழுவதும் நல்ல பெயர். ஊரில் திருமணமோ, காது குத்தோ, இழவு நிகழ்ச்சியோ எதிலும் நகரச் சிங்கம் ஜி.எஸ். முன்னிலைப்படுத்தப்படுவார்.

ஒரு நாளைக்கு 100 நிகழ்ச்சிகள் இருந்தாலும் கூட ஜி.எஸ். அசதி கொள்ள மாட்டார். பம்பரமாய் சுழன்று அத்தனை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு நிகழ்ச்சி அமைப்பாளர்கள் பொதுமக்களிடம் நல்ல பேரை தட்டிச் சென்று விடுவார்.

ஊர் முழுக்க இவ்வளவு நல்ல பெயர் வாங்கி இருந்தாலும் கூட அவரது கார் டிரைவரான தங்கவேலுக்கு ஜி.எஸ் மீது மரியாதை கிடையாது. ஏன் என்றால் இவ்வளவு நல்லதை செய்கின்ற ஜி.எஸ் இந்த ஊரில் நடக்கும் இவ்வளவு விஷயங்களும் தன்னால் மட்டுமே நடந்து கொண்டிருக்கிறது. இந்த நகரத்தில் நடக்கும் ஒவ்வொரு அசைவிற்கும் தான் மட்டுமே காரணம் என்று பெருமைக் கொள்பவராக ஜி.எஸ் இருப்பது தங்கவேலுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

எனவே,தான் உண்டு, தன் டிரைவர் வேலை உண்டு என தேமேனு இருந்து விடுவார் 54 வயதான தங்கவேல். அப்படி தான் ஒரு நாள் அண்ணா காலனியில் குடிசைகள் மொத்தமாக எரிந்து போய் அப்பகுதி மக்கள் நடு வீதிக்கு வந்து விட்டார்கள். உடனடியாக நிவாரண பொருட்களுடன் அந்த பகுதிக்கு தனது கட்சி நிர்வாகிகளுடன் சென்ற ஜி.எஸ் அவர்களுக்கு ஆறுதல் கூறி,கொண்டு போன நிவாரண பொருட்களை வழங்கிவிட்டு காரில் ஏறிய ஜி.எஸ், "அந்த ஏழை மக்களின் முகத்தில் எவ்வளவு மகிழ்ச்சி பார்த்தாயா? அந்த மகிழ்ச்சிக்கு என்னை காரணமாக்கிய கடவுளுக்கு நன்றி. நான் இல்லை என்றால் இவர்கள் அடுத்த வேளை சோற்றுக்கு என்ன செய்வார்கள்? பாவம்! ஏதோ பிறருக்கு உதவுவதற்கான அளவுக்கு காசு பணத்தை கொடுத்த கடவுளுக்கு தான் நன்றி சொல்லணும்! என்று தங்கவேலுவிடம் கூறிக்கொண்டு வந்தார்.

தங்கவேலுவும் அதற்கு பதிலேதும் சொல்லாமல் தலையாட்டிக் கொண்டே வந்தார். இன்னொரு நாள்,"பார்த்தாயா அந்த வீட்டில் சாவு நடந்து இருந்தாலும் கூட என்னை பார்த்தவுடன் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்தார்கள்? அந்த மகிழ்ச்சிக்கு காரணம். நான் தான்.. "நான் தான்" என்கிற அகங்காரம் அவரது ரத்தத்தில் ஊறி போயிருந்ததால் டிரைவர் தங்கவேலுவுக்கு அவரை பிடிக்காது.

அது கொரோனா காலம். ஒருவரும் எதற்கும் வீட்டை விட்டு வெளியே வருவதே இல்லை. அரசாங்கத்தின் உத்தரவு அப்படி. அதனால் வீடுகளில் சிறைப்பட்டு கிடந்தார்கள். தங்கவேலுவுக்கும் ஒரு கணிசமான தொகையை கொடுத்து வீட்டிலேயே இரு. வெளியில் வந்து விடாதே! என்று அறிவுறுத்தி இருந்தார் ஜி எஸ்.

இந்த நிலையில் ஒருநாள் திடீரென்று தங்கவேலுவை ஜி.எஸ். போனில் அழைத்தார். போனில் அழைத்தவர், உடனே அழவும் தொடங்கி விட்டார். என்ன..ஏது .. என்று கேட்டாலும் பதில் சொல்ல முடியாமல் தொடர்ந்து அழுது கொண்டே இருந்தார் ஜி எஸ். சரி அழுது முடிக்கட்டும் என்று தங்கவேல் சிறிது நேரம் அமைதி காத்தார். பிறகு தான் விஷயத்தை சொன்னார் ஜி.எஸ்.

கொரோனா நோய் தொற்று காரணமாக,ஊரில் இருக்கும் அவரது 80 வயதான தாய் அரசு மருத்துவமனையில் இறந்து விட்டதாகவும், அவருக்கு இறுதிச் சடங்கு செய்ய தன்னை மட்டுமே சுகாதாரத்துறை அனுமதித்திருப்பதாகவும், உதவிக்கு வர முடியுமா? என்றும் கேட்டார் ஜி.எஸ். உடனே அதற்கு ஒப்புக்கொண்ட தங்கவேல், தனது சைக்கிளை எடுத்துக்கொண்டு ஜி.எஸ் வீட்டுக்கு விரைந்தார். அங்கு சோகத்தில் ஆழ்ந்திருந்த அவரது குடும்பத்திற்கும் ஆறுதல் கூறி விட்டு ஜி.எஸ்.ஐ மட்டும் காரில் அழைத்துக் கொண்டு நேராக இடுகாட்டிற்கு சென்றார் தங்கவேல்.

அங்கு சுகாதாரத்துறை ஊழியர்கள், முற்றிலும் மூடி வைக்கப்பட்டிருந்த தாயாரை புதைக்குழிக்கு அருகே வைத்தப்படி ஜி எஸ் வருகைக்காக காத்திருந்தார்கள்.ஜி.எஸ்ஸூம் ,தங்கவேலுவும் 300 அடி தூரத்தில் நின்றார்கள். அவர்கள் இறந்த தாயாரின் முகத்தை பார்க்க அனுமதிக்க படவில்லை.
பாவம். ஜி.எஸ்.கதறி அழுகிறார்.

"அம்மாவின் அருகில் இருந்து சடங்குகளை செய்ய ஒத்துக்கொள்வார்களா? என்று உயர் அதிகாரியிடம் நான் வேண்டுமானால் கேட்டு பார்க்கிறேன்" என்று சொல்லிவிட்டு மேற்பார்வையிட காரில் அமர்ந்திருந்த சுகாதாரத்துறை அதிகாரியிடம் சென்றார் தங்கவேல்.

நமக்கு இவனால் என்ன சகாயம் நடந்து விடப் போகிறது? என எண்ணியப்படி தங்கவேல் நடந்துச் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தார் ஜி.எஸ். அங்கு போன தங்கவேல் தனது பாக்கெட்டில் இருந்து ஏதோ ஒரு சீட்டை எடுத்து அந்த அதிகாரியிடம் காட்டினார். சிறிது நேர உரையாடலுக்குப்பிறகு ,அந்த அதிகாரி இரண்டு கவர்களை தங்கவேலிடம் வழங்கினார்.அதை வாங்கிக்கொண்டு நேராக ஜி.எஸ் அருகே வந்த தங்கவேல்" இது கொரோனா பாதுகாப்பு உடைகள். இதை அணிந்து கொண்டு நாம் அம்மாவின் அருகில் சென்று விளக்கேற்றி விட்டு வரலாம்" என்று கூறினார் .

தங்கவேலுவை கையெடுத்து கும்பிட்ட ஜி.எஸ், தங்கவேல் சொன்னபடி, அந்த உடைகளை அணிந்து கொண்டு அம்மாவின் அருகிலே சென்று விளக்கேற்றி, சிறிய சடங்கையும் செய்து முடித்த பிறகு உடல் புதைக்குழியில் வைத்து மூடப்பட்டது.

மவுனமாக இருவரும் வீட்டை நோக்கி காரில் பயணப்பட்டுக் கொண்டு இருந்தார்கள். சிறிது தூரத்திற்கு பிறகு தங்கவேலு பக்கம் திரும்பி கையெடுத்து கும்பிட்டார் ஜி.எஸ். அப்போது ஜி.எஸ். "உனக்கு மட்டும் எப்படி அந்த உடையை கொடுத்து, அம்மாவின் அருகில் சென்று சடங்குகளை செய்ய அதிகாரிகள் சம்மதித்தார்கள்? என்று கேட்டார்.

"சார் நான் 25 வயசுல டிரைவர் வேலைக்கு வந்தேன. கடந்த 30 வருஷமா அனாதை பிணங்களை அடக்கம் செய்ய என்.ஜி.ஓ நடத்திட்டு வரேன்.
அது மட்டும் அல்ல. இந்த கொரோனா பீரியட்ல மரணித்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு என்னுடைய என்.ஜி.ஓவுக்கு அரசு துறை அதிகாரிகள் அனுமதி வழங்கி இருக்காங்க" என்று மிக அடக்கமாக சொன்னார் தங்கவேல்.

ஜி.எஸ். தங்கவேலுவை ஆச்சரியத்தோடு பார்த்தார். "20 வருஷமா எனக்கு நீ டிரைவரா இருக்குற ஒரு நாள் கூட நீ இதை பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லலையே? என்று கேட்டார் ஜி.எஸ். "இது என்னுடைய கடமை சார். தெரிந்தவர்களுக்கு தெரியாதவர்களுக்கு என்னால் எது முடியுமோ அதை செய்கிறேன். அதை ஏன் உங்க கிட்ட நான் சொல்லணும்? என்று கூறியபடியே ஸ்டிரியங்கை லாவகமாக திருப்பி அவரது வீட்டு காம்பவுண்டுக்குள் காரை திருப்பினார் தங்கவேல்.

கார் வீட்டு காம்பவுண்டுக்குள் நுழைந்த வேகத்தில் ஜி.எஸ் இன் "தான்" என்கின்ற அகம்பாவம் நொறுங்கி விழுந்தது. பெருமை என்கின்ற மாய கண்ணாடி சுக்கு நூறாக சரிந்து விழுந்தது.காரை பார்க் செய்துவிட்டு விடை பெற்று, வீட்டை விட்டு சைக்கிளில் வெளியே சென்ற தங்கவேலுவை வைத்தக்கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார் ஜி.எஸ்.'' இவ்வாறு இனிகோ இருதயராஜ் கதை சொல்லியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+